கோல்டு வின்னர் குறித்து அவதூறு கருத்து.. ரூ7 லட்சம் இழப்பீடு செலுத்த யூடியூபருக்கு ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: கோல்டு வின்னர் எண்ணெய் குறித்து தவறான கருத்துகளை பதிவிட்ட விவகாரத்தில் காளீஸ்வரி நிறுவனத்திற்கு 7 லட்ச ரூபாயை இழப்பீடாக செலுத்த யூடியூபர் அக்சய்-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோல்ட் வின்னர் எண்ணெய் பாக்கெட்களில் உள்ள எண்ணெயின் அளவில் குறைபாடு இருப்பதாக கூறி, டி கேப் ஸ்கூப் (Di Cap Scoop) என்கிற யுடியூப் தளத்தில் அக்ஷய் என்பவர் பதிவிட்டிருந்தார். 3 லட்சத்து 35 ஆயிரம் பின்தொடர்பாளர்களை வைத்துள்ள யூடியூபரால் நிறுவனத்தின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி, கோல்ட் வின்னர் எண்ணெய்யை தயாரிக்கும் காளீஸ்வரி நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்தது.

ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கவும், அவதூறு கருத்துகளை வெளியிட தடை விதிக்கவும் கோரிக்கை வைத்திருந்தது. இந்த வழக்கு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தபோது, காளீஸ்வரி நிறுவனத்தின் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, சமையலுக்கு பயன்படுத்தப்படும் பல்வேறு வகையான எண்ணெய்களை கடந்த 30 ஆண்டுகளாக தயாரித்து வருவதாகவும், முறைகேடான வணிக நடைமுறையை கையாண்டதில்லை என்பதால் தொடர்ந்து இத்தனை ஆண்டுகளாக மக்களிடம் நன்மதிப்பை பெற்று வருவதாக தெரிவித்தார்.
கோல்டு வின்னர் எண்ணெய் பாக்கெட்டுகளை சோதனை செய்வதாக கூறிய யூடியூப் சேனல் வைத்திருந்தது சரியான அளவீடுகளை கொண்ட கோப்பைகள் கிடையாது என கூறி, ஒரு லிட்டர் பாக்கெட்களில் எடுக்கப்பட்ட சரியான அளவீடுகளை கொண்ட ஆய்வுகளை தாக்கல் செய்தார்.
மேலும் தங்கள் மீதான நற்பெயரை கெடுக்கும்வகையில் யூடியூபர் உள்நோக்கத்துடன் வீடியோ வெளியிட்டுள்ளதாகவும், இதுபோன்ற உண்மைக்கு புறம்பான கருத்துக்களை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என்றும் வாதிட்டார்.
யூடியூப் நிறுவனத்தின் தரப்பில் யாரும் ஆஜராகாததை அடுத்து, வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி மஞ்சுளா, யூடியூப் சேனல் வெளியிட்ட வீடியோவால் மனுதாரர் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு உறுதியாவதை குறிப்பிட்டு, அதற்கான இழப்பீடாக 7 லட்ச ரூபாயை காளீஸ்வரி நிறுவனத்திற்கு வழங்க வேண்டுமென டிகேப்ஸ்கூப் (DiCapScoop) சேனலின் அக்சய்-க்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications