3 மாநிலங்களில் காங்கிரஸ் பெற்ற அபார வெற்றியால், திமுக கூட்டணிக்குள் குழப்பமா?
Recommended Video
சென்னை: தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டுமா, என்ற வார்த்தையை அடிக்கடி கேள்விப்பட்டிருப்பீர்கள். அப்படித்தான் உள்ளது இப்போது திமுக கூட்டணி நிலையும்.
வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி, திமுகவுடன் கூட்டணி அமைத்து களமிறங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், திருமாவளவன், கமல்ஹாசன் போன்ற கட்சித் தலைவர்களுடன் டெல்லியில் ராகுல் காந்தி நடத்திய சந்திப்புகள், காங்கிரசும், திமுகவும் விலகிச் செல்கிறதோ என்ற ஐயப்பாட்டை ஏற்படுத்தியிருந்தது.
பல தகவல்கள்
ஆனால் காங்கிரஸ் கட்சிதான் கொள்கைரீதியாக திமுகவுக்கு சரியாகப் பொருந்திப் போகும் என்ற கருத்து இரு கட்சிகளின் முக்கிய தலைவர்களாாலும் முன்வைக்கப்பட்டு வருகிறது. லோக்சபா தேர்தலில் தொகுதிகள் ஒதுக்கீட்டில், உடன்பாடு எட்டப் படவில்லை என்றால், பிற சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தமிழகத்தில் போட்டியிடலாமா என்று காங்கிரஸ் யோசித்து வருவதாக சில தகவல்கள் தெரிவித்தன.
தேர்தல் அனுபவம்
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பல இடங்களில் அதன் வேட்பாளர்கள் தோல்வியடைந்தனர். திமுக கூட்டணி ஆட்சிக்கு வர முடியாததற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணமாக மாறிவிட்டது. எனவேதான் பெரும்பான்மை நெருங்கிய போதிலும் 1.1 சதவீத வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பை இழந்தது திமுக.
போட்டியிட திட்டம்
எனவே வரும் லோக்சபா தேர்தலின் போது காங்கிரஸ் கட்சிக்கு வழக்கத்தைவிட மிக குறைவான தொகுதிகளை ஒதுக்கி விட வேண்டும் என்பது திமுகவில் உள்ள பல தலைவர்களின் கருத்தாக உள்ளதாம். காங்கிரஸ் கட்சியும் வேறுவழியின்றி இதை ஏற்றுக்கொண்டு போட்டியிடலாம் என்ற மனநிலையில்தான் இதுவரை இருந்தது.
செல்வாக்கு குறைந்திருந்தது
தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டு வந்தது. 5 மாநில தேர்தல்களுக்கு முன்பாக மிசோராம், பஞ்சாப் ஆகியவற்றில்தான் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. கர்நாடகாவில் காங்கிரசின் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. பிற மாநிலங்களில் துடைத்து எறியப்பட்டது. தமிழகத்திலும், இலங்கை இனப்படுகொலைக்கு பிறகு அதன் செல்வாக்கு குறைந்து விட்டது என்பது கடந்த தேர்தல்களில் எதிரொலித்தது. ஆனால், இப்போது காங்கிரஸ் கட்சிக்கு புது உத்வேகம் கிடைத்துள்ளது. புது ரத்தம் பாய்ந்து சுறுசுறுப்பு அடைந்துள்ளது.
ஹாட்ரிக் வெற்றி
மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஹாட்ரிக் வெற்றியை பெற்று அரியணையில் அமரப் போகும் ஆரவாரத்தில் உள்ளது காங்கிரஸ் கட்சி. பாஜகவை எதிர்க்கும் அளவுக்கு அகில இந்திய அளவில் காங்கிரஸ் வளர்ந்துவிட்டதாக அரசியல் பண்டிதர்கள் சொல்லிவருகின்றனர். இங்குதான் திமுகவுக்கு வருகிறது சிக்கல். காங்கிரசின் இந்த வளர்ச்சி காரணமாக கூடுதல் தொகுதி கேட்க, காங். தலைவர்கள் இப்போதே திட்டமிட்டுள்ளனர்.
பெரியண்ணன் இடம் போய்விட்டது
இதுவரை கொடுத்ததை பெறுவார்கள் என்ற மனநிலையில் இருந்து திமுக இதை எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறது என்று தெரியவில்லை. பெரியண்ணன் என்ற இடத்தில் இப்போது திமுகவிற்கு பதில் காங்கிரஸ் வந்துவிட்டது. அதேநேரம் காங்கிரஸை விட்டுவிட்டு தனித்து போட்டியிடும் திமுக விரும்பவில்லை. எனவே இப்போது பந்து திமுகவின் கோட்டைக்கு வந்துள்ளது. காங்கிரஸின் கை ஓங்கியுள்ளது. தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியுமா, இடர்பாடுகளுக்கு காரணமாகுமா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.