“கூட்டணி ஆபரேஷன்”.. கண்ணைக் காட்டிய ஸ்டாலின்.. மதிமுகவில் இருந்து டைவ் அடித்த முக்கிய புள்ளி!
சென்னை: கடந்த சில ஆண்டுகளாக கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களை திமுகவில் இணைக்க தயக்கம் காட்டி வந்த தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், அதிரடி ஆக்ஷனில் இறங்கி உள்ளார். கூட்டணி கட்சியான மதிமுகவைச் சேர்ந்த முக்கிய புள்ளியை தானே வரவேற்று கட்சியில் இணைத்துள்ளார்.
2021 சட்டமன்ற தேர்தலில் பல்லடம் தொகுதியில் மதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட முத்துரத்தினம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.

கூட்டணி கணக்குகள்
2026 சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சு, பூத் கமிட்டி வேலைகளில் தீவிரமாக இறங்கி உள்ளன. திமுக கூட்டணியை பொறுத்தவரை ஏற்கனவே இருக்கும் கட்சிகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், கடந்த சட்டசபை தேர்தலில் 6 சீட் வாங்கிய கட்சிகள் இந்த முறை அதிக தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து வருகின்றன.
மதிமுகவுக்கு 12 தொகுதிகள் வேண்டும் என்று போர்க்கொடி தூக்கியுள்ளார் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ. செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய துரை வைகோ "மதிமுக தொண்டர்களும், நிர்வாகிகளும் 12 தொகுதிகளில் போட்டியிட்டால், கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும் என நினைக்கின்றனர். இது குறித்து இயக்கத்தின் தலைமை முடிவெடுக்கும்" என்று தெரிவித்தார்.
திமுகவுக்கு அழுத்தம்
அண்மையில் ஈரோட்டில் நடந்த மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் திமுகவிடம் அதிக தொகுதிகள் கேட்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் 2021 சட்டசபை தேர்தலில் பல்லடம் தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிட்ட முத்துரத்தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று திமுகவில் இணைந்துள்ளார்.
கிரீன் சிக்னல் தராத ஸ்டாலின்
துரை வைகோ, கட்சியில் பொறுப்புக்கு வந்ததுமே, சீனியர்களுக்கும் அவருக்கும் முட்டிக்கொள்ள ஆரம்பித்தது. பல சீனியர்கள் வெளிப்படையாகவே தங்கள் அதிருப்தியைக் காட்டினர். பல மூத்த நிர்வாகிகள், தீவிர அரசியல் பணியில் இருந்து ஒதுங்கிவிட்டனர். சில முக்கிய புள்ளிகள் திமுகவில் சேர விருப்பம் தெரிவித்தும், ஸ்டாலின் அதற்கு க்ரீன் சிக்னல் கொடுக்கவில்லை.
மதிமுக கூட்டணியில் இருக்கும் நிலையில், அக்கட்சி நிர்வாகிகளை திமுகவில் சேர்ப்பது சரியான அணுகுமுறை அல்ல, வைகோ தவறாக நினைப்பார் என்பதற்காக மதிமுக நிர்வாகிகளை இந்தப் பக்கம் இழுப்பதில் ஸ்டாலின் ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் தான் தற்போது, மதிமுக நிர்வாகி முத்துரத்தினத்தை தானே சால்வை அணிவித்து வரவேற்றுள்ளார் ஸ்டாலின்.
முத்துரத்தினம் தாவல்
துரை வைகோவால் அதிருப்தியில் இருந்த முத்துரத்தினம் திமுகவில் இணைவதற்காக கோவை மண்டல பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ளார். ஆனால் கூட்டணி கட்சியில் இருப்பவர்கள் திமுகவுக்கு வந்தால் கூட்டணிக்குள் குழப்பம் ஏற்படும் என்பதால் ஸ்டாலின் அதற்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அதிக சீட் கேட்டு மதிமுக நெருக்க ஆரம்பித்துள்ளதால், அதிருப்தியில் இருப்பவர்கள் திமுக பக்கம் சாய்ந்தால் கட்சியில் சேர்த்துக் கொள்ளலாம் என ஸ்டாலின் இறங்கியுள்ளதாக தெரிகிறது. இதையடுத்தே, செந்தில் பாலாஜியின் ஆபரேஷனை அடுத்து, முத்துரத்தினத்தை திமுகவில் இணைத்துள்ளார்.
கூட்டணி ஆபரேஷன்
மதிமுகவின் வேட்பாளராக 2021 சட்டசபை தேர்தலில் பல்லடம் தொகுதியில் போட்டியிட்ட முத்துரத்தினம், திருப்பூர் மாவட்ட மதிமுக செயலாளர் ரமேஷ், திருப்பூர் மாவட்ட மதிமுக இளைஞரணி செயலாளர் ரவி ஆகியோர் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர்.
மேலும், இந்த இணைப்பு, மதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளில் அதிருப்தியில் இருக்கும் தலைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மறைமுக அழைப்பு என்றும் கருதப்படுகிறது. மேலும் பல நிர்வாகிகள் வரும் நாட்களில் திமுகவில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. சீட் நம்பரை முன்வைத்து கூட்டணி கட்சிகள் நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ள நிலையில், அதனை முறியடிக்கத் தான் இந்தக் 'கூட்டணி ஆபரேஷன்' என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தினர்.












Click it and Unblock the Notifications