தமிழகத்துக்கு பெரும் பின்னடைவு.. அதிகரிக்கும் கொரோனா கேஸ்கள்.. 2வது இடத்தை பிடித்தது
தமிழகம் இந்திய அளவில் தொற்று பாதிப்பில் 2-ம் இடத்தை பிடித்துள்ளது
சென்னை: அகில இந்திய அளவில் அதிக கொரோனா கேஸ்கள் பாதிப்பில் தமிழகம் 2வது இடத்திற்குப் போய் விட்டது. என்னென்னவோ செய்தும் கூட இந்த பாதிப்பை நம்மால் இன்னும் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டிருப்பது அதிர்ச்சி தருகிறது.
உலக அளவில் ஒருபக்கம் இந்தியா படு வேகமாக அதிக பாதிப்புகளுக்கு ஆளான நாடுகள் வரிசையில் மேல்நோக்கி போய்க் கொண்டுள்ளது என்றால் மாநில அளவில் தமிழ்நாடு படு வேகமாக 2வது இடத்தை எட்டிப் பிடித்து விட்டது.
ஒரு சில நாட்களில் சரியாகி விடும் என்றெல்லாம் நம்பிக்கை அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது போய்க் கொண்டிருக்கும் வேகத்தைப் பார்த்தால் இந்தியாவிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் உருவெடுத்து விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.
இந்திய அளவில் தொடர்ந்து மகாராஷ்டிரா முதலிடத்தில் இருக்கிறது. அங்கு இதுவரை கிட்டத்தட்ட 95 ஆயிரம் பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அங்கு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 44,516 ஆக உள்ளது. உயிரிழந்தவர்கள் இதுவரை 3438 பேராகும்.
அடுத்த இடத்தை தமிழகம் பிடித்துள்ளது. அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இதுவரை 37,000 பேர். அதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் 17,182 பேர். குணமடைந்தோர் தமிழகத்தில் அதிகம்தான். அதாவது 19,333 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு 326 ஆக உள்ளது.
அலறும் இந்தியா.. கதற விடும் கொரோனா.. கொஞ்சமும் அடங்கலை.. ஒரே நாளில் 9,996 பேர் பாதிப்பு..!
நமக்கு அடுத்த இடத்தில் டெல்லி உள்ளது. அங்கு நம்மை விட பாதிப்பு குறைவுதான் என்றாலும் கூட மரணம் மிக மிக அதிகம். அதாவது 984 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்த இடத்தில் குஜராாத் வருகிறது. குஜராத்தில் 21 ஆயிரத்து சொச்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1347 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் வரிசையில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி , குஜராத் ஆகியவை முதல் இடங்களில் இருப்பது கவலை தருவதாக உள்ளது. விரைவில் இவர்கள் மீண்டு வந்தால்தான் இந்தியாவின் பொருளாதாரத்தையும் விரைவாக மீட்க முடியும். எனவே இந்த மாநிலங்களில் கொரோனா பரவலை வேகமாக கட்டுப்படுத்த அதி விரைவான நடவடிக்கைகள் அவசியமாகும்.