ஓபிஎஸ்-ன் தர்மயுத்தம் 2.0 செம்ம ப்ளாப்- 5 ஆதரவாளர்களுக்கு மட்டும் வழிகாட்டு குழுவில் இடம்!
சென்னை: முதல்வர் வேட்பாளரில் தொடங்கிய துணை முதல்வர் ஓபிஎஸ்-ன் தர்மயுத்தம் 2.0 ஆகக் குறைந்த பட்சம் அதிமுகவின் வழிகாட்டுதல் குழுவில் கூட ஆதிக்கம் செலுத்த முடியாமல் படுதோல்வியை சந்தித்துள்ளது.
தமிழக அரசியலில் தர்மயுத்தத்தின் நாயகனாக போற்றப்படுபவர் ஓபிஎஸ். முதல்வர் பதவியில் சசிகலா அமருவதற்காக தன்னை ராஜினாமா செய்ய சொல்லிவிட்டார்களே என கொந்தளித்து கூடா நட்புகள் உதவியுடன் தர்மயுத்தம் 1.0 ஐ தொடங்கினார் ஓபிஎஸ்.
ஜெயலலிதா மர்ம மரணம், சசிகலா எதிர்ப்பு என்றெல்லாம் வசனம் பேசிக் கொண்டே தர்மயுத்தத்தை முன்னெடுக்கவும் ஓபிஎஸ்ஸால் முடியவில்லை வேறுவழியே இல்லாமல் தர்மயுத்தம் 1.0க்கு அவராகவே முடிவுரை எழுதி அதிமுகவில் மீண்டும் சரணாகதி அடைந்துவிட்டார்.
ஓபிஎஸ் நிபந்தனை ஏற்பு - அதிமுகவை வழி நடத்த 11 பேர் கொண்ட குழு அமைப்பு
முதல்வர் வேட்பாளர் குரல்
அதிமுகவில் மீண்டும் இணைந்து துணை முதல்வர் பதவி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிகளைப் பெற்ற கையோடு சிலகாலம் அமைதியாகத்தான் இருந்தார் ஓபிஎஸ். ஆனால் திடீரென நானே முதல்வர் வேட்பாளர் என தூக்கத்தில் விழித்துக் கொண்டு புலம்புவதை போல கலகக் குரல் எழுப்பினார் ஓபிஎஸ்.
ஓபிஎஸ்_க்கு ஆதரவு இல்லை
அதிமுக தொண்டர்கள் எவரும் இந்த குரலை கொஞ்சமும் ரசிக்கவே இல்லை. அதிமுக செயற்குழுவிலும் ஓபிஎஸ்-ன் இந்த குரலுக்கு ஆதரவு கிடைக்கவில்லை. அமைச்சரவை சகாக்களும் ஓபிஎஸ்ஸை ஆதரிக்க முன்வரவில்லை. கடந்த கால தர்மயுத்தம் 1.0-வில் உடன் இருந்தவர்களும் இந்த தர்மயுத்தம் 2.0-க்கு ஒத்துழைக்கவும் இல்லை.
வழிகாட்டும் குழு
இதனால் அதிமுகவில் தனிமரமாக்கப்பட்ட சூழ்நிலையில் ஆகக் குறைந்தபட்சம் அந்த வழிகாட்டு குழுவையாவது அமைத்தாக வேண்டும் அல்லது பொதுச்செயலாளர் பதவியாவது தர வேண்டும் என்ற கோரிக்கையை நோக்கி இறங்கினார் ஓபிஎஸ். அந்த வழிகாட்டுக் குழுவின் தலைவராக தம்மை போட்டுக் கொண்டு அதை கையில் வைத்துக் கொண்டால் கட்சியின் அதிகாரம் நம் கையில் இருக்கும் என்பதுதான் ஓபிஎஸ் திட்டம்.
ஓபிஎஸ்-க்கு 5 பேர்
இப்போது அதிமுகவின் 11 பேர் கொண்ட வழிகாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதிலும் கூட ஓபிஎஸ் அணியில் 5 பேருக்குத்தான் இடம். முதல்வர் எடப்பாடி தரப்பில் 6 பேர் உள்ளனர். அதாவது ஓபிஎஸ்-க்கு அதிமுகவில் அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் யாரும் ஆதரவாக இல்லை- இந்த 5 பேர்தான் ஓபிஎஸ்-க்கு ஆதரவு என்ற யதார்த்தத்தை பட்டவர்த்தனமாக காட்டி இருக்கிறது இந்த வழிகாட்டு குழு. ஆக முதல்வர் வேட்பாளர், பொதுச்செயலாளர் பதவி, வழிகாட்டுக் குழு என தர்மயுத்தம் 2.0வை தொடங்கிய ஓபிஎஸ் படுதோல்வியைத்தான் சந்தித்திருக்கிறார்.