சென்னை டூ ஹரியானா.. காட்டிக்கொடுத்த சிசிடிவி.. சிக்கிய ஒரு கொள்ளையன்.. ஏடிஏம் வழக்கில் திருப்பம்
சென்னை: சென்னை எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் நூதன முறையில் கொள்ளையடித்த வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய ஹரியானா சென்றுள்ள தனிப்படை போலீசார், குற்றவாளிகளில் ஒருவரை கைது செய்துள்ளனர். மேலும் 3 பேரை தேடி வருகிறார்கள்.
Recommended Video
சென்னை ராமாபுரம் வள்ளுவர் சாலையில் எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் வங்கி மேனேஜர் முரளிபாபு 2 தினங்களுக்கு முன்பு சென்று கணக்கை சரிபார்த்திருக்கிறார். அப்போது, டெபாசிட் மெஷினில் இருந்து ரூ1.50 லட்சம் கணக்கில் வராமல் மாயமாகி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்
உடனே, அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார். அதில் கடந்த 17ம் தேதி மாலை ஏடிஎம் மையத்திற்கு வந்த 2 மர்ம நபர்களில் ஒருவன் ஹெல்மெட் அணிந்திருந்திருக்கிறார். அவர்கள் இருவரும் சேர்ந்து ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ரூ.10 ஆயிரம் வீதம் 15 முறை மொத்தம் ரூ.1.50 லட்சத்தை டெபாசிட் செய்யும் மெஷினில் இருந்து எடுத்து சென்றது பதிவாகி இருந்தது. இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தார்.
நூதன திருட்டு எதிரொலி : நாடு முழுவதும் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் டெபாசிட் இயந்திரங்களில் பணம் எடுக்க தடை
புகார்
இதேபோல் சென்னை வேளச்சேரி, விஜயநகர் எஸ்.பி.ஐ வங்கியின் ஏடிஎம்-மில் கடந்த 18 மற்றும் 19-ம் தேதி டெபாசிட் மிஷின் மற்றும் பணம் எடுக்கும் மிஷினில் 13,50,000 ரூபாய் இருக்க வேண்டிய நிலையில், 8 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்தது. நான்கு லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் மாயமாகி இருந்தது. இதை கண்டு ஷாக்கான வங்கி முதன்மை மேலாளர் தெபாசிஸ் பிரியரஞ்சன் கண்டுபிடித்து தருமாறு வேளச்சேரி போலீசாரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் வேளச்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
1.5லட்சம்
அதேபோல் தரமணி, எஸ்.ஆர்.பி.டூல்ஸ் பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ.வங்கி ஏடிஎம்-மிலும் 3 லட்சத்து 54 ஆயிரத்து 500 ரூபாய் பணம் மாயமானது. அதிர்ச்சியடைந்த வங்கி மேலாளர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது சுமார் 10 முறை 1.5 லட்சம் வரை எடுத்துள்ளனர். இது தொடர்பாகவும் போலீசில் புகார் அளித்தனர்.
இப்படி சென்னையில் கடந்த வாரம் அடுத்தடுத்து பல இடங்களில் திருடர்கள் கைவரிசை காட்டியதில் 66 லட்சம் ரூபாய் வரை திருடு போய் உள்ளது. இன்னமும் எவ்வளவு திருடி உள்ளார்கள் என்பது குறித்து அனைத்து எஸ்பிஐ வங்கி மேலாளர்களும் கணக்குகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
கேஷ் டெபாசிட் மெஷின்
இதையடுத்து கொள்ளையர்கள் கேஸ் டெபாசிட் மிஷின்களிலேயே இந்த நூதன கொள்ளையை அரங்கேற்றி உள்ளதால், அதிர்ச்சி அடைந்த எஸ்பிஐ நிர்வாகம், நாடு முழுவதும் சிடிஎம் மிஷின்களில் பணம் எடுக்க தற்காலிகமாக தடை விதித்துள்ளது. போலீசார் இந்த விவகாரத்தை தீவிரமாக விசாரிக்க தொடங்கினர். கொள்ளை கும்பல் டெல்லியில் வந்து கொள்ளையடித்ததும், பின்னர் ஹரியானாவிற்கு தப்பியதும் உறுதி செய்யப்பட்டது.
ஹரியானாவில் முகாம்
இதனால் தனிப்படை போலீசார் ஹரியானாவிற்கு விரைந்தனர். ஏடிஎம் கொள்ளை வழக்கில் தொடர்புடைய ஒருவரை கைது செய்துள்ளனர். மேலும் மூவரை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இவர்கள் சிக்கினால் எப்படி இவர்களுக்கு இந்த தொழில்நுட்ப கோளாறுகள் தெரிந்தது. சென்னைக்கு வந்து கைவரிசை காட்டியது ஏன். இவர்கள் பின்னணி என்ன என்பது தெரியவரும். இதனிடையே சென்னை எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம் கொள்ளை வழக்குகள் மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.