"சும்மா இருங்க".. திமுகவே அதை எதிர்பார்க்கலயாம்.. டக்குனு பறந்த சைலண்ட் உத்தரவு.. கவனிக்கும் கட்சிகள்
கடலுக்குள் பேனா சிலை தொடர்பு விஷயம் தொடர்பாக திமுக சைலண்ட் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதாம்
சென்னை: கடலுக்குள் பேனா விஷயம் திடீர் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. சீமான் பேசிய பேச்சுக்கு ஆதரவும், எதிர்ப்பும் வலம்வந்து கொண்டிருக்கின்றன.. திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கும் சீமானுக்கு பதிலடிகளை தந்து கொண்டிருக்கின்றன..!!
தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு, சென்னை மெரீனா கடற்கரையை ஒட்டி கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பாக விவகாரம் வெடித்துள்ளது.
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் நடத்தி வரும் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் சீமான் பேசிய பேச்சு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது..
கடலுக்குள்ளேயே
இந்த கருத்து கேட்பு கூட்டத்துக்கு சீமானும் வரப்போவதாக சொல்லியிருந்ததால், நாம் தமிழர் கட்சியினரும் திரளாக வந்திருந்தனர். பேனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சீமான் பேசும்போதே, கூட்டத்திற்கு வந்திருந்த திமுகவினர் கூச்சலிட்டு, அவரை பேச்சை நிறுத்தும்படி சொன்னார்கள்.. அப்போது சீமான், "உனக்கு எதைப் பற்றி அக்கறை இருந்திருக்கிறது? கடற்கரையில் புதைக்கவிட்டதே தவறு. இதில் பேனா நினைவுச் சின்னம் வேறு வைக்க வேண்டுமா? வேணும்னா, அறிவாலயத்தில் போய் வையுங்கள்... நினைவிடம் கட்டியிருக்கிறீர்களே, அதில் வையுங்கள், கடலுக்குள்தான் வைப்பார்களாம்.
வந்து உடைக்கறேன்
சும்மா மீனவ சங்கம் என்ற பெயரில், அனைத்து மீனவ சங்கம், அகில இந்திய மீனவ சங்கம் என்ற பெயரில் இங்கு வந்துவிட்டு இதனால் ஒன்றும் பாதிப்பில்லை என்று எதையாவது பேசிக்கிட்டு. நீங்கள் பேனா வையுங்கள், ஒருநாள் நான் வந்து உடைக்கிறேன். பள்ளிக்கூடத்தை சீரமைக்க காசு இல்லை, பேனா வைக்க காசு எங்கிருந்து வருகிறது? நீ போகச் சொன்னால் நான் போய்விடுவேனா? நாங்கள் கடலுக்குள் பேனா வைப்பதை எதிர்க்கிறோம், எதிர்க்கிறோம், எதிர்க்கிறோம். எனவே அதைத் தடுத்து நிறுத்தும் வரை கடுமையான போராட்டம் நடத்துவோம். இது உறுதி" என்று திடமாக சொல்லிய சீமான், சிலை வைத்தால், நான் வந்து உடைப்பேன் என்றும் கூறியிருந்தார்.
சுப வீரபாண்டியன்
சீமானின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி வந்தாலும், கருத்து கூட்டம் தொடர்பாக சில அதிருப்திகளும் கிளம்பி உள்ளதால் அவைகளை சமாளிக்க திமுக முயன்று வருகிறதாம். அதாவது, இந்த கருத்து கேட்பு கூட்டம் முடிந்தபிறகு, செய்தியாளர்களை சீமான் சந்தித்து பேசியிருந்தார்.. அப்போது, "கருத்துக் கேட்புக் கூட்டம் என்ற பெயரில் கூட்டத்தை நடத்தி, அவர்களுக்கு ஆதரவான கருத்துகளை ஏற்பது, எதிர்க்கருத்து தெரிவித்தால், அதை எதிர்த்துக் கூச்சலிடுவது என்பது ரொம்ப அநாகரிகம் என்று தெரிவித்துவிட்டு போனார். பூவுலகின் நண்பர்கள் அமைப்பில் பேசும்போதும், "கடல் மட்டம் உயர்வதால் சென்னை நகரம் அபாயத்தில் இருக்கிறது. கருணாநிதி இருந்தால் இதைச் செய்வாரா? என்பதை யோசித்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்" என்று சொல்லிவிட்டு போனார்.
அதிருப்திகள்
சுற்றுச்சூழல் ஆர்வலரான முகிலன் பேசும்போது, "பல கருத்துக் கேட்புக் கூட்டங்கள் மாலை வரை நடந்திருக்கின்றன. குஜராத்தில் அடுத்த நாள் அதிகாலை வரை நடந்திருக்கிறது. இவர்கள் இப்படி முடிக்கிறார்கள். யாரையும் பேசவிடவில்லை. இது அரசுக்கு அவப்பெயரைத்தான் ஏற்படுத்தும். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தக் கூடாது" என்று கூறிவிட்டு போனார்.. கருத்துகளைத் தெரிவிக்க பெயர் கொடுத்திருந்த பலரும் தங்கள் கருத்தைத் தெரிவிக்க வாய்ப்பளிக்க வேண்டும் என்று சொல்லியும், கூட்டம் திடீரென முடித்து வைக்கப்பட்டுள்ளது என்று குற்றச்சாட்டுகள் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த அதிருப்திகளை களையவே திமுக தரப்பு முயன்று கொண்டிருக்கிறதாம்.
வாய்ப்பூட்டு
மற்றொருபக்கம், கருத்துக் கேட்பு கூட்டம் தொடர்பான விஷயத்தில், சோஷியல் மீடியாவை சரியாக கையாளவில்லை என்றும் திமுக தரப்பு நினைக்கிறதாம்.. "பேனா நினைவு சின்னம் வேணாம்" என்று ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் அளவுக்கு விஷயம் போய்விட்டதை அவர்களே எதிர்பார்க்கவில்லையாம்.. சீமான் பேசியது ஒருபக்கம், இந்த ஹேஷ்டேக் மறுபக்கம் என இணையத்தில் ஆக்கிரமித்துவிட்டது, திமுக தரப்புக்கே லேசான அதிர்ச்சி தான் என்கிறார்கள்.. அதனால்தான், பேனா விவகாரத்தை கொஞ்ச நாள் ஆறப்போட நினைக்கிறதாம் திமுக தலைமை, இனி பேனா விஷயம் தொடர்பாக யாரும் எந்த கருத்தும் சொல்ல வேண்டாம்... மீடியாக்களிலும் இதை பற்றி பேசவேண்டாம் என்று வாய்ப்பூட்டு போட்டிருக்கிறதாம்.