வேணாம் தலைவரே.. பாஜகவால் சிறுபான்மையினர் ஓட்டு பறிபோகுமா? “கட்டுக்கதை”! ராஜா பிடித்த ‘நச்’ பாயிண்ட்!
சென்னை : பாஜகவுடன் கூட்டணி வைப்பதால் சிறுபான்மையினர் வாக்குகள் பறிபோகின்றன என எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிலர் கருதுவதால், பாஜகவிற்கு எதிராகப் பேசி வரும் சூழலில், பாஜக கூட்டணி ஒருபோதும் சுமை அல்ல, அதிமுகவை எல்லோரும் சுமையாகக் கருதியபோது பாஜக கூட்டணி வைத்து 40க்கு 30 இடங்களில் வென்றது எனத் தெரிவித்துள்ளார் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா.
அதிமுக எடப்பாடி பழனிசாமி அணி - பாஜக இடையே சமீப நாட்களாக உரசல்கள் நிகழ்ந்து வருகின்றன. முக்கிய நிர்வாகிகள் பலரும் கூட பாஜகவிற்கு எதிராகப் பேசி வருகின்றனர். அவர்களை எடப்பாடி பழனிசாமியும் வெளிப்படையாகக் கண்டிக்கவில்லை.
இதனால், ஈபிஎஸ்ஸும், பாஜக கூட்டணியை விட்டு வெளியேறும் முடிவில் இருக்கிறாரோ எனும் சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. இந்நிலையில், இதுகுறித்துப் பேசியுள்ளார் எச்.ராஜா.

அதிமுக + பாஜக
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து 2021 சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் பாஜக நீடித்தது. அதன் மூலம் பாஜக 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதன் பிறகு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிட்டாலும், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுடன் பாஜகஇணைக்கமாகவே இருக்கிறது. எனினும், ஈபிஎஸ் அணியின் சில நிர்வாகிகள் பாஜக கூட்டணிக்கு எதிராகப் பேசி வருகின்றனர். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் வரும் தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்று ஒரு இடத்திலும், தமிழ்நாட்டில் பாஜக 25 இடங்களில் வெல்லும் என்று மற்றொரு இடத்திலும் பேசி வருகிறார்.

கூட்டணியில் புகைச்சல்
இந்தச் சூழலில் அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்.பியுமான சி.வி.சண்முகத்தின் திமுக - பாஜக கூட்டணி குறித்த பேச்சு, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது திமுக பாஜகவுடன் கூட்டணி அமையவுள்ளது உள்ளது என்றும் திமுகவுடன் கூட்டணி வைத்தவர்கள் ஓடப் போகிறார்கள என்றும் சி.வி.சண்முகம் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நாராயணன் திருப்பதி உள்ளிட்டோரும் கருத்து தெரிவித்தனர். இதனால், கூட்டணிக்குள் புகைச்சல் ஏற்பட்டது.

வேணாம் தலைவரே
இச்சம்பவத்தைத் தொடர்ந்து ஈபிஎஸ் ஆதரவாளர்கள் பலரும் ஆங்காங்கே கூட்டங்களில் பாஜகவை விமர்சித்தும், அண்ணாமலையை தாக்கியும் பேசி வந்தனர். ஈபிஎஸ் அணியின் முன்னணி நிர்வாகிகள் பலரும், பாஜக தங்களுடன் கூட்டணியில் இருப்பதால் சிறுபான்மையினரின் வாக்குகள் பறிபோகின்றன, அதனால் பாஜக கூட்டணி வேண்டாம் என எடப்பாடியிடம் கூறி வருகின்றனராம். இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற மா.செக்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, பாஜகவை பொதுவெளியில் விமர்சிக்கக்கூடாது என அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

பெரியவர்கள்
இந்நிலையில் இதுதொடர்பாகப் பேசியுள்ள பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, நாங்கள் இன்னாருடன் கூட்டணி வைப்போம் என்று அடுத்தவர் சொல்ல என்ன அதிகாரம் இருக்கிறது? அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் எங்கள் கட்சி பற்றி கூட்டணி பற்றி கருத்துச் சொன்னால் அதை மதிப்போம். அதிமுக இன்று இரண்டாக உடைந்திருக்கிறது. எனது கருத்து, இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான். நான் எனது விருப்பத்தைச் சொன்னாலும், முடிவெடுக்க வேண்டியது அவர்கள் தான். அதிமுகவில் என்ன நடக்கும் என்பது நம் கையில் இல்லை. 'பெரியவர்கள்' இருக்கிறார்கள். நல்ல முடிவு வரும் என்று நான் நம்புகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

சிறுபான்மையினர் வாக்கு பறிபோகுமா?
சிறுபான்மையினர் வாக்குகள் பறிபோவதாக அதிமுகவின் முக்கிய தலைவர்கள் கருதுவது பற்றிப் பேசியுள்ள எச்.ராஜா, பாஜகவுடன் கூட்டணி வைத்தால் சிறுபான்மையினர் வாக்கு கிடைக்காது என்பது கட்டுக்கதை. 1998ல் ஜெயலலிதா கடும் பின்னடைவைச் சந்தித்த காலகட்டம். அப்போது அதிமுகவை பலரும் சுமையாக கருதினார்கள். அப்போது பாஜக தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். பின்னர் அதிமுக + பாஜக கூட்டணி அமைந்தது. அப்போதும், சிறுபான்மையினர் வாக்குகளும் அதிமுகவுக்கு கிடைக்காமல் பறிபோகும் என்று சொன்னார்கள். ஆனால், 40க்கு 30 சீட்களை அதிமுக பாஜக கூட்டணி கைப்பற்றியது. அடுத்த வருடத்தில் வாஜ்பாய் அரசு கவிழ்க்கப்பட்டு, தேர்தல் நடைபெற்றபோது பாஜக இடம்பெற்ற கூட்டணி 26 இடங்களைக் கைப்பற்றியது.

பாஜக சுமை?
குஜராத்தில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தொகுதிகளை முழுமையாக பாஜக கைப்பற்றியுள்ளது. திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தமிழ்க்குடிமகன் என்னிடம் சொல்லி இருக்கிறார். உங்களுடன் கூட்டணி வைத்தபோது இஸ்லாமியர் கொஞ்சம் யோசித்தார்கள். ஆனால், அதை ஈடுகட்டும் அளவுக்கு இந்துக்கள் வாக்கு கூடிவிட்டது. அதனால், கூட்டணியால் பாதிப்பு இல்லை என்றார் இன்று அதிமுகவுடன் கூட்டணியில் இருக்கிறோம். கூட்டணியை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவேண்டியது பாஜக தலைமை தான் எனத் தெரிவித்துள்ளார் எச்.ராஜா.












Click it and Unblock the Notifications