போலீஸ் இல்லாத செக் போஸ்ட்.. வசூலில் குதித்த 'பசு காவலர்கள்'.. பாதிக்கப்படும் தமிழக வியாபாரிகள்! ஷாக்
சென்னை: தமிழ்நாட்டிலிருந்து ஆந்திரா மற்றும் கேரளாவுக்கு மாடுகள் ஏற்றிச் செல்லும் லாரிகளை குறிவைத்து பணம் பறிக்கப்படுவதாக தொடர் புகார்கள் வந்துள்ளன.
தமிழ்நாட்டில் 10 வயதிற்கு மேல் உள்ள மாடுகளை உணவுக்காக விற்கலாம் என்று சட்டம் இருக்கும் நிலையிலும் சில அமைப்புகள் தங்களை மிரட்டி பணம் பறிப்பதாக லாரி ஓட்டுநர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த வழிப்பறிக்கு காவல்துறையினரும் உடந்தையாக இருப்பதாக தமிழக மாட்டிறைச்சி வியாபாரிகளும் குற்றம்சாட்டியுள்ளனர்.
வழிப்பறி
மாட்டிறைச்சி விற்பனை என்பது பொதுவாக வடமாநிலங்களில் சர்ச்சைக்குரிய விஷயமாக தற்போது வரை பார்க்கப்படுகிறது. நாட்டில் சாமானிய மக்களுக்கு குறைந்த விலையில் அதிக அளவு சத்து கொண்ட இறைச்சியாக மாட்டிறைச்சி இருக்கும் நிலையில் சில வலதுசாரி மதவாத அமைப்புகள் இதன் மூலம் அரசியல் செய்வதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. தற்போது இது மெல்ல தமிழ்நாட்டினரையும் பாதிக்க தொடங்கியுள்ளது. அதாவது, தமிழ்நாட்டிலிருந்து ஆந்திரா மற்றும் கேரளாவுக்கு மாடுகள் ஏற்றிச் செல்லும் லாரிகளை குறிவைத்து பணம் பறிக்கப்படுவதாக தமிழக மாட்டிறைச்சி விற்பனையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கோசாலை
தமிழ்நாட்டில் 1958ம் ஆண்டிலிருந்து பசு வதைக்கு எதிரான சட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. இதன் மூலம் 10 வயதுக்கு அதிகமான மாடுகளையும், நிரந்தர பாதிப்புகளை கொண்ட மாடுகளையும் அடிமாடுகளாக விற்கலாம். ஆனால், தமிழ்நாட்டிலிருந்து ஆந்திராவுக்கு இம்மாதிரியான அடிமாடுகளை ஏற்றிச் செல்லும்போது அங்கு சில அமைப்புகள் 'செக் போஸ்ட்' அமைத்து கட்டாய கட்டணம் வசூலிப்பதாகவும், அவ்வாறு கொடுக்கவில்லையெனில் மாடுகள் 'கோசாலைக்கு' அனுப்பி வைக்கப்படுவதாகவும் லாரி ஓட்டுநர்கள் கூறியுள்ளனர்.
கள ஆய்வு
தனியார் செய்தி ஊடகம் (THE NEWS MINUTE) நடத்திய கள ஆய்வில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இது போன்ற பிரச்னையை கடந்த சில நாட்களாக மாட்டிறைச்சி வியாபாரிகள் எதிர்கொண்டிருந்த நிலையில் இது குறித்து கடந்த மாதம்(அக்டோபர்) 10ம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே சங்கமாக அணிதிரண்டு மாட்டிறைச்சி வியாபாரிகள் போராட்டம் நடத்தினர். ஆனாலும் இப்பிரச்னைக்கு எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.
ரூ.10 ஆயிரம் டூ ரூ.30 ஆயிரம்
இதற்கு முக்கிய காரணம் காவல்துறையினரும் இவர்களுடன் சேர்ந்து இந்த வழிப்பறியில் ஈடுபடுவதுதான் என்று வியாபாரிகள் கூறுகின்றனர். ஒவ்வொரு முறையும் இம்மாதிரியான பிரச்னையை எதிர்கொள்ளும்போதும் ரூ.10 ஆயிரத்திலிருந்து ரூ.30 ஆயிரம் வரை வழிபறி செய்யப்படுவதாக இவர்கள் கூறுகின்றனர். இதுகுறித்து லாரி ஓட்டுநர் கூறுகையில், "இவ்வாறு பணம் கொடுக்கவில்லையெனில் எங்களால் அடுத்த செக் போஸ்ட்டை கடக்க முடியாது. மட்டுமல்லாது, காவல்துறையினர் எங்கள் மீது பொய் வழக்கையும் பதிவு செய்கின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள எலாவூர் பகுதியில் உள்ள செக்போஸ்டில் இம்மாதிரி டோக்கன் வழங்கப்படுகிறது" என்று கூறியுள்ளார்.
சட்டப்பூர்வமான வழிப்பறி
தமிழ்நாடு மாட்டிறைச்சி வியாபாரிகள் சங்கத் தலைவர் அன்புவேந்தன் இது குறித்து கூறுகையில், 'திருமுருகன் லாரி உரிமையாளர் சங்கம்' என்கிற பெயரில் டோக்கன் வழங்கப்படுகிறது. இந்த டோக்கனில் லாரி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை வைத்துதான் எங்களால் அடுத்தடுத்த செக் போஸ்ட்களை கடக்க முடியும். இதை காட்டினால் காவல்துறையும் எதுவும் சொல்வதில்லை அனுமதித்துவிடுகிறார்கள்" என்று கூறியுள்ளார். வடமாநிலத்தில் தொடங்கப்பட்ட இம்மாதிரியான வழிப்பறிகள் நாளடைவில் தாக்குதல்கள் மற்றும் கொலைகளாக மாறியுள்ளன என்பதை குறிப்பிடும் சமூக செயற்பாட்டாளர்கள், தமிழ்நாட்டில் இம்மாதிரியான நிலை உருவாகாமல் தடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.