கொரோனா ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? - மருத்துவ குழுவினருடன் முதல்வர் மு.க ஸ்டாலின் நாளை ஆலோசனை
கொரோனா பரவலை கட்டுப்படுத்த வழிமுறைகள் குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்க அமைக்கப்பட்ட ஆலோசனை குழுவின் முதல் கூட்டம் வரும் சனிக்கிழமை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.
சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? தளர்த்தப்படுமா என்பது குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் நாளை ஆலோசனை நடத்தி அறிவிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை காலையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும் உறுப்பினர்களின் கருத்துக்கள் கேட்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கூட்டத்தை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ வல்லுனர்கள் குழுவுடனும் முதல்வர் ஆலோசனை நடத்த இருக்கிறார்.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் இரவு 10 முதல் காலை 4 மணி வரை இரவுநேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் ஏற்கனவே அமலில் உள்ளன. இருப்பினும், கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால், கடந்த 10ஆம் தேதி முதல் வருகிற 24ஆம் தேதி காலை 4 மணி வரை இரு வாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு கூடுதல் கட்டுப்பாடுகளுடன் அமல்படுத்தப்பட்டது.
தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?: மே 22-ல் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.. பங்கேற்க போகும் 13 பேர்!
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது ஒரே நாளில் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 350க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். சென்னையில் 6,073 பேருக்கு கொரோனா பாதிப்பு கோவையில் 3335 பேருக்கும் செங்கல்பட்டில் 2092 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. படிப்படியாக கொரோனா பரவல் குறைந்து வருவது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
முழு ஊரடங்கு
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முழு ஊரடங்கை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும், கொரோனா தொடர்பாக ஆலோசனை வழங்க குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.
அதனடிப்படையில், அரசுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்க 13 உறுப்பினர்களை உள்ளடக்கிய சட்டமன்ற உறுப்பினர்கள் குழு அமைக்கப்பட்டதுடன், ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
மருத்துவர்கள் அறிவுறுத்தல்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு வருகிற 24ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. ஆனால், இந்த முழு ஊரடங்கு என்பது பாதிப்பை கட்டுப்படுத்த போதுமானதாக இருக்காது என்றும், கட்டுப்பாடுகளை அதிகரித்து ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். அதன்படி, ஊரடங்கை மேலும் நீட்டிக்க அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
கொரோனா பரவல் குறித்து ஆய்வு
இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சேலம், திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்தார். திருப்பூரில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி திட்டத்தையும் தொடங்கி வைத்தார். இரண்டாவது நாளாக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று காலை மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அரசு அதிகாரிகள், அமைச்சர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.
பேருந்து நிலையம்
இதனை தொடர்ந்து தோப்பூரில் 500 ஆக்சிஜன் படுக்கை வசதியுடன் தயாராகி வரும் சிறப்பு வார்டை முதல்வர் ஆய்வு செய்து திறந்து வைக்கிறார். மதுரையில் இருந்து திருச்சி செல்லும் மு.க.ஸ்டாலின், பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைய உள்ள இடத்தைப் பார்வையிடுகிறார்.
முதல்வர் ஆலோசனை
இதனிடையே சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை 22ஆம் தேதி சனிக்கிழமை காலையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும் உறுப்பினர்களின் கருத்துக்கள் கேட்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கூட்டத்தை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ வல்லுனர்கள் குழுவுடனும் முதல்வர் ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் ஊரடங்கு நீடிக்கப்படுமா
இந்த கூட்டங்களில் பெறப்படும் கருத்துக்கள் அடிப்படையில் ஊரடங்கு நீட்டிப்பது குறித்தும் கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்துவது குறித்தும் அரசு முடிவெடுக்கலாம் என கூறப்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தற்போது அமலில் உள்ள ஊரடங்கை மேலும் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட அதிக வாய்ப்புள்ளதாக தலைமைச் செயலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.