12 -14 வயது சிறுவர்களுக்கு 'கோர்பே வேக்ஸ்' கொரோனா தடுப்பூசி.. இன்று முதல் செலுத்தும் பணி தொடங்கியது!
சென்னை: இந்தியாவில் 12 முதல் 14 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி இன்று முதல் தொடங்கப்படுகிறது. தமிழகத்தில் இந்த வயது பிரிவில் சுமார் 31 லட்சம் பேர் இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
2019 சீனாவின் வூகான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவி பேரழிவை ஏற்படுத்தியது. ஒட்டுமொத்த உலகமும் லாக்டவுனில் சென்றது. லட்சக்கணக்கானோர் கொரோனா வைரஸால் உயிரிழந்தனர்.
கொரோனா வைரஸுக்கு தீர்வாக மருத்துவ உலகம் கைகாட்டியது தடுப்பூசியைத் தான். இதனால் கடந்த ஆண்டு துவக்கம் முதல் உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.

இந்தியாவில் தடுப்பூசி
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஆண்டு ஜனவரி 16-ந் தேதி தொடங்கியது. முதலில், சுகாதார பணியாளர்களுக்கும்,முன்கள பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதையடுத்து 60 வயதை கடந்தவர்கள், 45 வயதை தாண்டிய அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டது. 18 வயதை தாண்டியவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதன் அடுத்தகட்டமாக 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கடந்த ஜனவரி 3-ந் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

சிறுவர்களுக்கு தடுப்பூசி
இந்நிலையில் 12 வயதை தாண்டிய சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து சிறுவர்களுக்காக 'கோர்பேவேக்ஸ்' என்ற தடுப்பூசிக்கு இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்தது. இந்த தடுப்பூசியை ஐதராபாத்தை சேர்ந்த பயாலஜிக்கல் இவான்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த தடுப்பூசி தொடர்பான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு பரிந்துரை செய்தது. இதையடுத்து, இன்று முதல் 12-14 வயது சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

முகாம்கள்
சிறுவர்களுக்கான தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஆன்லைன் மூலமாகவோ, தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்களிலோ பதிவு செய்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். இந்த தடுப்பூசிகள் 28 நாள் இடைவெளியில் 2 டோஸ்கள் செலுத்திக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போடுவதற்கு 12 வயது நிறைவு செய்திருக்க வேண்டும். 12 முதல் 14 வயது வரையிலான பிரிவினருக்கு பிரத்யேக அமர்வுகள் மூலம் தடுப்பூசி போடப்படுகிறது. இவர்களுக்கு கொரோனா தடுப்பூசி மையங்களில் தனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேறு எந்த தடுப்பூசிகளையும் அவர்கள் திட்டமிடாத நிலையில் போட்டுவிடக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக சுகாதாரத்துறை
சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து தமிழக சுகாதாரத்துறை கூறுகையில், ''12-14 வயதுடைய சிறுவர்களுக்கு இன்று முதல் பள்ளிகளிலேயே தடுப்பூசி செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த வயது பிரிவில் 31 லட்சம் சிறுவர்கள் இருப்பதாக கணக்கெடுப்பின் மூலம் தெரிய வருகிறது. அவர்களுக்கு 'கோர்பேவேக்ஸ்' தடுப்பூசி போடுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 21 லட்சம் 'கோர்பே வேக்ஸ்' தடுப்பூசிகள் தற்போது கையிருப்பில் உள்ளன. தமிழகம் முழுவதும் சுகாதாரத்துறை மூலம் அரசு, உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி மற்றும் தனியார் பள்ளிகளில் தடுப்பூசி முகாம்கள் மூலம் இந்த பணி விரைவுபடுத்தப்படும்'' என்று கூறியுள்ளது. கொரோனா அடுத்த அலை வருவதற்குள் சிறுவர்க்ளுக்கு விரைவில் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications