"பனிப்போர்".. மோதலுக்கு பின் சந்தித்த ஆளுநர் - முதல்வர் ஸ்டாலின்.. அருகருகே அமர்ந்து.. நடந்தது என்ன?
சென்னை: ஆளுநர் ஆர். என் ரவிக்கும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கும் இடையே நீட் விவகாரம் காரணமாக பனிப்போர் நிலவி வரும் நிலையில் இருவரும் இன்று சந்தித்துக்கொண்டனர்.
தமிழ்நாடு அரசு நீட் தேர்வில் இருந்து எப்படியாவது விலக்கு பெற வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. இதற்காக ஏற்கனவே தமிழ்நாடு அரசு மசோதா நிறைவேற்றி ஆளுநர் ஆர். என் ரவிக்கு அனுப்பியது.
ஆனால் அரசு அனுப்பிய மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் ஆர். என் ரவி அதை திருப்பி அனுப்பினார். இதையடுத்து திமுக கட்சி ஆளுநரின் செயல்பாட்டிற்கு கடும் கண்டனம் தெரிவித்தது.
அந்த மீட்டிங்.. தமிழிசை ஆக்சன்.. ஆளுநர் ரவி திடீர்ன்னு ஏன் இவரை சந்திக்கிறார்? என்னதான் நடக்குது?
மோதல்
ஆளுநரின் செயல் விதி மீறல் என்று திமுக தலைவர்கள் விமர்சனம் வைத்தனர். ஆளுநருக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை மற்ற தமிழ்நாடு கட்சிகளும் வைத்தன. மேலும் ஆளுநர் ஆர். ரவியின் முடிவு குறித்து அனைத்து கட்சி கூட்டத்தையும் திமுக தலைமையிலான அரசு நடத்தியது. அதோடு ஆட்டுக்கு தாடி, மாநிலத்திற்கு ஆளுநர் தேவையா என்ற அண்ணாவின் வாசகத்தையும் நினைவுபடுத்தி முதல்வர் ஸ்டாலின் ஆளுநரை விமர்சனம் செய்து இருந்தார்.
நீட் ஆளுநர்
ஆளுனருடன் அரசுக்கு இந்த மோதல் நிலவி வரும் நிலையில்தான் கடந்த மாதம் திமுகவின் அதிகாரபூர்வ நாளிதழான முரசொலியில் ஆளுநரை விமர்சனம் செய்து கட்டுரையும் வெளியிடப்பட்டு இருந்தது. கொக்கென்று நினைத்தாரோ என்ற தலைப்பில் தமிழ்நாடும் நாகலாந்து ஒன்றல்ல என்று ஆளுநரை கடுமையாக தாக்கி கட்டுரை வெளியிடப்பட்டு இருந்தது. இந்த கட்டுரைக்கு பாஜக கடும் விமர்சனம் வைத்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
மசோதா
இந்த நிலையில்தான் ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாவை தமிழ்நாடு அரசு மீண்டும் நிறைவேற்றியது. சிறப்பு சட்டசபை கூட்டத்தொடரை கூட்டி தமிழ்நாடு அரசு மீண்டும் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றியது. இந்த மசோதா கடந்த வாரம் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இதில் இன்னும் ஆளுநர் முடிவு எடுக்கவில்லை. ஆனால் சட்டப்படி இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்து குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டிய கட்டாயத்தில் ஆளுநர் இருக்கிறார்.
சந்திப்பு
இந்த நீட் விவகாரம் காரணமாக ஆளுநர் ஆர். என் ரவி முதல்வர் ஸ்டாலின் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. இந்த நிலையில்தான் இன்று இவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டனர். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள முனீஸ்வர நாத் பாண்டாரிக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வரவேற்பு விழா நடத்தப்பட்டது. இதற்கு முன் முனீஸ்வர நாத் பாண்டாரிக்கு ஆளுநர் ஆர். என் ரவி பதவி ஏற்பு நடத்தினார். அந்த விழாவில் முதல்வர் ஸ்டாலினும் கலந்து கொண்டார்.
பேசவில்லை
இதில் சந்தித்துக்கொண்ட முதல்வர் ஸ்டாலின் - ஆளுநர் ஆர். என் ரவி இருவரும் மாறி மாறி வணங்கிக் கொண்டனர். மரியாதை செல்லுவது போல இருவரும் மாறி வணங்கிக் கொண்டனர். ஆனால் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அதேபோல் இருவரும் அருகருகே அமர்ந்து இருந்தனர். இருப்பினும் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. கடைசியில் நிகழ்வு முடிந்து செல்லும் போது இருவரும் மாறி மாறி வணக்கம் வைத்துக்கொண்டு அங்கிருந்து விடைபெற்றனர்.
என்ன நடந்தது?
இருவருக்கும் இடையிலான பனிப்போருக்கு இடையில் இந்த சந்திப்பு நடைபெற்றது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. முன்னதாக ஆளுநர்களின் அத்துமீறல்கள் பற்றி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடம் முதல்வர் ஸ்டாலின் போனில் பேசினார். இதை பற்றி கருத்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், பாஜக ஆளாத மாநிலங்களில் கவனர்களின் அதிகார அத்துமீறல் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி என்னிடம் பேசினார். பாஜக ஆளாத மாநில முதல்வர்களின் மீட்டிங் நடத்தப்பட வேண்டும் என்று கூறினார். இதையடுத்து விரைவில் இதற்கான சந்திப்பு நடக்கும் என்று தான் உறுதி அளித்ததாக முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.