என்ன சொல்றேன்னா.. லைட்டா போதை வரும்! டாஸ்மாக் சரக்குக்கு பதில் இதை விற்கலாம்! பேரரசுவின் அடடே ஐடியா!
சென்னை : சென்னையில் பட விழா ஒன்றில் பேசிய இயக்குனரும் பாஜக பிரமுகருமான பேரரசு கள் குடித்தால் லேசாக தான் போதை வரும் எனவே டாஸ்மாக்கில் மதுபானங்களுக்கு பதிலாக கள் விற்கலாம் என ஐடியா ஒன்றினை கொடுத்திருக்கிறார்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வந்தவர் இயக்குனர் பேரரசு. சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையை பூர்வீகமாகக் கொண்ட இவர் தமிழ் திரையுலகில் முதன்முறையாக எதிரும் புதிரும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார்.
இதையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் விஜய்யின் வாழ்க்கையில் மறக்க முடியாத படங்களான திருப்பாச்சி சிவகாசி ஆகிய இரண்டு மிகப்பெரிய வெற்றி படங்களை இயக்கி தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.
இயக்குனர் பேரரசு
சிவகாசி, திருப்பாச்சி, தர்மபுரி, திருப்பதி, பழனி, திருவண்ணாமலை என ஊர் பெயர்களையே படங்களின் டைட்டிலாக வைத்து வெற்றி பெற்ற இவர் விஜய் மட்டுமல்லாது நடிகர் அஜித், விஜயகாந்த், அர்ஜுன், பரத் என பல முன்னணி நடிகர்களோடு கைகோர்த்தார். விஜய் அஜித் நடித்த படங்களை தவிர மற்ற திரைப்படங்கள் அவ்வளவாக ஓடாத நிலையில் திரையிலிருந்து மெல்ல ஓரம் கட்டப்பட்ட அவர் கடந்த சில ஆண்டுகளாக திரைப்பட விழாக்களில் மட்டுமே கலந்து கொண்டு பேசி வருகிறார்.
பாஜக ஆதரவு
கடந்த 2020ஆண்டில் கூட நடிகர் விஜய் நடிக்கும் படத்தை மீண்டும் பேரரசு இயக்குனர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது கைகூடாமல் போனது. இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு பாஜக மூத்த தலைவரான பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்து இயக்குனர் பேரரசு பாஜகவில் இணைந்தார். அதைத் தொடர்ந்து கட்சி நிகழ்ச்சிகளிலும் நடந்து முடிந்த தேர்தல்களிலும் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்.
பனைமரம்
தற்போது ஆடியோ லாஞ்ச், ட்ரெய்லர் வெளியிட்டு விழாக்களில் அவர் அதிகம் கலந்து கொள்வதை பார்க்க முடிகிறது. இந்நிலையில் தான் கள் குடித்தால் லேசாக தான் போதை வரும் எனவே டாஸ்மாக்கில் மதுபானங்களுக்கு பதிலாக கள் விற்கலாம் என ஐடியா ஒன்றினை கொடுத்திருக்கிறார். சென்னையில் நெடுமி படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய பேரரசு," தமிழ்நாட்டில் பனைமரத்திற்கு பல சிறப்புகள் உண்டு. பிற மரங்களுக்கு இல்லாத சிறப்புகள் பனைமரத்திற்குண்டு. குறிப்பாக பனை மரத்தில் இருந்து கள் கிடைக்கிறது.
கள் குடிப்பது
கள் குடிப்பது உடல் நலத்துக்குக் கேடு கிடையாது. சிறிய போதை தரும், அவ்வளவுதான். உடலைக் கெடுக்காது. அப்படி இருந்தும் கள்ளுக்கடைகளை ஊருக்கு ஒதுக்குப்புறமாக அந்தக்காலத்தில் வைத்தார்கள். ஆனால், இப்போது தெருவுக்கு தெரு டாஸ்மாக் கடைகள் வந்துவிட்டன. என்னைக் கேட்டால் டாஸ்மாக்கில் கள்ளை விற்கலாம். அதற்கு ஒரு விலையை வைத்துக் கொள்ளுங்கள். உடலைக் கெடுக்கும் மதுவை விட ஊட்டச்சத்து நிறைந்த கள் எவ்வளவோ மேல். கள்ளை டாஸ்மாக் கடையில் விற்க வைத்து அதை நம்பி இருக்கும் அனைவருக்கும் வாழ்வாதாரத்தை உயர்த்தலாம்" என பேசி இருக்கிறார். தற்போது அவரது கருத்தை பலரும் சமூக வலைதளங்களில் ஆமோதித்து வருகின்றனர். டாஸ்மாக்கில் கள் விற்கலாம் என்ற பேரரசுவின் கருத்து குறித்து உங்கள் பார்வை என்ன?