ஆர்.டி.ஐயில் இந்தி திணிப்பு.. ஹைகோர்ட்டில் வழக்கு.."எனக்கும் இந்தி தெரியாது".. நீதிபதி நோட்டீஸ்!
சென்னை: தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்ட கேள்விக்கு இந்தியில் பதிலளித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், தனக்கும் இந்தி தெரியாது என தெரிவித்த நீதிபதி இதுகுறித்து ஒன்றிய அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
சென்னையைச்சேர்ந்த வழக்கறிஞர் எம்.ஞானசேகரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில் கூறி இருந்ததாவது:-

தகவல் அறியும் உரிமை சட்டம்
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் புதுவையில் நியமன எம்எல்ஏக்கள் தொடர்பான தகவல்களை ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்திடம் கேட்டிருந்தேன். ஆனால் ஒன்றிய உள்துறை அமைச்சகம், தான் அனுப்பிய கேள்வி மனுவை திருப்பி அனுப்பியதுடன், இந்தியில் எனக்கு பதில் கூறியது.

ரத்து செய்ய வேண்டும்
எனக்கு இந்தி மொழி தெரியாது. தமிழ் மற்றும் ஆங்கில மொழிகள் மட்டுமே எனக்கு தெரியும். எனவே இந்தியில் வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும். எனக்கு தெரிந்த இந்தி மொழியில் மட்டுமே பதில் அளிக்க ஒன்றிய உள்துறை உத்தரவிட வேண்டும். இவ்வாறு தான் தாக்கல் செய்திருந்த மனுவில் எம்.ஞானசேகரன் கூறி இருந்தார்.

எனக்கும் இந்தி தெரியாது
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு ஆவணங்களை பார்த்த நீதிபதி வைத்தியநாதன் எனக்கும் இந்தி தெரியாது என்று தெரிவித்தார். இந்த வழக்கு தொடர்பாக ஒன்றிய அரசு வருகிற 16-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

புரிந்து கொள்ள முடியாது
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பல்வேறு துறைகள் தொடர்பான தகவல்கள், திட்டங்கள் தொடர்பான தகவல்கள் பெறப்படுகின்றன. இவ்வாறு தகவல் அறியும் உரிமை சட்டத்தில் ஆங்கிலத்திலேயே கேள்விகளை கேட்டாலும் இந்தியில் மட்டுமே பதில் தெரிவிப்பதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்படுகிறது. இந்தி தெரியாதவர்களால் அந்த பதிலை புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி கேட்பவர்களுக்கு அந்தந்த மாநில பிராந்திய மொழிகள், ஆங்கிலத்தில் பதில் தெரிவிக்க வேண்டும் என்று தி.மு.க உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications