திருக்கோவில் ஊழியர்களுக்கு ஒரே நேரத்தில் 2 லட்டு..பொங்கலுக்கு முதல்வர் அறிவித்த ஸ்வீட் நியூஸ்
சென்னை: திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வோடு, பொங்கல் கருணைக்கொடையாக ரூ.3,000 வழங்கப்படும், என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திருக்கோயில் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. திருக்கோயில் பணியாளர்களுக்கு பொங்கல் கருணைக்கொடை வழங்குவதால் அரசுக்கு கூடுதலாக இவ்வாண்டு ரூ.1.5 கோடி செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் அரசின் நலத்திட்டங்களுக்கு அச்சாணியாக விளங்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஒய்வூதியர்கள் மற்றும் குடும்ப மிகை ஊதியம், பொங்கல் பரிசு வழங்க முதமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் சி மற்றும் டி பிரிவை சேர்ந்த அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3000 என்ற உச்ச வரம்பிற்குட்பட்ட மிகை ஊதியம் வழங்கப்படும்.
இதேப் போன்று தொகுப்பு ஊதியம், சிறப்பு கால முறை ஊதியம் பெறும் பணியாளர்கள் மற்றும் நிதியாண்டில் குறைந்த பட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கும் மேல் பணிபுரிந்து சில்லறை செலவினங்கள் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர மற்றும் பகுதி நேர பணியாளர்களுக்கும் ரூ,1000 மிகை ஊதியம் வழங்கப்படும். சி மற்றும் டி ஆகிய பிரிவை சேர்ந்த ஒய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள், முன்னாள் கிராம பணியமைப்பு மற்றும் அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கும் ரூ.500 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, அனைத்து திருக்கோயில்களிலும் பணியாற்றுகின்ற நிரந்தர பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வோடு, பொங்கல் கருணைக்கொடையாக ரூ.3,000 வழங்கப்படும், என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருக்கோவில்களின் மேற்பாட்டிற்கும் திருக்கோவில் சொத்துக்களை பாதுகாக்கவும், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், திருக்கோவில் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் இந்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஓய்வு பெற்ற அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், இசைக்கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் ரூ.1000த்தை ரூ.3000 ஆக உயர்த்தியும், கிராம கோவில் பூசாரிகளுக்கான ஓய்வூதியம் ரூபாய் 3 ஆயிரத்தை ரூ. 4ஆயிரமாக உயர்த்தியும் வழங்க ஆணையிடப்பட்டது.
திருக்கோவிலில் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துவதற்கான கட்டணம் விலக்களித்து அப்பணியை மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு மாதம் ரூ. 5000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. திருக்கோவில் அர்ச்சகர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கு பொங்கல் திருநாளை முன்னிட்டு இரண்டு புத்தாடை வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டதை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ரூ.1 லட்சம் மற்றும் அதற்கு மேல் ஆண்டு வருமானம் வரப்பெறும் திருக்கோவில்களில் பணிபுரிந்து வரும் நிரந்தர பணியாளர்களுக்கு ஜனவரி 1,2023 முதல் அகவிலைப்படி 34 சதவிகிதத்தில் இருந்து 38 சதவிகிதமாக உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 10 ஆயிரம் திருக்கோவில் பணியாளர்களின் வாழ்வாதாரம் மேம்படும். அரசுக்கு ஆண்டுக்கு ரூ.7 கோடி கூடுதல் செலவீனம் ஏற்படும்.
அரசுப்பணியாளர்களுக்கு பொங்கல் திரநாள முன்னிட்டு மிகை ஊதியம் வழங்கப்படுவதைப்போல இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில்களில் பணியாற்றும் பகுதிநேரம், முழுநேரம், தொகுப்பூதியம், தினக்கூலி உள்ளிட்ட அனைத்து பணியாளர்களுக்கும் ரூ.2000 வழங்கப்பட்டு வந்த கருணைக்கொடை இந்த ஆண்டு முதல் ரூ.3000 வழங்கப்படும். இதன் மூலம் அரசுக்கு ரூ.1.5 கோடி கூடுதல் செலவீனம் ஏற்படும்.
இந்த அறிவிப்புகள் திருக்கோவில் பணியாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதோடு தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை அவர்தம் குடும்பத்தாரோடு உற்சாகமாக கொண்டாடிட வழிவகை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.