திடீரென கிளம்பிய 'மணல் புயல்..' கும் இருட்டு.. திகில் கிளப்பிய பட்டினப்பாக்கம்.. மக்கள் ஓட்டம்
சென்னை: காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையை நெருங்கும் நிலையில் பட்டினப்பாக்கம் கடற்கரையில் காற்றுடன் மணலும் சேர்ந்து கடற்கரையை நோக்கி வீசப்பட்டது. இதனால் கடற்கரை பகுதிகள் இருள் சூழ்ந்தது போல் காட்சியளிக்கின்றன.
கடல் பரப்பில் இருக்கக்கூடிய மணல் தரை பரப்பை நோக்கி மிக வேகமாக பறந்து வந்தது. எனவே அந்த இடத்தில் புழுதிப்புயல் அல்லது மணல் புயல் என்று சொல்லும் அளவுக்கு காற்றில் மணல் அடர்த்தி காணப்பட்டது.
சாலைகளில் சென்றவர்களால் எதிரே வரும் வாகனங்களை மிகவும் உன்னிப்பாக கவனித்து தான் அறிந்துகொள்ள முடியும் அளவுக்கு நிலைமை போனது.

நிலைமை மோசம்
ஏற்கனவே மழை காரணமாக சூரிய ஒளி தென்படாத நிலையில், இதுபோன்று மணல் காற்று வீசியதன் காரணமாக எதிரே வருபவரை பார்க்க முடியாத அளவுக்கு நிலைமை மோசமானது. நேரம் செல்லச்செல்ல கரையில் அலையின் சீற்றம் அதிகரித்தது. இதனால் கடற்கரையோரம் நிறுத்தப்பட்டிருந்த படகுகளை ஓரமாக தள்ளிக்கொண்டு நிறுத்தினார்கள் மீனவர்கள்.

புழுதி புயல்
மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதன் காரணமாகத்தான் இவ்வாறு மணல் கிளம்பி அந்த பகுதிகளில் புழுதிப்புயல் போல காணப்பட்டது என்கிறார்கள்.

மெரினாவில் கூட்டம்
இப்படியெல்லாம் நிலைமை மோசமாகும் என்பதை கணித்துதான், 24 மணி நேரத்திற்கு சென்னை மக்கள் அனாவசியமாக வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அரசு கேட்டுக் கொண்டிருந்தது. ஆனால் அதையும் மீறி மெரினா கடற்கரையில் கூட்டம் கூட்டமாக மக்கள் கூடியிருந்தார்கள்.

மக்கள் ஓட்டம்
அரசு எச்சரித்தும் ஏன் வந்தீர்கள் என்று கேட்டபோது, "ஜாலிக்காக இங்கே வந்தோம்" என்று அவர்கள் தெரிவித்தனர். ஆனால் பட்டினப்பாக்கம் கடற்கரையில் வீசி எறிந்த மணல் புயலை பார்த்ததும், அங்கே காற்றை ஜாலியாக பார்வையிட வந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். அதையும் மீறி நின்று கொண்டிருந்தவர்கள் கண்கள், மூக்கு உள்ளிட்டவற்றுக்குள் மணல் சென்ற காரணத்தால் அவர்கள் பெரும் தொல்லைக்கு உள்ளாகினர்.












Click it and Unblock the Notifications