அதிகாலை முதல் இரவு வரை டமால் டுமீல் ஓயாத வெடிச்சத்தம்.. சென்னையில் புகை மண்டலம்..உயர்ந்த காற்று மாசு
சென்னை: தீபாவளி பண்டிகை நாள் வழக்கமான உற்சாகமாகத்துடன் நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. பண்டிகை நாளில் பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு இருந்தாலும் காலை முதல் இரவு வரை மக்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாடினர். சென்னையில் கரும் புகை மண்டலம் ஏற்பட்டது. பல்வேறு பகுதிகளில் காற்று மாசு அதிகரித்தது.
பொதுவாக தீபாவளி அன்றும் அதன் பின்பான நாட்களிலும் காற்று மாசு அதிகரிப்பது வழக்கம். மோசமான வெடிகளை வெடிப்பதாலும், அதிக மாசு ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடிப்பதாலும் காற்று மாசு அதிகரிக்கும்.
தீபாவளி திருநாளை பாதுகாப்பாக கொண்டாட தமிழ்நாடு அரசு மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பட்டாசுகள் அளவாக வெடிக்க தமிழ்நாடு அரசு நேர கட்டுப்பாடுகளை விதித்திருந்தது . அந்த வகையில் இரவு 7 மணி முதல் 8 மணி வரை அதாவது 1 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
இதனையடுத்து காவல் துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இருப்பினும் பொதுமக்கள் 1 மணி நேரத்தை கடந்து பட்டாசுகள் வெடித்ததால் காற்று மாசு அளவு அதிகரித்தது.
இரவு வரை டமால் டுமீல்
சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் அதிகாலையில் இருந்து இரவு வரை வெடி வெடிக்கப்பட்டதால் புகை மண்டலம் ஏற்பட்டு காற்று மாசு மோசமான நிலையை அடைந்துள்ளது. காற்று மாசு பல இடங்களில் 200 ppb புள்ளிகளை தொட்டது. பெருங்குடியில் 252 ppb, ராயபுரம் 205 ppb மணலி 201 ppb, ஆலந்தூர் 191 ppb, எண்ணூர் 171 ppb அளவாக உள்ளது.
புகை மண்டலம்
சென்னை மாநகரில் நுங்கம்பாக்கம், தி.நகர் கோடம்பாக்கம், வடபழனி, கோயம்பேடு, ராயப்பேட்டை, மந்தைவெளி, கிண்டி, சென்ட்ரல், சேப்பாக்கம், பாரிமுனை, திருமங்கலம், அண்ணாநகர், அமைந்தகரை, சூளைமேடு மற்றும் சென்னை புறநகர் பகுதியான முகப்பேர், பாடி, கொரட்டூர், அம்பத்தூர், ஆவடி, திருநின்றவூர், பட்டாபிராம், அயப்பாக்கம், திருமுல்லைவாயில் உள்ளிட்ட பகுதிகளில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் வெடிகளை வெடித்ததால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்து மிகவும் அதிகப்படியான காற்று மாசு ஏற்பட்டது. இதனால் சாலைகளில் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
தீ விபத்துகள்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை முழுவதும் பட்டாசு வெடித்ததில் 17 தீ விபத்துகள் நடைபெற்றதாக தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது. அனுமதிக்கப்பட்ட நேரத்தையும் தாண்டி பொதுமக்கள் பட்டாசு வெடித்ததாகவும், இந்த விபத்துக்கள் அனைத்தும் சிறிய அளவிலான விபத்துகள் என்பதால் பெரிய அளவிலான பொருட்சேதமோ, தீக்காயங்களோ ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவிந்த குப்பைகள்
தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிப்பதால் கூடுதலாக குப்பை குவியும். இதனால் வழக்கமான தூய்மை பணியாளர்களுடன் கூடுதலாக 1000 பணியாளர்களும், கூடுதலாக 12 குப்பை லாரிகளும் குப்பை அகற்றும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இன்றும் விடுமுறை நாள் என்பதால் பலரும் பட்டாசுகள் வெடிப்பார்கள். சென்னை மாநகராட்சியில் மட்டும் நகர் பகுதிகளில் நூறு டன்னிற்கு மேல் பட்டாசு குப்பைகள் மட்டும் சேகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.