3-வது அலை அபாயம்: உடனடியாக இயல்பு நிலைக்கு திரும்ப முடியாது.. சென்னை உயர்நீதிமன்றம் கருத்து!
சென்னை; தமிழ்நாட்டில் பேருந்துகளை இயக்குவது குறித்தும், கோவில்களை திறப்பது குறித்தும் நீதிமன்றம் தலையிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது மாநில அரசின் முடிவு என்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. 11 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

பொதுநல வழக்கு
இந்த நிலையில் கொரோனா இரண்டாவது அலை பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, தற்போது தொற்று தாக்கம் தணிந்து வரும் நிலையில், தமிழகம் முழுவதும் பேருந்து போக்குவரத்தை மீண்டும் துவங்கக் கோரியும், கோவில்களை திறக்க உத்தரவிடக் கோரியும், மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக இரு பொது நல வழக்குகளை தாக்கல் செய்திருந்தார்.

இயல்பு நிலைக்கு திரும்ப முடியாது
இந்த வழக்குகளை தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு விசாரித்தது. இதுசம்பந்தமாக மாநில அரசு முடிவெடுக்கும் எனவும், மூன்றாவது அலை அபாயம் உள்ள நிலையில், உடனடியாக இயல்பு நிலைக்கு திரும்ப முடியாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

நீதிமன்றம் தலையிட முடியாது
ஊரடங்கு சில பகுதிகளில் தளர்த்தப்பட்டுள்ள போதும், பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகள் நீடிக்கின்றன எனவும் நீதிபதிகள் கூறினார்கள். மேலும் நிபுணர் குழுவுடன் கலந்து ஆலோசித்து கட்டுப்பாடுகளையும், தளர்வுகளையும் அரசு அறிவிக்கிறது என்பதால் அதில் தன்னிச்சையான செயல்பாடு எதுவும் இல்லை. இந்த விஷயங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது எனவும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.

வழக்கு முடிப்பு
சாதாரண மக்களின் இடர்பாறுகளை கருத்தில் கொண்டு அரசு முடிவெடுக்க வேண்டும் எனவும், வாழ்வுரிமை என்று வரும் போது, வழிபடும் உரிமை பின் இருக்கைக்கு சென்று விடும் எனவும் தெரிவித்த நீதிபதிகள் இரு வழக்குகளையும் முடித்து வைத்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications