சுழற்றியடித்த சுனாமி, புயலால் மாண்ட மரங்கள், வற்றிய பூமி.. காற்றிலும் வந்த பேரிடர்.. சென்னை மீளும்!
சென்னை: கடந்த ஐந்து வருடங்களாக ஒவ்வொரு வருடமும் ஏதேனும் மிகப்பெரிய இயற்கை சீற்றத்தை சந்தித்து மீண்டு வருகிறது சென்னை. சரித்திரத்திலும் இல்லாத ஒரு பாதிப்பை கொரோனாவால் சென்னை இந்த ஆண்டு சந்தித்துள்ளது. மற்ற இயற்கை சீற்றத்தை காட்டிலும் இதன் பாதிப்பு மிகமிக கொடுமையாக உள்ளது. எப்போது மீளும் என்பதும் தெரியாத நிலை உள்ளது.
Recommended Video
2004ல் சுனாமியில் சிக்கி பேரழிவை சந்தித்த சென்னை, 2015ல் தொடங்கி பெருமழை , வர்தா புயல், கடும் தண்ணீர் பஞ்சம், என ஒவ்வொரு வருடமும் தற்போது இயற்கை சீற்றத்தால் பேராபத்தை சந்தித்து மீண்டு வந்துளளது சென்னை. ஒவ்வொரு முறை ஏற்பட்ட பாதிப்பிலும் சென்னை மீண்டு வர காரணம் மக்களிடம் இருந்த மனித நேயம் தான்.
நாடு சுதந்திரம் அடைந்த தமிழகத்தில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்த நகரம் என்றால் சென்னை தான். சென்னைக்கு பிழைக்க வந்தால் பெரிய ஆளாக வரலாம் என்ற நம்பிக்கையை சென்னை உருவாக்கியது. இதனால் மிகச்சிறியதாக இருந்த சென்னை மக்கள் தொகை, ஒவ்வொரு ஆண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. சென்னையில் இன்று சுமார் 1.5 கோடி மக்கள் வசிக்கலாம் என்பது பரவலான கணிப்பு ஆகும். சென்னை மாநகரத்திற்குள் மட்டும் கடந்த 2011ம் ஆண்டு கணிப்பு படி 70.90 லட்சமாக இருந்தது. இப்போது உள்ள விரிவாக்கப்பட்ட சென்னை மக்கள் தொகை இதைவிட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கவே வாய்ப்பு உள்ளது.

சென்னை மாறிவிட்டது
சென்னையில் இந்த அளவிற்கு மக்கள் குவிய காரணம். மொத்த தொழில்களும், அரசு அலுவலகங்களும் ஓரிடத்தில் குவிக்கப்பட்டது. ஒரு காலத்தில் மக்கள் வாழ தகுந்த சிறப்பான நகரமாக இருந்த சென்னை காலப்போக்கில் சுற்றுச்சூழல் பாதிப்பு, மிக கடுமையான வீட்டு வாடகை, அதிகப்படியான செலவு போன்றவற்றால் சாமானியர்கள் வாழத்தகுதியற்ற நகரமாக மாற ஆரம்பித்தது.

பெருமழை பாடம்
இது ஒருபுறம் எனில் இயற்கை சீற்றங்களும் சென்னையை அவ்வப்போது கடுயைமாக தாக்க ஆரம்பித்தன. இதன் பாதிப்புகள் ஒவ்வொன்றும் வார்த்தைகளால் சொல்ல முடியாது. 2015ல் ஏற்பட்ட மிகப்பெரிய மழை, மற்றும் அதனை தொடர்ந்து அடையாறில் ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ளத்தால் பல்லாயிரம் மக்கள் வீடுகளில் வசிக்க முடியாமல், மின்சாரம் இன்றி, ஏடிஎம்கள் இன்றி, தொலைப்பேசிகள் இன்றி, ஏன் இன்றைய நவீனங்கள் எதுவும் இன்றி ஒரு வாரம் கடுமையாக தவித்தனர். காசு இருந்தும் உணவுக்கு கூட வழியில்லாமல் தவித்தனர். மேலும் ஏராளமானோர் வெள்ளத்தில் சிக்கி உயிரிந்தனர்.

மரணித்த மரங்கள்
2016ல் வர்தா புயல் வந்தது, அந்த புயலால் சென்னை நகரில் இருந்து ஆயிரக்கணக்கான மரங்கள் மரணித்தன. பேயாட்டம் காட்டிய சூறாவளி காற்றால் தூக்கி எறியப்பட்டன மின் கம்பங்கள். மொத்த நகரமும் இரு நாள் இருளில் கிடந்தது. சென்னையின் பல பகுதிகளில் மின்சாரம் இயல்பு நிலைக்கு வர வாரங்கள் பிடித்தது. வர்தா புயலால் 100 கோடி ரூபாய் அளவிற்கு சென்னையில் சேதம் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. அதில் இருந்தும் சென்னை மீண்டது. இந்த இரு பெரும்பாதிப்பில் இருந்து மீண்டு வர மனித நேயம் முக்கிய காரணம் ஆகும். மக்கள் ஒருவருக்கு ஒருவர் உதவி தேற்றி மீள வைத்தனர்

மரணித்த மரங்கள்
2018ல் கஜா புயல் தாக்கியது. இதுவும் மிகப்பெரிய பாதிப்பை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஏற்படுத்தியது. சென்னையிலும், நாகை, புதுக்கோட்டை, கடலூர் , திருவாரூர் போன்ற மாவட்டங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. கஜா புயலாலும் ஏராளமான மரங்கள், மின் கம்பங்கள் வேரோடுபிடுங்க கொண்டன.அத்துடன் பெரும் மழையும் சென்னையில்பாதிப்பை அதிகரித்தது. 2019ல் மிகப்பெரிய தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. சுமார் 6 மாதங்கள் சென்னைக்கு மழை எட்டி கூட பார்க்கவில்லை. கடுமையான தண்ணீர் பஞ்சத்தால் மக்கள் தாகத்தோடு தவித்தனர். நிலத்திற்கு அடியும் தண்ணீர் வற்றிப்போனதால் என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நின்றனர்.

தொற்று நோயாளிகள்
2020ல் மேலே சொன்ன எல்லா பிரச்னைக்கும் மேலான ஒரு பாதிப்பை கொரோனாவால் காற்றின் வழியாக சென்னை சந்தித்துள்ளது. சென்னை அது உருவான சுமார் 200 ஆண்டுகால சரித்திரத்தில் முதல்முறையாக 3 மாதங்களை கடந்து போக்குவரத்து இல்லாமல் செயல்படுகிறது. மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளாரகள். தினமும் 1500 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள். 33,244 பேர் இதுவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மனித நேயம் வேண்டும்
மக்கள் வீடுகளுக்கு வாடகை கொடுக்க முடியாமல் 4 மாதங்களாக தவித்து வருகிறார்கள். வேலைக்கு செல்லாமல் உணவுக்கு கூட வழியில்லாமல் தவிக்கிறார்கள். அரசு தரும் இலவச அரிசியும், பருப்பும் தான் பலரது உயிரை காப்பாற்றி இருக்கிறது. கொரோனா ஒரு பக்கம் என்றால் பசி, வறுமை , வேலையின்மை போன்றவை மறுபக்கம் சென்னையை கொடூரமாக தாக்கி உள்ளது. வாழ வழியில்லாமல் தவிக்கும் மக்கள் இந்த பிரச்சைகளில் இருந்து மீண்டு வர மனித நேயமே இப்போது மிக முக்கியமான தேவையாகும்.

இயற்கை சொல்வது என்ன
சமூக இடைவெளியை பின்பற்றி நடப்பது, அரசு சொல்வது போல் அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுவது, வீட்டை விட்டு தேவையின்றி செல்லாமல் இருப்பது இதுதான் சென்னை மக்கள் செய்ய வேண்டிய முக்கிய செயலாக இருக்க வேண்டும். பணம், பொருள் உள்ளவர்கள் மனித நேயத்தோடு உதவிகளை இல்லாதவர்களுக்கு செய்து அவர்களை காப்பாற்றுவதுமே பழையபடி சென்னை மீண்டு வர உதவும். சென்னை மக்கள் எத்தனையோ பிரச்னைகளை மனித நேயத்தால் வென்றவர்கள் என்பதால் இதையும் வெல்வார்கள் என்று நம்புவோம். ஒவ்வொரு இயற்கை சீற்றமும் காற்று தரும் ஒரே பாடம் மனித நேயம் மட்டும். வேறு எதுவும் இங்கு தேவையில்லை என்பதே இயற்கை சொல்லி வரும் பாடம்.












Click it and Unblock the Notifications