'லட்சியக்கனலை இதயத்தில் ஏந்திய வேட்பாளர்களுக்கு பாராட்டு..' உள்ளாட்சி தேர்தல் தோல்வி.. கமல் ட்வீட்
சென்னை: உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் ஒரு இடத்தில் கூட வெல்லாத நிலையில், உள்ளாட்சியில் தன்னாட்சி எனும் லட்சியக்கனலை இதயத்தில் ஏந்தி தேர்தலைச் சந்தித்த மநீம வேட்பாளர்களைப் பாராட்டுவதாகத் தெரிவித்துள்ள அக்கட்சியின் தலைவர் கமல், மநீமவின் மக்கள் பணி இன்னும் விசையுடன் தொடரும் என்றும் பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த 2019இல் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதில் விடுபட்ட 9 மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் 2 கட்டங்களாக அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்தது.
சீமானுக்கு வேல்முருகன் அட்வைஸ்: ராஜீவ் கொலை வழக்கில் 7 தமிழர் விடுதலைக்கு உபத்திரம் செய்யாதீங்க!
முதல்கட்ட வாக்குப்பதிவில் 74.37% வாக்குகளும் 2ஆம் கட்ட வாக்குப்பதிவில் 78.47% வாக்குகளும் பதிவாகியிருந்தன. இதில் பதிவான வாக்குகள் தமிழகத்தில் உள்ள 74 வாக்கு எண்ணும் மையங்களில் நேற்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது.
ஊரக உள்ளாட்சித் தேர்தல்
தற்போது வரை வெளியான முடிவுகளில் பெரும்பாலான இடங்களை திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளுமே வெற்றி வாகையைச் சூடியுள்ளது. வெறும் 6 மாதங்களுக்கு முன் ஆளும் கட்சியாக இருந்த அதிமுக, இந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளது . அதிமுக மட்டுமின்றி எதிர்க்கட்சிகள் அனைத்தும் மோசமான ஒரு தோல்வியைச் சந்தித்துள்ளது. இதில் தனித்துப் போட்டியிட்ட பாமகவுக்கும் சொல்லிக் கொள்ளும்படியான வெற்றியைப் பெறவில்லை.
திமுக வெற்றி
இதில் 1381 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் திமுக கூட்டணி 1009 இடங்களையும் அதிமுக கூட்டணி 218 இடங்களையும் கைப்பற்றின. அதேபோல பாமக 47 இடங்களில் வென்ற நிலையில், இதர கட்சிகள் 102 இடங்களைத் தன்வசப்படுத்தியுள்ளது. அதேபோல 140 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் திமுக கூட்டணி 138 இடங்களையும் அதிமுக கூட்டணி 2 இடங்களையும் கைப்பற்றின.
ஒரு இடத்திலும் வெல்லவில்லை
இந்தத் தேர்தலில் சுயேச்சையாகக் களமிறங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர் 110க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி வாகை சூடியுள்ளனர். அதேநேரம் நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் கட்சிகள் இந்தத் தேர்தலில் தனித்து களமிறங்கின. இருப்பினும், 2 கட்சிகளாலும் இந்தத் தேர்தலில் ஒரு இடத்திலும் கூட வெல்ல முடியவில்லை. இது அக்கட்சி தொண்டர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கமல் ட்வீட்
இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் தனது ட்விட்டர் பக்கத்தில், "'உள்ளாட்சியில் தன்னாட்சி' எனும் லட்சியக்கனலை இதயத்தில் ஏந்தி தேர்தலைச் சந்தித்த மநீம வேட்பாளர்களைப் பாராட்டுகிறேன். வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். மநீமவின் மக்கள் பணி இன்னும் விசையுடன் தொடரும்" என்று பதிவிட்டுள்ளார்.