தமிழகத்தில் கோவிட் -19 உதவி மையங்கள்... போட்டி போட்டு உதவத் தொடங்கிய பாஜக -காங்கிரஸ்..!
சென்னை: நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை தீயாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் சார்பாக கோவிட் -19 உதவி மையங்கள் தொடங்கப்பட்டு அதன் மூலம் பொதுமக்களுக்கு சேவை செய்யப்படுகின்றன.
அரசியலில் எதிரும் புதிருமாக செயல்படும் இந்த இரண்டு கட்சிகளும் கொரோனா தடுப்பு பணிகளில் போட்டி போட்டுக் கொண்டு செயல்படத் தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு காரணம் அந்த இரண்டு கட்சிகளின் டெல்லி தலைமையில் இருந்து வந்த அறிவுறுத்தல்கள் தான்.
நாடு முழுவதும் பாஜக நிர்வாகிகள் கொரோனா தடுப்பு பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் மாவட்ட வாரியாக நிர்வாகிகள் கொரோனா தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் எனவும் அக்கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அந்த வகையில் கோவையில் கொரோனா தடுப்பூசி செலுத்த செல்வோருக்கு இலவச வாகன வசதி செய்து கொடுத்திருக்கிறார் பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன். இதேபோல் சென்னையில் பாஜக மாநில துணை தலைவர் எம்.என்.ராஜா தலைமையில் கொரோனா சேவை இயக்கம் உருவாக்கப்பட்டு பொதுமக்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படுகின்றன.
இதனிடையே பாஜகவுக்கு சற்றும் சளைக்காத வகையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பிலும் கோவிட் 19- உதவி மையங்கள் தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையங்களின் ஒருங்கிணைப்பு பணியை விருப்ப ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். சசிகாந்த் செந்தில் முன்னெடுத்துச் செல்கிறார்.
தேர்தல் தான் முடிந்துவிட்டதே எனக் கருதாமல் இவ்விரு கட்சிகளும் கொரோனா காலத்தில் மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்ய முன்வந்திருப்பது பாராட்டத்தக்கது.