"சத்தியம் பண்ணுங்க பிளீஸ்!" போலீசிடம் உளறிய கொள்ளையன்.. வங்கி கொள்ளையில் இன்ஸ்பெக்டர் சிக்கிய கதை
சென்னை: அரும்பாக்கம் வங்கி கொள்ளையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் கைது செய்யப்பட்டது எப்படி என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
Recommended Video
சென்னையில் அரும்பாக்கம் 100 அடி ரோட்டில் செயல்பட்டு வந்த தனியார் வங்கியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மிகப் பெரிய வங்கி கொள்ளை அரங்கேறியது.
பட்டப் பகலில் அதுவும் தலைநகர் சென்னையில் இப்படியொரு சம்பவம் நடைபெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் விசாரணையைத் துரிதப்படுத்தினர்.
பெரிய திருப்பம்! அரும்பாக்கம் வங்கிக் கொள்ளையில் இன்ஸ்பெக்டருக்கு தொடர்பு.. 3.5 கிலோ தங்கம் மீட்பு
கொள்ளை எப்படி நடந்தது
அரும்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் வாடிக்கையாளர்கள் போல வந்த கொள்ளையர்கள் காவலாளிக்குக் குளிர்பானத்தில் மயக்க மருந்தைக் கொடுத்துள்ளனர். அதைத் தொடர்ந்து வங்கியில் ஊழியர்களைக் கத்தியைக் காட்டி மிரட்டி கழிவறையில் கட்டுப்போட்ட அவர்கள், லாக்கரை உடைத்துப் பல கோடி மதிப்பிலான தங்கத்தைக் கொள்ளை அடித்தனர். வங்கியில் இருந்து 31.7 கிலோ தங்கம் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது.
சிசிடிவி
முதற்கட்ட விசாரணையில் வங்கியில் பணிபுரிந்த ஊழியர் முருகன் என்பவரே நண்பர்களுடன் இணைந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. வங்கை கொள்ளை அடித்த பின்னர் அவர்கள் தப்பிச் செல்லும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணையைத் தொடங்கினர். இதற்காக மொத்தம் ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்தச் சூழலில் தான் நேற்று போலீஸ் ஆய்வாளர் அமல்ராஜுக்கும் இந்தச் சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
18 கிலோ தங்கம்
இந்நிலையில், அமல்ராஜை போலீசார் பிடித்தது எப்படி என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. வங்கிக் கொள்ளையில் முதலில் இரு குற்றவாளிகள் பிடிக்கப்பட்ட நிலையில் அவர்களிடம் இருந்து 18 கிலோ தங்கம் மட்டுமே மீட்கப்பட்டது. இதையடுத்து கொள்ளை போன நகைகள் குறித்த ஆவணங்களை சமர்ப்பிக்க வங்கிக்கு உத்தரவிடப்பட்டது. மறுபுறம் கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள் பாலாஜி, சந்தோஷ் ஆகியோரை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணையைத் தொடங்கினர்.
சத்தியம் வாங்கிய கொள்ளையன்
இதில் வங்கியைக் கொள்ளை அடித்த பின்னர் சந்தோஷ், பொழிச்சலூர் பகுதியிலேயே சுமார் இரண்டு மணி நேரம் சுற்றியதும் அவரது செல்போன் சிக்னல் மூலம் உறுதியானது. இதையடுத்து போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். போலீசாரை கண்டு பயந்த சந்தோஷ், "தங்கம் இருக்கும் இடத்தை சொல்கிறேன். போய் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால், சம்மந்தப்பட்ட நபரை விசாரணையில் சேர்க்கக் கூடாது" என்று கேட்டுள்ளார். மேலும், இது தொடர்பாக போலீசாரிடம் சத்தியமும் வாங்கியுள்ளார் சந்தோஷ்!
அமல்ராஜ்
அவரை நம்ப வைக்க போலீசாரும் சத்தியம் செய்துள்ளனர். அப்போது அவர் அளித்த வாக்கு மூலத்தில் தான் அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. அதாவது சத்தியம் வாங்கிய பின்பு, கொள்ளை அடித்த நகையை உறவினரான அச்சரப்பாக்கம் ஆய்வாளர் அமல்ராஜ் வீட்டில் பதுக்கி வைத்தாகக் கூறி அதிரச்சு தந்துள்ளார் சந்தோஷ். இதையடுத்து இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 3.7 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
தொடர்பு உறுதி
போலீசார் நடத்திய விசாரணையில் இந்தக் கொள்ளை சம்பவத்திற்கும் இன்ஸ்பெக்டர் அமல்ராஜிற்கும் உறுதியானது. இதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவரை போலீசார் விசாரணைக்காகச் சென்னை அழைத்துவந்தனர். இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் போலீசார் கைது செய்துவிட்டனர். கொள்ளையில் முக்கிய நபரான முருகன் உள்ளிட்டோரிடம் இருந்து மேலும் 9.2 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.