இன்று இரவுக்குள் எல்லாம் சரியாகும்.. சென்னைக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர் செந்தில் பாலாஜி
சென்னை: மழை வெள்ளம் காரணமாக சென்னையில் நிறுத்தி வைக்கப்பட்ட மின் இணைப்புகள் அனைத்தும் இன்று இரவுக்குள் வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டதால் சென்னை மற்றும் தமிழகத்தில் மின்சார விபத்து உள்ளிட்ட எந்த பாதிப்பும் இல்லை எனவும் கூறினார்.
சென்னை பெரம்பூர் அடுத்த பெரியார் நகரில் உள்ள துணை மின் நிலையத்தை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பார்வையிட்டார்.

செந்தில் பாலாஜி பேட்டி
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், சென்னையில் உள்ள 223 துணை மின் நிலையத்திலும் மின் விநியோகம் நடைபெற்று வருகிறது. 12200 மின் நுகர்வோர்க்கு மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 7500 மின் நுகர்வோருக்கு இன்று காலை மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. 4680 மின் இணைப்பு தாரர்களுக்கு மின் இணைப்பு இன்று மாலைக்குள் வழங்கப்படும்.

புகார்கள்
44 லட்சம் மின் நுகர்வோர் சென்னையில் உள்ளனர். மின்னகம் பொறுத்த வரை 2419 புகார்கள் பெறப்பட்டு, சென்னையை பொறுத்தவரை 1748 புகார்கள் பெறப்பட்டு 606 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மின்னகத்தின் இதுவரை 4,55, 000 புகார்கள் பெறப்பட்டு 4,44,000 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டு, மீதமுள்ள 11000 புகார்கள் தீர்வு காண நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 98% புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை
பருவ மழை தொடர்ந்தாலும் சீரான மின்சார விநியோகத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. முதல்வரின் உத்தரவால் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சென்னை மற்றும் தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லை. கடந்த கால மழை காலத்தில் மின் விநியோகத்தில் வந்த புகாரை விட தற்போது விநியோகம் தொடர்பாக வந்த புகார்கள் குறைவு.

மின் நுகர்வு
மழை நீரால் சூழ்ந்துள்ள துணை மின் நிலையங்கள் கணக்கெடுக்கப்பட்டு அடுத்த ஆண்டிற்குள் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். மழை காரணமாக மின் நுகர்வு குறைந்து உள்ளது, தமிழகத்தில் 14000 மெகாவாட் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் நேற்று 11000 மெகாவாட் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. மின்விபத்துகள் எதுவும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications