'ஸ்டிரிக்ட் ஆக்ஷன்..'அண்ணாத்த கட்வுட்டுக்கு ஆட்டை பலிகொடுத்து ரத்தாபிஷேகம்: கமல் கட்சி நிர்வாகி புகார்
சென்னை: அண்ணாத்த கட்அவுட்டுக்கு அவரது ரசிகர்கள் பொது இடத்தில் ஆட்டை பலி கொடுத்த ரத்த அபிஷேகம் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல இதைக் கண்டிக்காத ரஜினி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மற்றொரு சமூக ஆர்வலர் புகார் அளித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இந்த திரைப்படம் வரும் நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் களத்தில் இறங்கப்போவதில்லை என ரஜினிகாந்த் அறிவித்த பிறகு வெளியாகும் முதல் திரைப்படம் என்பதால் இத்திரைப்படத்தின் மீது மிகப் பெரியளவில் எதிர்பார்ப்பு உள்ளது.

ரத்த அபிஷேகம்
இந்நிலையில் இந்த படத்தின பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். அதேநேரம் மதுரை, திருச்சி உள்ளிட்ட சில பகுதிகளில் பொது இடங்களில் அண்ணாத்த கட்அவுட் போஸ்டருக்கு ஆட்டை வெட்டி ரத்த அபிஷேகம் செய்தனர். பொதுவெளியில் சிறார்கள் முன்னிலையில் ரஜினி ரசிகர்கள் இந்த செயலில் ஈடுபட்டது பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இதற்கு பல்வேறு அமைப்புகளும் தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளனர்.

போலீசாரிடம் புகார்
இந்நிலையில் ஆட்டை கொடூரமாக வெட்டிக் கொன்று கட்அவுட்டுக்கு ரத்தாபிஷேகம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் தலைவரும் மக்கள் நீதி மய்யத்தின் தொழிலாளர் நல அணி மாநிலச் செயலாளருமான பொன்னுசாமி டிஜிபியிடம் புகார் அளித்துள்ளார். இது குறித்த அவர் அளித்துள்ள புகாரில், "நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் அண்ணாத்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் கடந்த சில தினங்களுக்கு முன் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வெளியிடப்பட்டது.

ரத்தத்தைப் பீய்ச்சி அடித்து அபிஷேகம்
அவ்வாறு வெளியிடப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்பட பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் கட்அவுட்டை தமிழகத்தில் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பொதுவெளியில் வைத்து கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அவரது ரசிகர்கள் பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் முன்னிலையில் ஆட்டை பலி கொடுத்து, பலி கொடுத்த தலையில்லா பொதுவெளியில் வைக்கப்பட்டிருந்த அண்ணாத்த பட கட்அவுட்டிற்கு தூக்கிக் காண்பித்து வெட்டப்பட்ட தலையில்லா ஆட்டின் உடம்பில் இருந்து பீய்ச்சி அடித்த ரத்தத்தால் அபிஷேகம் செய்துள்ளனர். இந்த காட்டுமிராண்டித்தனமான செயல் அரங்கேறிய காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.

ஆயுத கலாசாரம்
ஏற்கனவே திரையரங்கில் வைக்கப்படும் முன்னணி நடிகர்களின் உயிரற்ற கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்து தவறான முன்னுதாரணத்தை உருவாக்கிய ரசிகர்கள், தற்போது ஒருபடி மேலே போய் பொதுவெளியில் வைக்கப்பட்டிருந்த கட்அவுட்களுக்கு கொடூரமாக ஆடுகளைப் பலி கொடுத்து ரத்தாபிஷேகம் செய்திருப்பது ஆயுத கலாச்சாரத்திற்கு வழிவகுப்பதாக இருக்கிறது. இந்த சம்பவத்தின்போது சிறுவர்கள் அதிகம் பேர் சம்பவ இடத்தில் உள்ளனர். இது வளரும் பருவத்தினரிடையே வன்முறை எண்ணத்தை வளர்க்கும்.

சட்ட ஒழுங்கு சீர்கெட்டுப் போகும்
இந்நிலையில் உயிரற்ற கட்அவுட்களுக்கு உயிருள்ள ஆட்டை பலி கொடுத்து ரத்தாபிஷேகம் செய்கிற கலாச்சாரத்தை ஆரம்பத்திலேயே தடுக்காமல் விட்டு விட்டால் இதை மற்ற முன்னணி நடிகர்களின் ரசிகர்களும் பின்பற்ற ஆரம்பித்து ஆடு, மாடு, கோழிகளைப் பலி கொடுக்க தொடங்கிவிடுவார்கள். இதனால் ஒவ்வொரு திரைப்படம் வெளியாகும் போதும் சாலைகளும், திரையரங்குகளும் சாலைகளும் ரத்தக்களரி ஆகும். காட்டுமிராண்டித்தனமாக கலாசாரம் உருவாகி அமைதி பூங்காவாக இருக்கும் தமிழகத்தில் ஆயுத கலாசாரம் வளர்ந்து, சட்ட ஒழுங்கு சீர்கெட்டுப் போகும் சூழ்நிலை ஏற்பட்டு விடும்.

நடவடிக்கை தேவை
தமிழகத்தில் வணிக ரீதியில் கூட ஆடு, மாடு போன்ற மிருகங்களைப் பொதுவெளியில் பலியிடவோ, துன்புறுத்தவோ கூடாது என்கிற சட்டம் அமலில் உள்ள நிலையில் தங்களின் ஆதர்ச நடிகரின் கட்அவுட்டிற்கு ஆட்டை பலி கொடுத்து ரத்தாபிஷேகம் செய்தவர்களைக் கண்டறிந்து பொதுவெளியில் மிருகங்களைத் துன்புறுத்தி வதைப்பது, ஆயுதத்தைப் பயன்படுத்தி மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்துவது, பொது இடத்தில் பயங்கர ஆயுதத்தைப் பயன்படுத்துவதற்கு எதிரான பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்" எனக் கூறப்பட்டுள்ளது.

ரஜினி மீது நடவடிக்கை தேவை
அதேபோல தமிழ்வேந்தன் என்ற சமூக ஆர்வலரும் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகார் அளித்துள்ளார். "பார்ப்பதற்கு நெஞ்சைப் பதறவைக்கும் அந்த வீடியோ காட்சிக்கு பலரும் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இதுவரை இச்செயலை எதிர்த்து ஓர் கண்டனமோ, எதிர்ப்பு அறிக்கையோ நடிகர் ரஜினி தரப்பில் கொடுக்கவில்லை. இச்செயலை ஆதரித்தது போலவே உள்ளார். இது பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் செயல் என்பதால் இது ஈடுபட்டவர்கள் மீதும் இதைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் நடிகர் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகார் அளித்துள்ளார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications