சென்னையில் தீயாக பரவும் கொரோனா.. கட்டுப்பாட்டு பகுதிகள் இரு மடங்கு அதிகரிப்பு.. கோடம்பாக்கம் டாப்
சென்னை: தமிழக தலைநகர் சென்னையில் கொரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் 1,106 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது என்று
மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாகப் பரவிவருகிறது. அதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
கடந்த 10ம் தேதி முதல், தமிழகம் முழுக்க, பல்வேறு கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் இரண்டாம் அலை... இந்த அறிகுறிகள் இருக்கிறதா... அப்போ உடனடியாக பரிசோதனை செய்யுங்கள்
கட்டுப்பாட்டு பகுதிகள்
மத்திய - உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கு தடை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளதால், இது தொடரும். தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளான Containment Zones பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின் எந்தவிதமான கடைபிடிக்கப்படும் தளர்வுகளுமின்றி நடைமுறைப்படுத்தப்படும்.
விதிமுறைகள்
முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பது உள்ளிட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்றி, காய்கறி கடைகள், பல சரக்கு கடைகள் உட்பட அனைத்து கடைகளும், வணிக வளாகங்கள் (shopping malls), அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி) (big format stores) ஒரு நேரத்தில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் மட்டும் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
ரெஸ்டாரண்ட்கள்
உணவகங்கள் மற்றும் தேநீர்க் கடைகளில் உள்ள மொத்த இருக்கைகளில், 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் இரவு 11.00 மணி வரை அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும். மேலும், உணவகங்களில் இரவு 11.00 மணி வரை பார்சல் சேவை அனுமதிக்கப்படும். இவ்வாறு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள்
இந்த நிலையில்,சென்னையிலும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. எனவே கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளும் அதிகரித்துள்ளன. முன்னதாக 600ஆக இருந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தற்போது 1,106 என்ற அளவு உயர்ந்துள்ளது. அதாவது, கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகரித்துள்ளது.
கோடம்பாக்கம் டாப்
மூன்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் இருந்தால் அந்த பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக சென்னை மாநகராட்சியால் அறிவிக்கப்படுகிறது. அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 173 தெருக்களும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 146 தெருக்களும் கட்டுப்பாடுப் பகுதிகளாக அறிவிக்கப்ட்டுள்ளது. குறைந்தபட்சமாக மணலி மண்டலத்தில் 8 தெருக்கள் கட்டுப்பாட்டு மையங்களாக மாறியுள்ளன.