ருத்ரதாண்டவம் ஆடிய மாண்டஸ்..கரையைக் கடந்தது..பேயாட்டம் போட்ட 300 மரங்கள் வேரோடு சாய்ந்தன
சென்னை: மாண்டஸ் புயல் பலத்த காற்றுடன் மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்துள்ளது. சென்னை சுற்றுவட்டாரப்பகுதிகளில் காற்றின் வேகத்திற்கு தாக்கு பிடிக்க முடியாமல் போட்ட 300க்கும் மேற்பட்ட மரங்கள் பல பகுதிகளில் முறிந்து விழுந்துள்ளன. மீன்பிடி துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் பலத்த சேதமடைந்தன.
வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த மாண்டஸ் புயல் புதுச்சேரி- மாமல்லபுரம் இடையே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டு இருந்த நிலையில், சற்று மேற்கு நோக்கி புயல் நகர்ந்ததால் புதுச்சேரி- மாமல்லபுரம்- மரக்காணம் இடையே நேற்று இரவு கரையை கடந்தது.
இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து பெங்களூரு வழியாக கடந்து சென்று 12ம் தேதி அரபிக் கடலுக்குள் செல்லும். இருப்பினும் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிளம்பிட்டான்யா..கிளம்பிட்டான்யா! நள்ளிரவில் கரையைக் கடந்த மாண்டஸ் புயலின் மைய பகுதி! ஆனால் முடியல!
மாண்டஸ் புயல்
வங்கக் கடலில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டு இருந்த புயல் சின்னம் 8ஆம் தேதி இரவில் மாண்டஸ் புயலாக மாறியது. நள்ளிரவில் அதிதீவிர புயலாக மாறியது. அதனால் பெரிய அளவில் பாதிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று காலையில் அந்த புயல் வலுவிழந்து சாதாரண புயலாகவே நீடித்துக் கொண்டு இருந்தது. பகல் 11 மணிக்கு மேல் மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருந்தது. முன்னதாக, இந்த புயல் புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
மெதுவாக நகர்ந்த மாண்டஸ்
மாண்டஸ் புயல் நேற்று காலை முதல் 12 கிமீ வேகத்தில் நகர்ந்து கொண்டு இருந்தது. இதனால் கடலோரத்தை நெருங்க 6 மணி நேரத்துக்கும் மேல் எடுத்துக் கொண்டது. இந்நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் சென்னைக்கு தெற்கே 200 கிமீ தொலைவில் நிலை கொண்டது. இதன் காரணமாக சென்னை மெரினாவில் பலத்த காற்று வீசியது. மணிக்கு 75 கிமீ வேகத்தில் காற்று வீசியதால், அந்த பகுதியில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. நகரில் பல பொருட்கள் காற்றில் பறந்தன.
சூறைக்காற்றுடன் பெய்த மழை
காற்றுடன் மழையும் சேர்ந்து விட்டுவிட்டு பெய்து கொண்டே இருந்தது. நேற்று மாலை 6 மணி வரை கடலோரப் பகுதியில் மழை விட்டுவிட்டு பெய்தது. குளிர் காற்றும் வீசியதால் பொதுமக்கள் பெரும்பாலும் வெளியில் வராமல் வீட்டுக்குள் முடங்கினர். புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, பலத்த காற்று வீசியதுடன் மழை பெய்து கொண்டே இருந்தது. வட உள் மாவட்டங்களிலும் காற்று வீசியது.
சற்றே திசை மாறிய புயல்
பிற்பகலுக்கு மேல் புயலின் திசை மாறியது சென்னைக்கு 220 கிமீ தொலைவில் வரும் போது தனது திசையை மாற்றி மேற்கு நோக்கி நகரத் தொடங்கியது. நேற்று இரவு 9.30 மணிக்கு ஆரம்ப நிலை புயல் பகுதி கரையை தொட்டது. அந்த நேரத்தில் மாமல்லபுரம் முதல் ராணிப்பேட்டை வரை 75 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. 2.30 மணிக்கு மேல் கரையைக் கடந்தது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்
கரையை நெருங்கும் போது சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இரவு நேரத்தில் பேருந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பிறகு தரைப்பகுதிக்குள் நுழைந்த போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் மரங்கள் பேயாட்டம் போட்டன. காற்றுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது.புயல் வலுவிழந்த நிலையில் கரையைக் கடந்து பெங்களூரு வழியாக சென்று 12ம் தேதி அரபிக் கடலுக்குள் நுழையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முறிந்து விழுந்த மரங்கள்
காற்றின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் சென்னை அண்ணாசாலை பகுதியில் ஜெமினி மேம்பாலம் அருகே ராட்சத மரம் வேரோடு முறிந்து விழுந்தது. சென்னையின் முக்கிய சாலைகளில் ஒன்றான இந்த சாலை போக்குவரத்திற்கு மிகவும் முக்கியம் என்பதால் சாலையில் விழுந்து கிடந்த அந்த மரத்தை அகற்ற சென்னை மாநகராட்சி ஊழியர்கள், போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இரவோடு இரவாக அகற்றப்பட்டன. சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் உள்ள கார்நிஸ்வரர் கோவில் குளத்தின் அருகில் நூறு ஆண்டுகள் பழமையான மரம், கோவில் குளத்தின் தடுப்பு சுவரைப் பெயர்த்து விழுந்துள்ளது. சென்னையில் கோபாலபுரம் அவ்வை சண்முகம் சாலை, மயிலாப்பூர் ஈஸ்ட் டிரஸ்ட் சாலை, வில்லவாக்கம்பேருந்து நிலையம், கோட்டூர் காந்தி புரம் சாலை,பெரம்பூர் இரயில் நிலையம், பெசன் நகர் ருக்மணி சாலை, ஆவடி சிவன் கோவில் சாலை, போன்ற பல்வேறு இடங்களில் சாலையோரம் இருந்த மரங்கள் பலத்த காற்றினால் சாலையில் முறிந்து விழுந்துள்ளன.
மின்கம்பம் சாய்ந்தது
சென்னை பாரிமுனையில் மாண்டாஸ் புயல் காரணமாக மின்கம்பம் முறிந்து சாலையில் விழுந்தது. மின் கம்பத்துடன் மரமும் சேர்ந்து விழுந்ததால் அப்பகுதியில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை சென்னை மாநகராட்சி நிர்வாகம் துரிதப்படுத்தியுள்ளது.