எங்க பார்த்தாலும் திராவிடமா? சுதந்திர போராட்ட வரலாற்றையே மறைச்சிட்டாங்க.. ஆளுநர் ரவி விமர்சனம்!
சென்னை: தமிழக பல்கலைக்கழக பாடங்களில் திராவிடம் குறித்த வரலாறுகள் தான் அதிகம் உள்ளன, சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறு குறித்த பாடங்கள் இல்லை, ஆங்கிலேயர்களுக்கு புகழாரம் சூட்டும் வகையில் மாணவர்களுக்கு தற்போது தமிழ்நாட்டில் கற்பிக்கப்படுகிறது என ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், பி.செந்தில்குமார் எழுதிய பாஞ்சலங்குறிச்சி போர்கள் என்ற நூல் வெளியிட்டு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர் ரவி, "தமிழக பல்கலைக்கழகங்களில் நடத்தப்படும் பாடங்களில் சுதந்திரப் போராட்ட வரலாறு குறித்த பாடங்கள் இல்லை. திராவிடம் குறித்த வரலாறுகள் தான் அதிகமாக உள்ளன.

பாடப் புத்தகங்களில் ஆங்கிலேயர் குறித்த தகவல்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளன. 19ஆம் நூற்றாண்டு மிகவும் சிறப்பானது என்றும், ஆங்கிலேயர்கள் சிறந்தவர்கள், இங்கு சமூக நீதியை கடைபிடித்தார்கள். நமக்கு நல்லது செய்தார்கள் என்றெல்லாம் புகழாரம் சூட்டும் வகையில் மாணவர்களுக்கு தற்போது தமிழ்நாட்டில் கற்பிக்கப்படுகிறது. 10 லட்சம் இந்தியர்களை கொத்தடிமைகளாக்கிய ஆங்கிய அரசு சிறப்பானதா?
பிரிட்டிஷார் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் கல்வி முறையைச் சீரழித்துவிட்டனர். கல்லூரி பாட புத்தகங்களில் கட்டபொம்மன், மருது சகோதரர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள் பற்றிய பாடங்கள் இல்லை. தமிழக அரசிடம் சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்த பட்டியலைக் கேட்டபோது 30 பேர் கொண்ட பட்டியலை அனுப்பினர். நாகாலாந்தில் 100 முதல் 1000 சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பார்க்கலாம். எனவே இந்த எண்ணிக்கை தமிழகத்தில் எப்படி மிகவும் குறைவாக இருக்கும்?
திராவிட வரலாறு, பிற விஷயங்களைப் பேசி சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றிச் சிந்திக்க மறந்துள்ளனர். நாட்டின் எந்த பகுதியிலும் இல்லாத அளவுக்கு அறிவுஜீவி தலைவர்கள், கவிஞர்கள், தத்துவவாதிகளை தமிழகம் உருவாக்கியுள்ளது. திருவள்ளுவர் மற்றும் ஷேக்ஸ்பியர் இருவரையும் பற்றி ஒப்பிட்டு சில அறிவாளிகள் புத்தகம் எழுதுவது எனக்கு வலிக்கிறது, ஷேக்ஸ்பியர் யார்?" எனத் தெரிவித்தார்.
தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி கடந்த 2021ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். ஆரம்பம் முதலே, திமுக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே பனிப் போர் நீடித்து வருகிறது. அரசு நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போடுவதாகவும், இதனால் அரசின் செயல்பாடுகள் முடங்குவதாகவும் திமுக குற்றம்சாட்டியது.
ஆளுநர் ஆர்.என்.ரவி திமுக அரசை கடுமையாகத் தாக்கிப் பேசி வருகிறார். திராவிடம் தொடர்பாகவும், சமூக நீதி குறித்தும் கடுமையாக விமர்சனங்களை முன்வைப்பதோடு சனாதனத்தையும் உயர்த்தி பேசி வருகிறார். இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் தான் ஆளுநர் மீண்டும், பல்கலைக்கழக பாடத்திட்டம் குறித்து விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications