அண்ணாசாலையில் மாற்றம்.. "திருப்பிவிடப்படும்" வண்டிகள்.. நாளை இதுதான் டைமிங்.. சென்னை அண்ணா சாலை பிஸி
சென்னை: பேரறிஞர் அண்ணா நினைவிடத்திற்கு, நாளைய தினம் மவுன ஊர்வலம் நடத்தப்படுவதால், சென்னையில் போக்குவரத்தில் மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 55-வது நினைவு நாளை முன்னிட்டு, நாளை பிப்ரவரி 3-ந்தேதி திமுக சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக திமுக தலைமை கழகம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு, திமுகவினருக்கு அழைப்பையும் விடுத்துள்ளது.

அறிக்கை: இதையடுத்து, போக்குவரத்து தடையின்றி செல்ல போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அறிக்கை ஒன்றையும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் உள்ளதாவது:
"03.02.2024 அன்று, சுமார் 08.00 மணியளவில், தமிழ்நாடு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் திமுக கட்சி உறுப்பினர்கள் அண்ணாசாலையில் உள்ள அறிஞர் அண்ணா சிலையிலிருந்து மெரினா கடற்கரை அருகே உள்ள அறிஞர் அண்ணா நினைவிடத்திற்கு மவுன ஊர்வலம் செல்ல உள்ளனர்.
நேப்பியர் பாலம்: எனவே மேற்படி சாலைகளில் போக்குவரத்து தடையின்றி செல்ல சில போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, எனினும் தேவைப்பட்டால் போர் நினைவிடத்தில் இருந்து நேப்பியர் பாலம் நோக்கி வரும் வாகனங்கள் கொடி மரச்சாலை வழியாகவும், காந்தி சிலையிலிருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் வாகனங்கள் கண்ணகி சிலை சந்திப்பில் இருந்து பாரதி சாலை வழியாகவும் திருப்பி விடப்படும்.
மேலும் அண்ணாசாலையில் இருந்து வாலாஜா சாலையை நோக்கி ஊர்வலம் செல்லும்போது அண்ணா சிலையிலிருந்து, பெரியார் சிலையை நோக்கி வாகனங்கள் திருப்பி விடப்படும்.
அண்ணாசாலை: மேலும் வாலாஜா சாலை, அண்ணாசாலை, டேம்ஸ் ரோடு, பிளாக்கர்ஸ் சாலை மற்றும் காமராஜர் சாலை ஆகிய இடங்களில் போக்குவரத்து மெதுவாக இருக்கும். எனவே வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தை திட்டமிட்டு இந்த சாலைகளை தவிர்த்து மாற்று பாதையில் சென்று தங்களது இலக்கை அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications