எங்கே இருக்கிறார் மாஸ்டர் கனல் கண்ணன்? வலைபோட்டு தேடும் சைபர் கிரைம்! பெங்களூருவுக்கு தப்பி ஓட்டம்?
சென்னை : ஸ்ரீரங்கம் பெரியார் சிலை குறித்து அவதூறாக பேசிய தலைமறைவாக இருக்கும் கனல் கண்ணன் முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ள நிலையில் அவரை கைது செய்ய சைபர் கிரைம் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனிடைய கனல் கண்ணன் பெங்களூரு அல்லது வேறு ஊருக்கு தப்பி சென்று விட்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
சென்னை மதுரவாயலில் கடந்த 30ஆம் தேதி நடந்த இந்துக்களின் எழுச்சி நாள் பிரச்சர பயண நிறைவு பொது கூட்டத்தில் இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவு செயலாளரும் சினிமா ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் பங்கேற்று பேசினார்.
இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேசிய கனல் கண்ணன்," ஸ்ரீரங்கம் கோவில் வாசலில் உள்ள பெரியார் சிலையை உடைத்து அகற்றுகின்ற நாள் தான் இந்துக்களின் எழுச்சி நாளாக இருக்கும்' என்றார்.

பெரியார் சிலை
கனல் கண்ணனின் பெரியார் சிலை குறித்த இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிய நிலையில், பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து, சென்னை வேப்பேரியில் உள்ள சென்னை மாநகர கமிசனர் அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் மீது சென்னை சைபர் க்ரைம் போலீசார், கனல் கண்ணன் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

கனல் கண்ணன்
இதனையடுத்து கனல் கண்ணன் மீது கலகம் செய்யத் தூண்டுதல், அவதூறு செய்தி மூலம் பொதுமக்களிடையே விரோதத்தைத் தூண்டுவது ஆகிய பிரிவுகளின் கீழ் சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி, கனல் கண்ணன் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது. அதில் அவருக்கு ஜாமீன் வழங்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது.

கைது செய்ய தீவிரம்
இந்த நிலையில் ஜாமின் மறுக்கப்பட்டால் கனல் கண்ணனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். சென்னை மாநகர போலீசுடன் இணைந்து கனல் கண்ணனின் வீடு அலுவலகம் மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான வீடுகளை ரகசியமாக கண்காணித்து வரும் நிலையில் இன்று அல்லது நாளைக்குள் அவரை கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Recommended Video

பெங்களூருவில் தஞ்சம்
கனல் கண்ணின் செல்போனை வைத்து அவரை பிடிக்கும் நடவடிக்கைகள் தோல்வியடைந்துள்ள நிலையில் வேறு யாருடனாவது அவர் பேசியிருக்கிறாரா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சூழலில் கனல் கண்ணன் அடிக்கடி செல்லும் நண்பர்கள் வீடு உறவினர்களின் இல்லங்களிலும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவையும் பலன் கொடுக்காத நிலையில் கனல் கண்ணன் பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட சினிமா துறையினர் அடிக்கடி செல்லும் இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளாரா எனவும் சந்தேகிக்கும் போலீசார் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications