பாஜக ஆசைக்கு முடிவுரை.. காங். ஆசைக்கு முன்னுரை.. சிக்கலை தரப்போகும் 'மூன்று பேர்'!
சென்னை: தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மூன்று மாநிலங்களில் வெற்றி பெறுவது பாஜகவின் கனவு மட்டுமல்ல.. அதன் நீண்ட நாள் ஆசையும் கூட.. ஏனெனில் பாஜகவால் வெல்லவே முடியாத பகுதியாக இந்த மாநிலங்கள் உள்ளன.
தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மூன்று மாநிலங்களுமே பாஜகவிற்கு கொள்கை ரீதியாக கடும் சவாலை தரும் மாநிலங்கள். இவற்றில் பாஜக வென்றால் இந்தியாவின் அரசியல் எதிர்காலத்தில் மிகப்பெரிய திருப்பு முனை ஏற்படும். அதேநேரம் பாஜகவால் தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கத்தில் வெல்ல முடியாமல் போனால், மோடியின் செல்வாக்கை சரிக்கும் காங்கிரஸின் ஆசைக்கு முன்னுரை எழுதியது போல் ஆகிவிடும்.
ஏனெனில் மோடியை வலுவாக எதிர்க்கும் மூன்று பேர் என்றால் பினராயி விஜயன், மம்தா பானார்ஜி மற்றும் முக ஸ்டாலின், இதில் பினராயி விஜயன், மம்தா பானார்ஜி இருவரும் இப்போது மாநில முதல்வர்கள். இவர்கள் இருவரும் மீண்டும் வெற்றி வெற்றால், நிச்சயம் பாஜகவிற்கும், பிரதமர் மோடிக்கும் எதிராக முன்பைவிட கொள்கை ரீதியாக, திட்டங்களை செயல்படுத்துவதற்கு எதிராக கடும் எதிர்வினைகள் ஆற்றுவார்கள். எனவே அதை தடுக்க பாஜக கடும் முயற்சி செய்து வருகிறது.
மோதும் பாஜக
மூன்றாவது நபர் திமுக தலைவர் முக ஸ்டாலின். இவர் தமிழகத்தின் முதல்வரானால், தமிழகத்தின் காலூன்ற வேண்டும் என்ற பாஜகவின் ஆசையை நிராசையாக்கிவிடுவார் என்பதுடன், தமிழகத்தில் பாஜக விரும்பும் எந்த திட்டத்தையும் நிறைவேற்ற விடமாட்டார் என்பதால் மிகமிக ஆக்ரோஷமாக திமுகவுடன் மோதுகிறது பாஜக. அதனால் தான் அதிமுகவுடன் முதல்முறையாக சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து சந்திக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க வெற்றி பெற்று, வாக்கு சதவீதத்தை உயர்த்த முயற்சி செய்கிறது. ஆனால் கருத்துக்கணிப்புகள் பாஜகவிற்கு சாதகமாக இல்லை.
அதிரடியில் பாஜக
மேற்கு வங்க மாநிலத்தை பொறுத்தவரை கடந்த தேர்தலில் 10 சதவீதமாக இருந்த பாஜகவின் வாக்கு வங்கி இந்த முறை மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் அரசுக்கு சவால் விடும் வகையில் உயர்ந்திருப்பதாக சொல்லப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக 19 இடங்களை வென்று அதிர்ச்சி அளித்தது திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களில் மட்டுமே வென்றது. அதன்பிறகு தான் பாஜக அதிரடியான வியூகம் வகுத்து மேற்கு வங்க தேர்தலை சந்தித்து வருகிறது. இரண்டு வருடங்களாக பாஜக நடத்திய களப்பணியை பார்த்து திரிணாமுல் காங்கிரஸ் ஆடிப்போய் கிடக்கிறது. மம்தா தான் மீண்டும் முதல்வராக வருவார் என்று எல்லா கணிப்புகளும் சொன்னாலும், பீகார் கதையாக ட்விட்ஸ்ட் வருமோ என்று பெரும் அச்சத்தில் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளது. ஏனெனில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு நிகராக பாஜகவும் வெற்றி பெறும் என்று கணிப்புகள் சொல்லியிருக்கின்றன.
பாஜக போராட்டம்
கேரளாவை பொறுத்த வரை கிட்டத்தட்ட தமிழகத்தைபோல் தான். ஆனால் தமிழகத்தைவிட கேரளாவில் பாஜகவிற்கு வாக்கு வங்கி அதிகம். கேரளாவில் வாக்கு சதவீதம் கணிசமாக உள்ளது. திரிச்சூர், பத்தினம்திட்டா, திருவனந்தபுரம் பகுதிகளில் அதிகம். தற்போதைய தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை என்றாலும் இப்போது உள்ள இடதுசாரிகள் ஆட்சியை வீழ்த்த கடும் முனைப்பை காட்டி வருகிறது பாஜக. ஆனால் கணிப்புகள் பினராயிக்கு சாதகமாக உள்ளது. இருப்பினும் மேற்கு வங்கம் போல் கேரளாவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த போராடி வருகிறது பாஜக.
பாஜகவிற்கு பாதிப்பு
தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் இந்த மூன்று மாநிலங்களில் ஒன்றில் வென்றாலும் அது பாஜகவிற்கு மிகப்பெரிய வெற்றி தான். ஆனால் மூன்று மாநிலங்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணிகளால் வெல்ல முடியாமல் போனால், 2024 தேர்தலில் பாஜகவிற்கு நிச்சயம் கடும் சிக்கலை ஏற்படுத்தக்கூடும். ஏனெனில் ஸ்டாலின், மம்தா பானர்ஜி, பினராயி விஜயன் மூன்று பேருமே பாஜகவையும், மோடியையும் கடுமையாக எதிர்த்து வருபவர்கள். சித்தாந்த ரீதியாக வென்று ஆட்சியை பிடித்து வரும் பாஜகவிற்கு இவர்களின் எழுச்சி, பாஜக ஆளும் மாநிலங்களிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.