சென்னையில் கொரோனா 2வது அலை? ஒரே நாளில் 3 மடங்கு அதிகரித்த கட்டுப்பாட்டு பகுதி எண்ணிக்கை
சென்னை: சென்னையில் ஒரே நாளில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.
படிப்படியாக சென்னையில் கொரோனா நோய் தொற்று பாதிப்பு குறைந்து வருவதாக கருதப்பட்ட நிலையில், கட்டுப்பாட்டு மண்டலங்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் ஒரு கட்டத்தில், கொரோனா வைரஸ் மிகவும் அதிகமாக பரவிய நிலையில், அடுத்தடுத்த ஊரடங்கு உத்தரவுகளால், படிப்படியாக அது கட்டுப்பாட்டுக்குள் வந்தது. தற்போது பொதுபோக்குவரத்து உட்பட பல்வேறு தளர்வுகள் அமலில் உள்ளதால், மீண்டும் தொற்று அதிகரித்துள்ளது என்கிறது புள்ளி விவரங்கள்.

குறைந்த கொரோனா
செப்டம்பர் 23ஆம் தேதி சென்னையில் கொரோனா நோய்க்காக சிகிச்சை பெற்றவர்கள் எண்ணிக்கை 9 ஆயிரத்து 868 மட்டுமே. ஆனால் இதன் பிறகு தினசரி பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரி பதிவாகும், கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை குறைந்தது 1000 என்ற அளவுக்கு மேலே இருக்கிறது.

திடீரென அதிகரிக்கிறது
இதன் விளைவாக, செப்டம்பர் 23ம் தேதி இருந்த நிலை அப்படியே மாறிப் போய், நேற்றைய நிலவரப்படி 12,253 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதிலும், திருவிக நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையார் மண்டலங்களில் குறைந்தது 1000த்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். இதுதான் சென்னையில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதி ஆகும்.

தினசரி கேஸ்கள்
சென்னையில் தினசரி கேஸ் எண்ணிக்கை அதிகரிப்பு என்பது 2.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. சோழிங்கநல்லூர், வளசரவாக்கம் மற்றும் பெருங்குடி ஆகிய மூன்று மண்டலங்களில் மட்டும் புதிய கேஸ் எண்ணிக்கை நெகட்டிவ் நிலையில் உள்ளது. அதாவது குறைந்து கொண்டிருக்கிறது. எஞ்சிய 12 மண்டலங்களில் பாதிப்பு அதிகரித்து கொண்டு இருக்கிறது.

மூன்றரை மடங்கு
திருவொற்றியூர் மண்டலத்தில் 9.6 சதவீதம் என்ற அளவுக்கு புதிய கேஸ்களில் அதிகரித்துள்ளது. சென்னையிலேயே மிக அதிகமான புதிய கேஸ்களை பதிவு செய்யும் மண்டலம் இதுதான். இந்த நிலையில்தான் நேற்று வரை சென்னையில் 10 இடங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியாக இருந்தது. இன்று 36 இடங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளன. அதாவது சுமார் மூன்றரை மடங்கு அதிகரிப்பு இதுவாகும்.

இரண்டாவது அலை
பொதுமக்கள் சமூக இடைவெளி இன்றி நெருக்கமாக பழகுவது, முககவசம், கை கழுவும் விஷயங்களில் அலட்சியம் காட்டுவது உள்ளிட்டவை நோய் பரவக் காரணமாக கூறப்படுகிறது. சென்னையில், கொரோனா 2வது அலையை சந்திக்காமல் தடுக்க வேண்டிய பொறுப்பு, பொதுமக்களின் கையில் இருக்கிறது. கட்டுப்பாட்டு மண்டலங்கள் அதிகரித்துள்ளது இதற்கான எச்சரிக்கை மணியாக பார்க்கப்படுகிறது.

மெரினாவில் அனுமதியில்லை
இதனிடையே, சென்னை மெரினா கடற்கரையில் வரும் 31ம் தேதி வரை பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்று மாநகராட்சி இன்று வழக்கு ஒன்றின்போது உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. பூங்காக்கள், தியேட்டர்கள் உள்ளிட்டவற்றுக்கான தடையும் தமிழகத்தில் நீடிக்கிறது. மத்திய அரசு ஒரு பக்கம், வரும் 15ம் தேதி முதல் திரையரங்குகளை, 50 சதவீத இருக்கை வசதியுடன் திறந்து கொள்ள அனுமதி வழங்கி இருந்தபோதிலும், தமிழக அரசு இந்த விஷயத்தில் உறுதியாக இருக்கிறது. இந்த நிலையில்தான் சென்னையில் கட்டுப்பாட்டு மன்றங்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications