சென்னை மாநகராட்சி “ஆக்ஷன்”.. பத்திரிகையாளர் உயிர்போன பின் பறந்த பரபர உத்தரவு
சென்னை: மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தவறி விழுந்து பத்திரிகையாளர் உயிரிழந்த நிலையில், வடிகால் பள்ளத்துக்கு தடுப்பு அமைக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது.
பருவமழை காலத்தில் சென்னையில் மழைநீர் தேங்குவதை தவிர்க்க மாநகராட்சி சார்பாக மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு செய்யப்படாததால் நீண்டு கொண்டிருக்கும் கட்டுமான கம்பிகளுடன் ஆபத்தான பள்ளங்கள் ஆங்காங்கே காணப்படுகின்றன.

பத்திரிகையாளர்
அதேபோல் சென்னை ஜாஃபர் கான் பேட்டையில் உள்ள காசி திரையரங்கம் அருகே மழைநீர் வடிகால் பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்றிரவு தனியார் தொலைக்காட்சி பத்திரிகையாளர் முத்துகிருஷ்ணன் என்பவர் பணி முடித்து அந்த வழியாக வீடு திரும்பியுள்ளார்.

விபத்தில் மரணம்
ஆபத்தான முறையில் தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் அவர் விழுந்தார். அந்த பள்ளத்தில் நீட்டிக்கொண்டு இருந்த கட்டுமான கம்பிகள் முத்துகிருஷ்ணனின் உடலை துளைத்தன. படுகாயமடைந்த அவர் மீட்கப்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

முதலமைச்சர்
இந்த நிலையில் பத்திரிகையாளர் முத்துகிருஷ்ணன் மரணத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலி இரங்கல் தெரிவித்தார். "புதிய தலைமுறை தொலைக்காட்சி அலுவலக செய்தி பிரிவில் செய்தியாளராக பணியாற்றிய திரு.முத்துகிருஷ்ணன் அவர்கள் (வயது 24), நேற்று (22.10.2022) இரவு சென்னை, ஜாபர்கான்பேட்டையில் மழைநீர் வடிகால் பள்ளத்தில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து பலத்த காயமடைந்து, இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இரங்கல்
இந்த நிலையில் இன்று (23.10.2022) பிற்பகல் திரு. முத்துகிருஷ்ணன் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார் என்பதை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். முத்துகிருஷ்ணன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ஊடகத் துறை நண்பர்களுக்கும் இத்துயர்மிகு நேரத்தில் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நிவாரண உதவி
மேலும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சமும், பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதித் திட்டதின் கீழ் ரூ.3 லட்சமும், சேர்த்து உயிரிழந்த திரு.முத்துகிருஷ்ணன் அவர்களின் குடும்பத்தாருக்கு ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்." என்று அவர் அறிவித்தார்.

மாநகராட்சி உத்தரவு
பத்திரிகையாளர் முத்துகிருஷ்ணன் மரணத்துக்கு சென்னை மாநகராட்சியின் அலட்சியப்போக்கே காரணம் என்று பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் மழைநீர் வழிகால் பணிகள் நடைபெற்று வரு இடத்தில் தடுப்புகள் அமைக்க அனைத்து மண்டல அதிகாரிகளுக்கு சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. தடுப்பு அமைக்கப்பட்ட புகைப்படத்தை எடுத்து அனுப்புமாறு சென்னை மாநகராட்சி துணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications