தி.நகரில் ரெய்டுக்கு போன போலீஸ்.. வீட்டில் குவியல் குவியலாக ஆயுதம்.. பாய்ந்தது வழக்கு
சென்னை : சென்னை தியாகராயநகர் பகுதியில் வீட்டில் உரிமம் இல்லாமல் வைத்திருந்த 150 டம்மி துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஆயுத தடை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை கோயம்பேட்டில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஸ்கூட்டியில் வந்த நபரிடம் முன் 2 ஏ.கே 47 ரக டம்மித் துப்பாக்கிகள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
அது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் சூர்யாவின் "எதற்கும் துணிந்தவன்" சினிமா படப்பிடிப்புக்காக கொண்டு செல்லப்பட்டது என்பது தெரியவந்தது.

ரெய்டு
துப்பாக்கியை விக்டர் என்பவரிடம் இருந்து கைப்பற்றிய போலீசார் அவர் கொடுத்த தகவலின் பேரில் சென்னை மாம்பலம் வைத்தியராமன் தெருவில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தினர். அங்கிருந்து தான் துப்பாக்கிகளை இவர்கள் வாடகைக்குப் பெற்றது தெரியவந்தது.

டம்மி துப்பாக்கி
மாம்பலம் காவல் ஆய்வாளர் சுரேஷ் குமார் தலைமையிலான போலீசார் அந்த வீட்டை சோதனை நடத்தினர். அங்கு வெவ்வேறு ரக 150 டம்மி துப்பாக்கிகள் இருப்பதை கண்டுபிடித்தனர். பின்னர் போலீசாரின் விசாரணையில் வீட்டின் உரிமையாளரான செல்வராஜ் கடந்த சில ஆண்டுகளாக கே.எஸ்.ஆர் சினி ஆக்ஷன் & ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் என்ற பெயரில் அங்கு நிறுவனம் நடத்தி வருவதும் அதன் மூலம் சினிமா படங்களின் பயன்பாட்டுக்கு டம்மி துப்பாக்கிகளை வாடகைக்கு விட்டு வருவதும் தெரிய வந்தது.

உரிமம் இல்லை
மேலும், செல்வராஜ் டம்மி துப்பாக்கிகளை வாடகைக்கு விட்டுவரும் தொழில் செய்து வந்தாலும் அவர் அதற்கான முறையான உரிமத்தை பெறவில்லை என்பதும் பதிவு செய்த உரிமமும் முறையாக அவர் ஆவணங்களை (Replica Arms Rights) சமர்பிக்காததால் ரத்து செய்யப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது.

ஆயுத தடை சட்டம்
இதனையடுத்து 150 டம்மி துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்த போலீசார் படப்பிடிப்பிற்காக வெளியூரிலுள்ள நிறுவன உரிமையாளரான செல்வராஜுக்கு விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளனர். மேலும், முறையான உரிமம் இல்லாமல் டம்மி துப்பாக்கிகளை வைத்து தொழில் செய்த செல்வராஜ் மீது மாம்பலம் போலீசார் 25 1B ஆயுத தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications