மூளைச் சாவடைந்த ஹார்ட்வேர் நிறுவன ஊழியர்.. பலருக்கு மறுவாழ்வு தந்த உறுப்பு தானம்
சென்னை: சென்னை சவீதா மருத்துவமனையில் மூளைச் சாவைச் சந்தித்த ஹார்ட்வேர் நிறுவன ஊழியரின் உடல் உறுப்புகள் மூலம் பலருக்கு புது வாழ்வு கிடைத்துள்ளது.
ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த 42 வயதுடைய ஹார்ட்வேர் கடையில் ஊழியர் ஒருவர் சமீபத்தில் சாலை விபத்தில் படுகாயமடைந்தார். இவரது தலையில் காயமேற்பட்டது. அளவுக்கு அதிகமான ரத்தப் போக்குடன் மூளை செயல்பாடு பிறழ்ந்த நிலையில் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கிட்டத்தட்ட 10 நாள்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் இறுதியில் அவர் மூளைச் சாவு அடைந்தது தெரியவந்தது. உடனே அவரது குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தி அவரது உடல் உறுப்புகளை தானமாக அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. இவரிடமிருந்து பெறப்பட்ட உடல் உறுப்புகள் பல நோயாளிகளுக்கு புதிய வாழ்வை அளித்துள்ளன.
இதுகுறித்து சவீதா குழும மையங்களின் வேந்தர், டாக்டர் என்.எம். வீரய்யன் கூறியதாவது: விபத்தில் காயமடைந்த நோயாளி மூளைச் சாவு அடைந்த நிலையில் அவரது குடும்பத்தினருடன் எங்கள் மருத்துவர்கள் பேசி உறுப்பு தானம் அளிப்பதன் மூலம் பல உயிர்களைக் காக்க முடியும் என்று உணர்த்தினர். இதை ஏற்றுக் கொண்ட அவரது உறவினர்கள் உறுப்புகளை தானமாக அளிக்க முன்வந்தனர். அவ்விதம் உறுப்பகளை தானமளித்த குடும்பத்தினரை கௌரவிக்க முடிவு செய்து அதற்கு இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது,'' என்றார்.
சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் சவீதா ராஜேஷ் கூறுகையில், மருத்துவமனை உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை உருவாக்க ஏற்படுத்தப்பட்ட கோல் - கிஃப்ட் ஆப் எ லைப் பவுண்டேஷனின் முயற்சி குறித்தும், உடல் உறுப்பு தானத்தின் அவசியம் குறித்தும் விளக்கினார். முதல் கட்டமாக உறுப்பு தானம் குறித்து மக்களுக்கு கல்வியறிவு ஏற்படுத்துவது உள்ளிட்ட விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. மருத்துவமனை ஊழியர்கள் அனைவருக்கும் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதற்கு மிகச் சிறப்பான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
மருத்துவமனை நிர்வாகம் உறுப்பு தானம் அளித்தவரின் குடும்பத்தினரை அழைத்து அவர்களையும் இந்த நிகழ்ச்சியில் கௌரவித்தது. நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் அனைவரும் உறுப்பு தானம் அளித்ததன் மூலம் சாவின் விளிம்பில் போராடிய பல நோயாளிகளுக்கு புதிய வாழ்வு அளித்துள்ளதை உணர்ந்து அவரது செயலை மதித்து பாராட்டினர்.