"ரூ. 1600 கோடி சொத்து!" சசிகலா பினாமி நிறுவனங்கள் மீதான நடவடிக்கை செல்லும்! சென்னை ஐகோர்ட் தீர்ப்பு
சென்னை: பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட கரன்சி நோட்டுக்களைப் பயன்படுத்தி சொத்துக்களை வாங்கிய விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
நாட்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு வி.கே.சசிகலா வீட்டில் 2017 ம் ஆண்டு வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.
அதன் தொடர்ச்சியாக, வி.எஸ்.ஜே.தினகரனின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்திய வருமான வரித் துறையினர், பல முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர்.

1,600 கோடி ருபாய்
இந்த சோதனையில் 1,600 கோடி ருபாய் மதிப்பிலான மதிப்பிழப்பு செய்யப்பட்ட கரன்சிகள் மூலம், பல்வேறு சொத்துக்களை வாங்க சசிகலாவுக்கு பினாமியாகச் செயல்பட்டுள்ளதாகக் கூறி கங்கா பவுண்டேஷன், வி.எஸ்.ஜே தினகரன், ஸ்பெக்ட்ரம் மால் உரிமையாளர்கள், பாலாஜி, பழைய மாமல்லபுரம் சாலையில் மார்க் ஸ்கொயர் ஐ.டி. பார்க், புதுச்சேரி ஓசன் ஸ்பிரே உள்ளிட்ட நிறுவனங்களின் சொத்துக்களை முடக்கி வருமான வரித்துறையினர் பினாமி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தனர்.

தனி நீதிபதி
இதை எதிர்த்து தினகரன், பாலாஜி, கங்கா பவுண்டேஷன் உள்பட 14 பேர் தரப்பில் வழக்குகள் தொடர்ந்தனர். இந்த வழக்குகளை, விசாரித்த தனி நீதிபதி அனிதா சுமந்த் வருமான வரித்துறை நடவடிக்கையில் தலையிட மறுத்து அனைத்து மனுகளையும தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து எஸ்.ஜே தினகரன், ஸ்பெக்ட்ரம் மால் உரிமையாளர்கள் பாலாஜி, உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்.

மேல் முறையீடு
இந்த மேல் முறையீட்டு வழக்குகள் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ. சத்திய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், மதிப்பிழப்பு செய்யப்பட்ட கரன்சிகளை பெற்று இடத்தை விற்பனை செய்ததற்காகத் தவறு எனவும் ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இடத்தை விற்பனை செய்துள்ளதால் தங்களுக்கு எதிராகப் பினாமி சட்டத்தைப் பயன்படுத்த முடியாது எனவே தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

வருமான வரித்துறை
வருமான வரித்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கடும் நிதி நெருக்கடி காரணமாக ஸ்பெக்ட்ரம் மாலை விற்பனை செய்ய உரிமையாளர்கள் முடிவு செய்ததாகவும், அதற்காக அவர்கள் ரியல் எஸ்டேட் ஏஜெண்ட் மூலம் சசிகலாவின் வழக்கறிஞரை அணுகியதாகவும், இந்த சந்திப்பு பண மதிப்பிழப்புக்கு முன் நடந்ததாகவும், ஸ்பெக்ட்ரம் மாலுக்கான தொகையை உரிமையாளர்களுக்கு வழங்க மேற்கொண்ட நடைமுறை குறிப்பிட்ட வாதிடப்பட்டது.

தள்ளுபடி
மேலும், வாங்குபவரின் பெயர் இல்லாமல் ஒப்பந்தங்கள் மேற்கொண்டது போன்ற நடவடிக்கைகள் காரணமாக, பினாமி சட்டத்தைப் பயன்படுத்தியது சரியே எனவும் வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களைக் கேட்ட, நீதிபதிகள், மனுதாரர்களுக்கு போதுமான வாய்ப்பை அளித்து தான் வருமானவரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதனைத் தனி நீதிபதியும் உறுதி செய்துள்ளார். எனவே தனி நீதிபதியின் உத்தரவில் தலையிட போதுமான காரணங்கள் இல்லை எனவே மேல்முறையீடு மனுக்களைத் தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications