எடப்பாடி பழனிசாமியை சீண்டும் ஸ்டாலின்.. 2 வார்த்தையில் ஈபிஎஸ் தரப்பு சொல்லும் 2 விஷயங்களுக்கு செக்!
சென்னை : எடப்பாடி பழனிசாமி தரப்பினர், ஒருங்கிணைப்பாளர் பதவியே காலாவதியாகி விட்டதாகக் கூறி வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வத்தை 'ஒருங்கிணைப்பாளர்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஓ.பி.எஸ்ஸுக்கு திமுக உறுதுணையாக இருந்து வருவதாக ஈபிஎஸ் தரப்பினர் குற்றம்சாட்டும் நிலையில், அவர்களை சீண்டும் வகையில் ஸ்டாலின் ஓபிஎஸ்ஸை ஒருங்கிணைப்பாளர் எனக் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்ட நிலையில், அவர் விரைந்து நலம்பெற வாழ்த்தினார் ஓ.பன்னீர்செல்வம். இந்நிலையில், இன்று ஓ.பன்னீர்செல்வத்துக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அவரும் விரைந்து நலம்பெற வாழ்த்தியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் விரைந்து நலம் பெற முதல்வர் மு.க.ஸ்டாலின் விருப்பம் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், "கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் விரைந்து முழுமையாக நலம்பெற விழைகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

திமுக - ஓபிஎஸ்
அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வத்துக்கு திமுக அரசு உதவி செய்து வருவதாக எடப்பாடி பழனிசாமியும், அவரது ஆதரவாளர்களும் வெளிப்படையாகவே குற்றம்சாட்டி வருகின்றனர். ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் முதல்வர் ஸ்டாலினை சந்தித்துவிட்டு, திமுக அரசைப் பாராட்டியது, கடந்த ஆண்டு ஆளுநர் வழங்கிய தேநீர் விருந்தில், ஸ்டாலினுடன் ஓபிஎஸ் பங்கேற்றது போன்றவற்றைக் குறிப்பிட்டு ஈபிஎஸ் தரப்பினர் திமுகவையும் ஓபிஎஸ்ஸையும் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

பதிலடி
ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகத்தில் புகுந்து, சீல் வைக்க காரணமாக இருந்ததற்கும் திமுகவின் திட்டமே காரணம் என ஈபிஎஸ் தரப்பினர் விமர்சித்தனர். ஓ.பன்னீர்செல்வம், திமுகவுடன் தன்னை இணைத்து கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எதிர்வினை ஆற்றவில்லை. ஆனால், திமுக தரப்பில் இருந்து தொடர்ச்சியாக ஆர்.எஸ்.பாரதி, டி.ஆர்.பாலு போன்றோர் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால், எடப்பாடி தரப்புக்கும் திமுகவுக்கும் இடையே கடுமையான கருத்து மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன.
Recommended Video

ஒருங்கிணைப்பாளர் பதவி
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் எனும் பதவி காலாவாதி ஆகிவிட்டதாகக் கூறி வரும் எடப்பாடி பழனிசாமி தரப்பினர், ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை மொத்தமாக நீக்கி, பொதுச் செயலாளர், துணை பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட பதவிகளைக் கொண்டு வந்துள்ளனர்.ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டுள்ளதாகவும் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

ஸ்டாலின் சீண்டல்
ஆனால், தன்னை நீக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு கிடையாது என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். மேலும், ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதி ஆகவில்லை என்றும், எடப்பாடி கொண்டு வந்த திருத்தங்கள் செல்லாது என்றும் கூறி வருகிறார். இந்நிலையில், 'அதிமுக ஒருங்கிணைப்பாளர்' எனக் குறிப்பிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்வீட் அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எடப்பாடிக்கு எதிராக
ஓபிஎஸ் அதிமுகவில் இருந்தே நீக்கப்பட்டுவிட்டதாகவும், ஒருங்கிணைப்பாளர் பதவியே இல்லை என்றும் இரண்டு விஷயங்களை ஈபிஎஸ் கூறும் நிலையில், 'அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்' எனக் குறிப்பிட்டு ஒரே சொற்றொடரில் எடப்பாடி பழனிசாமியின் 2 கருத்துகளுக்கு எதிராகவும் பேசி, எடப்பாடி பழனிசாமி தரப்பை சீண்டியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications