உருவானது ஜவாத் புயல்.. பயணம் செய்யப்போகும் பாதை எங்கே? அறிவித்த இந்திய வானிலை மையம்
சென்னை: மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 'ஜவாத்' புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வட கிழக்கு பருவமழை காலகட்டத்தில் சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் கன மழை கொட்டித் தீர்த்தது. நவம்பரில் 23 நாட்கள் சென்னையில் மழை பெய்துள்ளது.
இப்படியான நிலையில்தான், வங்கக் கடலில் அந்தமான் அருகே ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.
ஓமிக்ரான் அறிகுறிகள்: காய்ச்சல் வராது... தலைவலி உடல்சோர்வுதான் ஏற்படுமாம் - நிபுணர்கள் கருத்து
டிசம்பர் 5ம் தேதி பூரி கடற்கரை
இந்த நிலையில், இன்று காலை 11.30 மணிக்கு, காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப் பெற்றுள்ளது. அது வடக்கு மற்றும் வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து, டிசம்பர் 4ம் தேதி காலை வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா பகுதியை சென்றடையும். டிசம்பர் 5ம் தேதி, ஒடிசாவின் பூரி கடற்கரை பகுதியை புயல் சென்றடையும். இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
முன்னெச்சரிக்கை
இதனிடையே, ஒடிசா மாநில அரசு, முன்னெச்சரிக்கையாக, தெற்கு கடற்கரை முழுவதும் 266 மீட்புக் குழுக்களை நிலைநிறுத்த திட்டமிட்டுள்ளது, இதில் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), மாநில தீயணைப்பு சேவைகள் மற்றும் ஒடிசா பேரிடர் விரைவு நடவடிக்கைப் படை (ODRAF) ஆகியவை அடங்கும்.
உஷார் நிலை
ஒடிசாவின் சிறப்பு நிவாரண ஆணையர் (எஸ்ஆர்சி) பிரதீப் குமார் ஜெனா கூறுகையில், "சூழ்நிலையை சமாளிக்க மாநில அரசு நன்கு தயாராக உள்ளது, 14 கடலோர மாவட்டங்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன, மேலும் வரவிருக்கும் புயலைக் கருத்தில் கொண்டு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது." என்றார்.
ஆந்திர அரசு
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஒடிசா மாநிலம் முழுக்க மீன்பிடி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஆந்திரப் பிரதேச அரசும் தீவிர எச்சரிக்கை விடுத்து, வடக்கு கடற்கரை பிராந்தியத்தில், உள்ள மூன்று மாவட்டங்களில் ஹை அலர்ட் நிலையை பிறப்பித்துள்ளது.
Recommended Video
தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை
முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ஸ்ரீகாகுளம், விஜயநகரம் மற்றும் விசாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர்களிடம் தொலைபேசியில் பேசி, அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். ஜவாத் புயல் மேற்கு வங்காளத்தின் கடலோர மாவட்டங்களிலும் கனமழையை ஏற்படுத்தக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம், தமிழகத்திற்கு இந்த புயலால் பாதிப்பு ஏற்படாது என்பதுதான் இப்போதைய கணிப்பாக உள்ளது.
இப்போது எங்கே உள்ளது
இதனிடையே, இன்று இரவு இந்திய வானிலை மையம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், டிசம்பர் 3ம் தேதி மாலை 5.30 மணிக்கு விசாகப்பட்டினத்திலிருந்து தென்கிழக்கே 300 கிமீ தொலைவிலும், பூரிக்கு தென் மேற்கே 480 கிமீ தொலைவிலும் 'ஜவாத்' புயல் மையம் கொண்டுள்ளதாகவும், டிசம்பர் 4ம் தேதி காலை வரை, வடக்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து, பின்னர் வடகிழக்கு திசையில் திரும்பி டிசம்பர் 5ம் தேதி மதியம் பூரி கடற்கரையை அடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.