திமுக தொண்டரை தாக்கி அரைநிர்வாணமாக்கியதாக வழக்கு.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீன்
சென்னை: திமுக தொண்டர் நரேஷ் குமாரை தாக்கியதாக கூறப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமீனை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியது.
திமுகவை சேர்ந்தவரை தாக்கி, அரைநிர்வாணமாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், கடுமையான நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கலாம் என்று காவல்துறை தெரிவித்ததை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

உள்ளாட்சி தேர்தல்
பிப்ரவரி 19ல் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக குற்றம்சாட்டி திமுகவை சேர்ந்த நரேஷ்குமார் என்பவரை தாக்கி, அரைநிர்வாணமாக்கியதாக தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் பதிவான வழக்கில் பிப்ரவரி 20-ஆம் தேதி ஜெயக்குமார் கைது செய்யபட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

ஜெயக்குமார் ஜாமீன் மனு
இந்த வழக்கில் ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில் ஜெயக்குமார் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். புகார் அளித்தவர் தற்போது நல்ல
மனநிலையில் உள்ளதாகவும், உடலில் காயங்கள் இல்லை எனவும், கொலை முயற்சி வழக்காக பதிவு செய்தது தவறு எனவும், மருத்துவ அறிக்கையிலும் காயங்கள் இல்லை எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

அரசியல் காரணங்கள்
அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், காயமடைந்த நபர் மருத்துவமனையிலிருந்து சிகிச்சை பெற்று சென்று விட்டதாகவும் எனவே கடுமையான நிபந்தனையுடன் அவருக்கு ஜாமீன் வழங்கலாம் என்றும் தெரிவித்தார்.

திருச்சியில் தங்க உத்தரவு
இதையடுத்து திருச்சியில் தங்கி இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், அங்குள்ள கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் இரண்டு வாரத்திற்கு கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் நீதிபதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications