கடலூர், விழுப்புரம்,கள்ளக்குறிச்சியில் கனமழை... குறைந்த காற்றழுத்தம் - வானிலையின் கூல் அறிவிப்பு
தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கடலூர், விழுப்புரம்,கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை சற்றே ஓய்வெடுத்துள்ளது. சில மாவட்டங்களில் அவ்வப்போது பெய்து வந்தாலும் மிதமான மழையாகவே உள்ளது. பல மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கடலூர், விழுப்புரம்,கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் நேற்று பகல் நேரத்தில் வெயில் சுட்டெரித்தாலும் மாலை நேரத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்டங்களில் 8 செமீ மழை பெய்துள்ளது. திருவிடைமருதூர், சிதம்பரத்தில் தலா 7 செமீ மழையும், மயிலாடுதுறையில் 6 செமீ மழையும் பதிவாகியுள்ளது. கள்ளக்குறிச்சி, பட்டுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, அரியலூர், பெரியகுளம், தேனி மாவட்டங்களிலும் நேற்று மாலை மழை பெய்துள்ளது.
இந்த நிலையில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று முதல் 22ஆம் தேதி வரைக்கும் வட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.

வானிலை மைய ஆய்வு இயக்குநர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் இன்று கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
நீலகிரி,கோயம்புத்தூர், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்கள்,புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஆகஸ்ட் 19ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர்,கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை,காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். ஆகஸ்ட் 20ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதேபோல் வருகின்ற 21 மற்றும் 22ஆம் தேதிகளில் ஒரு சில வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும்.
இன்று முதல் வருகிற 20ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் ஆகிய பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை மையம் அறிவிப்பு
இதனிடையே மேற்கு மத்திய வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குனர் மிருத்யுஞ்சய் மஹாபத்ரா தெரிவித்துள்ளார்.
தென்மேற்குப் பருவமழை வட இந்தியாவின் பல மாநிலங்களை சூறையாடியுள்ளது. நிலச்சரிவு, பெருவெள்ளத்திற்கு ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். மழை சற்றே ஓய்ந்திருந்தாலும் மழை ஏற்படுத்திய பாதிப்புகளும், மீட்பு பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இதனிடையே மேற்கு வங்காளம், ஒடிசா, பீகார், ஜார்க்கண்ட், கடலோர ஆந்திரா, தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் விதர்பா ஆகிய இடங்களில் பரவலாக பரவலாக மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடகிழக்கு இந்தியா மற்றும் மேற்கு வங்காளம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் கனமழையுடன் கூடிய பரவலான மழைப்பொழிவு தொடரும் என்றும் இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
சூறாவளி சுழற்சி காரணமாக வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த இரண்டு நாட்களில் ஆந்திர கடலோரப் பகுதிகளில் பரவலாக பரவலான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆந்திரா ஒடிசா கடற்கரையை ஒட்டிய தெற்கு மற்றும் மேற்கு மத்திய வங்கக் கடலில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வரை பலத்த காற்று வீசும் மற்றும் மணிக்கு 60 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications