பக்தர்களுக்கு குட் நியூஸ்.. புதிதாக 3 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம்.. எங்கெங்கு தெரியுமா?
சென்னை: தமிழகத்தில் 754 கோவில்களில் மதியவேளைக்கான அன்னதான திட்டம் அமலில் உள்ள நிலையில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்தது. நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் 5 கோவில்களில் அமலில் உள்ள நிலையில் தற்போது புதிதாக 3 கோவில்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த 3 கோவிலுக்கான திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக துவக்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் ஏராளமான கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களில் தற்போது பல்வேறு புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
பக்தர்களின் வசதிக்காக கோவில்களில் அன்னதானம் திட்டம் அமலில் உள்ளது. இந்த திட்டத்துக்கு பக்தர்கள் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுதான் தமிழ்நாடு.. ஐயப்ப பக்தர்களுக்கு பூஜை பொருள்-அன்னதானம் வழங்கிய இஸ்லாமியர்கள்.. மதநல்லிணக்கம்
நாள் முழுவதும் அன்னதானம் திட்டம்
இந்நிலையில் தான் அரசு கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. தமிழகத்தில் தற்போது 754 கோவில்களில் மதியவேளை அன்னதானம் வழங்கும் திட்டம் அமலில் உள்ள நிலையில் இந்த புதிய திட்டம் வகுக்கப்பட்டது. அதன்படி முதற்கட்டமாக இந்த திட்டம் 2 கோவில்களில் அமல்படுத்தப்பட்டது. திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவில், திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது.
தொடர்ந்து விரிவாக்கப்படும் திட்டம்
அதன்பிறகு இந்த திட்டத்தை விரிவுப்படுத்த முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டார். அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் 19ம் தேதி நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் 5 கோவில்களில் புதிதாக தொடங்கி வைத்தார். அதன்படி தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசாமி கோவில் ஆகியவற்றில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் அமலுக்கு வந்தது.
3 கோவில்களில் புதிதாக தொடக்கம்
இதன் தொடர்ச்சியாக தான் தற்போது மேலும் 3 கோவில்களுக்கு இந்த திட்டம் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் அமலாகி உள்ளது. இதனை இன்று முதல்வர் ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார்.
காலை 8 முதல் இரவு 10 மணி வரை
இந்த திட்டத்தின் மூலம் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். மேலும் 3 கோவில்களிலும் நாள் ஒன்றுக்கு சுமார் 8 ஆயிரம் பக்தர்கள் இதன்மூலம் பயனடைவார்கள். இந்த கோவில்களில் தயாரிக்கப்படும் பிரசாதம் மற்றும் அன்னதானம் தரத்துடனும், சுகாதாரமான முறையிலும் தயாரிக்கப்படுவதை உறுதி செய்திட இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையத்தால் வழங்கப்படும் உணவு தர பாதுகாப்பு சான்றிதழ் அனைத்து முதுநிலை கோவில்கள் உள்பட 314 கோவில்களுக்கு பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.