தமிழகத்தில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா.. அன்றே எச்சரித்தார் விஜயபாஸ்கர்
சென்னை: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முன்பே எச்சரித்தது போலத்தான், தமிழகத்தில் மின்னல் வேகத்தில் கொரோனா பரவிவருகிறது என்பதை இப்போது புள்ளி விவரங்கள் உறுதிபட தெரிவிக்கின்றன.
Recommended Video
தமிழகத்தில் ஆரம்பத்தில் ஒருவருக்கோ, இருவருக்கோதான் கொரோனா வைரஸ் தாக்கம் இருந்தது. அப்போதுதான் மார்ச் 23ம் தேதி அனைத்து மாவட்ட எல்லைகளையும் சீல் வைப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
எதற்காக இவ்வளவு பெரிய நடவடிக்கையை முதல்வர் எடுக்கிறார் என்று அப்போது பலருக்கும் புரியவில்லை.
ஆனால் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அடுத்த நாள், அதாவது மார்ச் 24ம் தேதி அளித்த பேட்டியின்போது, தமிழகத்தில் மின்னல் வேகத்தில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. எனவே பொதுமக்கள் விழிப்போடு இருக்கவேண்டும். வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதுவரை கொரோனா கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக அமைச்சர் கூறி வந்த நிலையில், திடீரென அவர் அளித்த இந்த பேட்டி பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. ஆனால், அந்த வியப்புக்கு தற்போது விடை கிடைத்துள்ளது.
சமீபகாலமாக செய்தியாளர்களுக்கு விஜயபாஸ்கர் பேட்டி அளிப்பதில்லை. சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்தான் பேட்டி அளித்து வருகிறார். கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்த நேரத்தில்தான், அவரும் பிரஸ்மீட் செய்வதற்கு ஆரம்பித்தார் என்று தெரிகிறது.
கொரோனா முன்னெச்சரிக்கை.. இன்று இரவு முதல் 50 பகுதிகள் முழுமையாக அடைக்கப்படும்: திருச்சி கலெக்டர்
ஏனெனில் அவர் பேட்டிகளை ஆரம்பித்த பிறகு தினமும் வைரஸ் பாதிப்பு என்பது பல மடங்காக அதிகரித்து வருகிறது. இப்போது இந்தியாவிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் என்ற வரிசையில் இரண்டாவது இடத்தை தமிழகம் பிடித்துள்ளது. முதலிடத்திலுள்ள மகராஷ்டிராவுக்கும் தமிழகத்திற்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை, எந்த நேரத்தில் வேண்டுமானாலும் முதலிடத்தைப் பிடித்து விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.
இவ்வளவு தூரம் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக தெரிவிப்பது டெல்லியில் நடைபெற்ற மத மாநாட்டில் பங்கேற்று திரும்பி அவர்களுக்கு எடுக்கப்பட்ட சோதனை முடிவுகள் வெளியாகும் ரிசல்ட் என்கிறார்கள். அவ்வாறு டெல்லியிலிருந்து திரும்பியவர்கள், பலரிடமும் பழகி இருக்கக்கூடும். அவர்களிடம் எல்லாம் சோதனை நடத்தி இன்னமும் சோதனை முடிவுகள் வந்தபாடில்லை. அந்த முடிவுகள் வரும் பட்சத்தில் இன்னும் பாதிப்பு அதிகமாக இருக்குமா என்ற ஐயம் எழுகிறது.
ஆனால் டெல்லி மாநாட்டுக்குச் சென்று திரும்பியவர்கள் மட்டுமே நோய் அதிகரிப்புக்கு காரணமா என்று தெரியவில்லை. ஏனெனில் இந்த மாநாடு விவகாரம் வெளியாகும் முன்பே விஜயபாஸ்கர் தமிழகத்தில் மின்னல் போல வைரஸ் பாதிப்பு பரவி வருவதாக தெரிவித்திருந்தார்.
சுகாதாரத்துறை அமைச்சருக்கு கண்டிப்பாக, மற்றவர்களை விட அதிகமாக, பல தகவல்கள் தெரிந்து இருக்கும். அந்த அடிப்படையில்தான் அவர் இவ்வாறு கூறியிருக்க கூடும். இந்தப் பேட்டிக்கு பிறகு விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்திப்பதை குறைத்துக் கொள்வதை பார்க்கும்போது, அவர் கூறியதை போலவே தமிழகத்தில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதையும் பார்க்கும்போது, மின்னல் வேகம் என்று அவர் சொன்னது பெரிய வார்த்தை இல்லை என்று தோன்றுகிறது.
ஏப்ரல் 1ம் தேதி தமிழகத்தில் மொத்தம் 234 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அன்று ம ட்டும் 110 பேர் புதிதாக பட்டியலில் சேர்ந்தனர். இன்றைய நிலவரப்படி 485 பேருக்கு பாதிப்பு தெரியவந்துள்ளது.
எனவே பொதுமக்கள் தங்களை தாங்களே காத்துக் கொள்வது மிகவும் அவசியம். எந்த காரணத்தை கொண்டும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். கூட்டமாக சேர வேண்டாம், கைகளை அடிக்கடி கழுவுங்கள், அதுதான் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள இருக்கும் ஒரே வழிமுறை.