நரிக்குறவ பெண் அஸ்வினி மீது வியாபாரிகள் போலீசில் புகார்.. பொருட்களை வாங்கி மிரட்டுவதாக குற்றச்சாட்டு
சென்னை : சமூக வலைதளங்களில் பிரபலமடைந்த மாமல்லபுரம் நரிக்குறவ பெண் அஸ்வினி கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கிக்கொண்டு பணம் கேட்டால் மிரட்டுவதாக மாமல்லபுரம் வியாபாரிகள் சங்கம் சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், பூஞ்சேரி நரிக்குற குடியிருப்பை சேர்ந்த நரிக்குறவ பெண் அஸ்வினி என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மாமல்லபுரம் தலவசய பெருமாள் கோயிலில் அன்னதானம் சாப்பிட வந்தபோது அவமதிக்கப்பட்டார்.
இது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிய நிலையில், இந்த சம்பவத்தை அடுத்து முதல்வர் ஸ்டாலின் அப்பகுதிக்கு நேரடியாக சென்று அப்பெண்ணுக்கு ஆறுதல் கூறி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

நரிக்குறவ பெண் அஸ்வினி
இந்நிலையில் நரிக்குறவ பெண் அஸ்வினி முதல்வர் மு.க.ஸ்டாலின் தனக்கு கருணை காட்டியதை தவறாக அவரது பெயரை பயன்படுத்தும் வகையில், மாமல்லபுரத்தில் பேரூராட்சி அலுவலகம் அருகில் உள்ள ஒரு டிபன் கடைக்கு சென்று 10 ரூபாய்க்கு சப்பாத்தி, பரோட்டா கேட்டு மிரட்டுவதாகவும், கொடுக்க முடியாது என்று கூறியதால் தனது கணவரை கத்தியை காட்டி மிரட்டுவதாகவும், முதல்வர் தனக்கு நெருக்கமானவர் என்று கூறி உணவக உரிமையாளர் சுலோச்சனா என்பவரை உன்னை என்ன செய்கிறேன் பார் என்று கூறி மிரட்டிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

மிரட்டல்
அதேபோல் மாமல்லபுரம் கிழக்கு ராஜ வீதியில் உள்ள மருந்து கடை ஒன்றில் மருந்து சரியில்லை என்று கூறி அங்கு தகராறில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. அதே தெருவில் உள்ள பேக்கரி கடை ஒன்றிலும் கேக் வாங்கி கொண்டு, பணம் கொடுக்காமல் தரமில்லை என்று கூறி வாய்த்தகராறு செய்துள்ளார். மாமல்லபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள டீ கடை ஒன்றிலும் டீ சரியில்லை என்றும், அதனால் பணம் கொடுக்க மாட்டேன் என்று கூறி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

வியாபாரிகள் புகார்
இதுபோல் நாளுக்கு, நாள் நரிக்குற பெண் அஸ்வினியின் அராஜக போக்கு அதிகரித்து எல்லை மீறி போவதால் அவரால் பாதிக்கப்பட்ட டிபன் கடை மற்றும் பேக்கரி கடை, டீ கடை, மருந்து கடை, உள்ளிட்ட கடைகளின் உரிமையாளர்கள், வியாபாரிகள் சங்கத்தினர் என 25-க்கும் மேற்பட்டோர் மாமல்லபுரம் காவல் நிலையத்திற்கு இன்று கூட்டமாக சென்று புகார் செய்தனர்.

கடையடைப்பு போராட்டம்
அதில் முதல்வர் ஸ்டாலின் தனக்கு நெருக்கமானவர் என்றும், எந்நேரமும் அவரை சந்திக்கும் ஆற்றல் தனக்கு உள்ளதாக கூறி முதல்-அமைச்சர் ஸ்டாலின் பெயரை தவறாக பயன்படுத்தி எங்களை மிரட்டுகிறார் என்று கூறி அவரால் பாதிக்கப்பட்ட வியாபாரிகள் தனித்தனியாக மாமல்லபுரம் போலீஸ் இனஸ்பெக்டர் ருக்மாங்கதனிடம் புகார் செய்தனர். இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் அப்பெண் மீது அளிக்கப்பட்ட அனைத்து புகார் மனுக்கள் மீது விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நடவடிக்கை எடுக்காவிட்டால் மாமல்லபுரம் பகுதி முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என வணிகர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications