குவியும் நோயாளிகள்... பரபரக்கும் மருத்துவமனைகள்.. பணிச்சுமையால் பரிதவிக்கும் செவிலியர்கள்..!
சென்னை: தமிழகத்தில் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வரும் சூழலில் மருத்துவமனைகளை நோக்கி நோயாளிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் அவர்களை பராமரிக்கும் உன்னத சேவையில் ஈடுபட்டு வரும் செவிலியர்கள், தங்களுக்கு ஏற்பட்டுள்ள பணிச்சுமையால் பரிதவித்து வருகின்றனர். தனியார் மருத்துவமனைகளை காட்டிலும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் செவிலியர்களின் நிலை இன்னும் பரிதாபமாக உள்ளது.

10 செவிலியர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 4 செவிலியர்கள் மட்டுமே பணியமர்த்தப்படுவதாகவும், கொரோனா முதல் அலையின் போது வழங்கப்பட்ட எந்த சலுகைகளும் இப்போது வழங்கப்படுவதில்லை என்பதும் அவர்களது புகாராக உள்ளது. இது தொடர்பாக நம்மிடம் பேசிய ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையின் மூத்த செவிலியர் ஒருவர், நாளொன்றுக்கு 14 மணி நேரம் வரை டூட்டி பார்க்க வேண்டிய நிலை உள்ளதாக கூறுகிறார்.
கொரோனாவின் தொடக்க காலத்தில் இரவு ஷிப்ட் இரண்டாக பிரிக்கப்பட்டு மாலை 7 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை ஒரு குழுவும் மீண்டும் நள்ளிரவு 1 மணி முதல் காலை 7 மணி வரை மற்றொரு குழுவும் இரண்டு பேட்ஜ்களாக பிரித்து பணியமர்த்தப்பட்டதாகவும், ஆனால் இப்போதோ செவிலியர் ஒருவர் 14 மணி நேரம் வரை டூட்டி பார்க்க வேண்டிய நிர்பந்தம் உள்ளதாகவும் வேதனை தெரிவித்தார்.
மேலும், கொரோனா வார்டுகளில் கடந்தாண்டை விட இப்போது அதிக எண்ணிக்கையில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பராமரிக்கும் பொறுப்பு என்பது மிகப்பெரியது. எங்களது நிலையை அறிந்து இப்போது தான் சில தன்னார்வலர்கள் உதவ முன்வந்திருக்கிறார்கள். எங்களுக்கு உணவு, ஸ்நாக்ஸ் உள்ளிட்டவைகளையும் அவர்கள் கொடுக்க முன் வந்திருக்கிறார்கள் எனக் கூறினார்.
இதனால் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களை எந்த தாமதமுமின்றி அரசு நிரப்ப முன்வந்தால் மட்டுமே தங்கள் பணிச்சுமை ஓரளவாவது குறையக் கூடும் என்கிறார் அந்த மூத்த செவிலியர்.












Click it and Unblock the Notifications