சென்னையில் தீபாவளி சரவெடி.. நகரம் முழுவதும் மாசு..மலையாக குவிந்த குப்பைகள்..எத்தனை டன் தெரியுமா?
சென்னை: தீபாவளி பண்டிகையை மக்கள் பட்டாசுகள் வெடித்து உற்சாகமாக கொண்டாடியுள்ளனர். சென்னையில் இருந்து பல லட்சம் பேர் சொந்த ஊர் சென்ற பின்னரும் பட்டாசு கழிவுகள் மலையாக குவிந்தன.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 211 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் தனியாக சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நகரத்தின் பல பகுதிகளில் காற்று மாசின் அளவும் அதிகரித்துள்ளது.
தீபாவளி பண்டிகை திங்கட்கிழமையன்று நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. மக்கள் புத்தாடை அணிந்து இனிப்பு பலகாரங்களை பரிமாறி, பட்டாசுகளை வெடித்து உற்சாகத்துடன் தீபாவளியை கொண்டாடினர்.
காற்று மாசு காரணமாக தமிழகத்தில் பட்டாசுகளை 2 மணி நேரம் மட்டுமே வெடிக்க வேண்டும் என தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தி இருந்தது. ஆனால், பொதுமக்கள் உற்சாகம் மிகுதியால் பட்டாசுகளை வாங்கி குவித்தனர்.
தீபாவளி கொண்டாட்டம் முடித்த சென்னை திரும்பும் மக்கள்.. தாம்பரம் டூ சென்னை கடும் போக்குவரத்து நெரிசல்
தீபாவளி பட்டாசு
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் அன்றைய தினம் மாலையில் இருந்து குடும்பம் குடும்பமாக வீடுகள் முன்பு வெடித்தனர். இரவு 10 மணி, 11 மணி வரையிலும் குழந்தைகளை அருகில் வைத்து பெற்றோர் பட்டாசு வெடித்து குதூகலமாக தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர். இதனால் காற்று மாசின் அளவு அதிகரித்தது. நகரம் முழுவதும்
பனி படர்ந்தது போல சென்னை முழுவதும் புகை மூட்டமாக காட்சியளித்தது. இதனால் வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்துக்கு ஆளானார்கள். சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் அதிகாலையில் இருந்து இரவு வரை வெடி வெடிக்கப்பட்டதால் புகை மண்டலம் ஏற்பட்டு காற்று மாசு மோசமான நிலையை அடைந்தது.
காற்று மாசு
திங்கட்கிழமையன்று காலை காற்றின் நுண் துகள் அளவு 109 ஆக இருந்த நிலையில் மாலையில் 192 ஆக உயர்ந்தது. ஒரு கனமீட்டருக்கு 100 மைக்ரான் என்பதே அனுமதிக்கப்பட்ட காற்று மாசு அளவாகும்.சென்னையில் பல இடங்களில் காற்று மாசு அளவு தரக்குறியீடு எண் 200ஐ தொட்டது. அதாவது, பெருங்குடியில் 235, ராயபுரம் 210, மணலி 265, வேளச்சேரி 204 என்ற அளவில் உயர்ந்தது.
211.08 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் உள்ள சாலைகளில் கூடுதலாக சேர்ந்த பட்டாசுக் கழிவுகள் தூய்மைப் பணியாளர்கள் மூலமாக அந்தந்த மண்டலங்களில் தனியாக சேகரிக்கப்பட்டன. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஞாயிறன்று 7.92 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகளும், தீபாவளி பண்டிகை நாளில் 63.76 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகளும், இன்று 139.40 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் என மொத்தம் 211.08 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் தூய்மைப் பணியாளர்கள் மூலம் தனியாக சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.
பட்டாசு கழிவுகள் அகற்றம்
சேகரிக்கப்பட்ட பட்டாசுக் கழிவுகளை கொண்டு செல்ல மண்டலத்திற்கு 2 வாகனங்கள் என 30 எண்ணிக்கையிலான தனி வாகனங்கள் மாநகராட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 50 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் கும்மிடிப்பூண்டியில் உள்ள அபாயகரமான கழிவுகளை முறைப்படுத்தும் செயலாக்க நிலையத்திற்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டுள்ளன. மீதமுள்ள பட்டாசுக் கழிவுகளை அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.
பல நகரங்களிலும் குப்பை மலை
தமிழகத்தின் பல பகுதிகளிலும் பட்டாசுகள் வெடித்து தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. மலையென குப்பைகள் குவிந்தன. தூய்மை பணியாளர்கள் ஏராளமானோர் குப்பைகளை அப்புறப்படுத்தினர். கோவையில் தூய்மை பணியாளர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மலையென குப்பைகள் குவிந்து துர்நாற்றம் வீசுகின்றன.