அம்மா உணவகம் சீர்கேடு.. கணக்கெடுப்பு நடக்குது.. 7 நாளில் டிஸ்மிஸ்.. சென்னை மேயர் பிரியா எச்சரிக்கை
சென்னை: அம்மா உணவகங்களில் சீர்கேடு நடப்பதாக பல கவுன்சிலர்கள் புகார் தெரிவித்துள்ளதாகவும், சீர்கேட்டிற்கு வழிவகுக்கும் யாராக இருந்தாலும் பணியில் இருந்து ஏழு நாட்களில் நீக்கப்படுவார்கள் என்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா எச்சரித்துள்ளார்.
பெருநகர சென்னை மாநகராட்சியின் ஜூலை மாதத்துக்கான மாதாந்திர மன்ற கூட்டம், ரிப்பன் மாளிகையில் வெள்ளிக்கிழமை நடந்தது.
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில், துணை மேயர் மகேஷ் குமார், கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் இந்த கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து உறுப்பினர்கள் பேசினார்கள். அதற்கு பதிலும் அளிக்கப்பட்டது. குறிப்பாக மேயர், துணை மேயர், கவுன்சிலர்களுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்கும் தமிழக அரசின் அரசாணைக்கு நன்றி தெரிவித்து உறுப்பினர்கள் பேசினார்கள்.
கேள்வி நேரத்தின் போது பல்வேறு உறுப்பினர்களின் கேள்விக்கு சென்னை மேயர் பிரியா பதில் அளித்து பேசினார். அதில் சில கேள்வி மற்றும் பதில்களை இப்போது பார்ப்போம்.
142வது வார்டு திமுக கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி பேசும் போது, சைதாப்பேட்டையில் உள்ள காய்கறி மார்க்கெட்டை மறுகட்டுமானத்துக்கு திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் ஆனால் பல மாதம் ஆகியும் இதுவரை பணிகள் அங்கு நடக்கவில்லை. சைதாப்பேட்டையில் காய்கறி மார்க்கெட் மீண்டும் கட்டப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து, சென்னை மேயர் பிரியா பேசுகையில், சென்னை சைதாப்பேட்டையில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் 55 கடைகள் இயங்கி வருகிறது. தற்போது காய்கறி அங்காடி 161 கடைகளுடன் நவீன முறையில் தரம் உயர்த்தி கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு திட்டமதிப்பீடு, வரைபடம் உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்துள்ளது. மீண்டும் காய்கறி அங்காடிகள் கட்டுவதற்கு ரூ.25 கோடி செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு தமிழக அரசிடம் நிர்வாக ரீதியாக அனுமதி பெறவேண்டும். அதன்பிறகு டெண்டர் விடப்பட்டு அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
38 ஆவது வார்டு திமுக கவுன்சிலர் கணேசன் பேசுகையில், சென்னையில் 200 வார்டுகளில் நகர்ப்புற நலவாழ்வு மையம் திறக்கப்பட்டிருக்கிறது. இங்கு நர்சுகள், உதவி பணியாளர்கள், ஆய்வாளர்கள், ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை. எனவே அங்கு காலியாக உள்ள பணியிடத்தை நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதற்கு சென்னை மேயர் பிரியா பதில் அளித்து பேசுகையில், மண்டலம் 4-க்கு உட்பட்ட 15 வார்டுகளில் 12 டாக்டர்கள், 15 செவிலியர்கள், 14 உதவி பணியாளர்கள் பணியில் இருக்கிறார்கள்.இதேபோல, காலியாக உள்ள மற்ற நகர்ப்புற நலவாழ்வு மையங்களுக்கு டாக்டர்கள், நர்சுகள், ஆய்வாளர்களின் காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.

சென்னை மாநகராட்சி 12வது வார்டு திமுக கவுன்சிலர் பாரதி பேசுகையில், அம்மா உணவகங்கள் தொடங்கி இவ்வளவு நாட்கள் ஆகியும் தலைவர்கள், துணைத்தலைவர்கள், உறுப்பினர்கள் என யாரும் இடமாற்றம் செய்யப்படவில்லை. இதனால், நிறைய சீர்கேடுகள் நடந்து வருகிறது என்று குற்றம்சாட்டினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, பல கவுன்சிலர்கள் அம்மா உணவகங்களில் சீர்கேடு நடப்பதாக குற்றம்சாட்டி உள்ளார்கள். எனவே, சீர்கேட்டிற்கு காரணமாக இருப்பவர்கள் யாராக இருந்தாலும் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள். சீர்கேட்டில் ஈடுபடும் ஊழியர்களின் விவரங்களை கணக்கெடுக்க உத்தரவிட்டுள்ளோம். 7 நாட்களுக்குள் அவர்களை பணி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.












Click it and Unblock the Notifications