பஸ் டே, ரூட் தல.. பொதுமக்களுக்கு தொந்தரவு கொடுத்தால் கடுமையான நடவடிக்கை - கமிஷனர் எச்சரிக்கை!
சென்னை : பஸ் டே என்ற பெயரில் சென்னையில் அட்டகாசம் செய்யும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் சென்னை காவல் ஆணையர்.
கல்லூரிக்கு தினசரி வந்து செல்லும் பேருந்து மற்றும் ரயில் வழித்தடங்களில் ரூட் தல என்ற பெயரில் வன்முறை மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் சம்பவங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.
மாணவர்கள் வன்முறையில் ஈடுபடுவதைத் தவிர்க்கும் வகையில் மாணவர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தவும் சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

பஸ் டே
சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் 'பஸ் டே' கொண்டாட்டம் என்ற பெயரில் அட்டகாசம் செய்வதும், இதனால் அசம்பாவிதங்கள், பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது. பொதுமக்களுக்கு ஊறு விளைவிக்கும் மாணவர்களின் பஸ் டே, ரூட் தல கொண்டாட்டங்களைத் தடுக்க போலீசார் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்தாலும், மாணவர்களின் செயல் தொடர்ந்து வருகிறது.

சமீபத்தில் கூட
சமீபத்தில், சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பஸ் டே கொண்டாட இருப்பதாக தகவல் வெளியான நிலையில் பஸ் டே கொண்டாடக்கூடாது என காவல்துறை தடை விதித்திருந்தது. போலீசார் விதித்த தடையையும் மீறி 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாங்காட்டில் இருந்து பாடி செல்லும் மாநகர பேருந்தில் ஏறி பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படுத்தியதோடு போக்குவரத்து நெரிசலுக்கும் வழிவகுத்தனர்.

சென்னை போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
இந்நிலையில் 'ரூட் தல' மற்றும் 'பஸ் டே' ஆகிய பெயர்களில் வன்முறையில் ஈடுபடும் மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடும் கல்லூரி மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிசிடிவி கேமரா
இது குறித்து சென்னை காவல் ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தற்போது அனைத்து கல்லூரிகளும் திறந்துள்ள நிலையில், கல்லூரிகளுக்கு தகுந்த காவல்துறை பாதுகாப்புகள் அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், கல்லூரி மாணவர்கள் செல்லும் முக்கிய பேருந்து மற்றும் ரயில் வழித்தடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், வன்முறை அல்லது அடிதடி போன்ற சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

சாகசம் செய்யும் மாணவர்கள்
ஆகவே, ரூட் தல என்ற பெயரில் வன்முறை, மோதல் சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்கள், பஸ் டே என்ற பெயரில் பொதுமக்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்கள், பேருந்து மற்றும் ரயில்களில் சாகசம் என்ற பெயரில் படிகளில் தொங்கியபடியும், பேருந்து மேற்கூரைகளின் மீது ஏறி பயணம் செய்யும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications