ஆட்டம் காணும் தேமுதிக.. திமுகவிடம் அப்பாயிண்ட்மென்ட் கேட்கும் மா.செ.க்கள்.. விஜயகாந்த் அவசர அறிக்கை
சென்னை: தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட ஒரு அறிக்கை பற்றிதான் இப்போது அந்த கட்சியினரிடையே பெரும் டிஸ்கஷன் ஓடிக் கொண்டு இருக்கிறது.
Recommended Video
அப்படி என்ன அறிக்கை என்கிறீர்களா. இதுதான் அறிக்கையின் சாராம்சம்-
தேர்தல் முடிந்ததும் மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடத்துவதாக இருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்ததாலும்,கொரோனா பரவல் காரணமாகவும், கூட்டம் சேர்க்கக் கூடாது என்பதற்காகவும் ஆலோசனைக் கூட்டம் நடத்த முடியவில்லை. வெகு விரைவில் ஊரடங்கு முடிந்தவுடன் அனைத்து மாவட்டச் செயலாளர்களையும் அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்த இருக்கிறோம்.
இணைந்து பணியாற்றலாம்
இந்த கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை எடுத்துச் சொல்லலாம். தேர்தலில் வெற்றி தோல்வி என்பது இயல்பானது. தேர்தலுக்கு முன்பு யாருடன் கூட்டணி என்பதை மாவட்டச் செயலாளர்களிடம் கேட்ட பிறகே முடிவெடுக்கிறோம். அதேபோல் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகும் மாவட்டச் செயலாளர்களை நேரில் அழைத்து தேமுதிகவை எப்படி வழி நடத்திச் செல்ல வேண்டும் என்பதை நாம் அனைவரும் கலந்து ஆலோசித்து ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும். மேலும் தேமுதிகவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல நாம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்.
விஜயகாந்த் அறிக்கை
நிர்வாகிகள் யாரும் குழப்பம் அடைய வேண்டாம். மேலும் சமூக தளங்களில் தவறான செய்தி பரப்புவது, தலைமைக்கு களங்கம் விளைவிப்பது போன்ற செயல்களில் ஈடுபடாமல் தேமுதிகவின் வளர்ச்சிக்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். ஊரடங்கு முடிந்தவுடனோ அல்லது அரசிடம் சிறப்பு அனுமதி பெற்றோ மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை வெகுவிரைவில் நடத்துவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். எனவே நிர்வாகிகள் உறுதியோடு இருந்து வளர்ச்சியை நோக்கி பயணிப்போம். இவ்வாறு அறிக்கையில் கூறியிருந்தார் விஜயகாந்த்.
ஆடிப்போயுள்ள தேமுதிக
தேமுதிக கூடாராம் ஆட்டம் கண்டு போயுள்ளதுதான், இந்த அவசர அறிக்கைக்கு காரணம் என்கிறார்கள். தேர்தலுக்கு முன்பு மாவட்டச் செயலாளர்களில் பலரும், திமுக கூட்டணி வெல்லப்போவதால், அதிமுக கூட்டணியிலிருந்து விலகி திமுக கூட்டணிக்குச் செல்ல வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர். ஆனால், கடைசி வரை இழுத்தடித்துள்ளார் தேமுதிக பொருளாளர் பிரேமலதா. இதனால், அதிமுக கூட்டணியும் இல்லாமல் திமுக கூட்டணியும் இல்லாமல் வேறு வழியின்றி அமமுக கூட்டணிக்கு போனது தேமுதிக. ஒரு தொகுதியிலும் வெல்ல முடியவில்லை. விருத்தாசலத்தில் போட்டியிட்ட பிரேமலதா கூட டெபாசிட்டை தேற்ற முடியவில்லை.
எப்போதுமே தோற்றால் என்ன செய்வார்கள்
இது ஒருமுறை என்றால் பரவாயில்லை. ஒவ்வொரு முறையும், தப்பாக ஒரு கூட்டணியில் போய் சேர்ந்து கொண்டு தொடர்ந்து தோற்றுக் கொண்டே இருப்பதால் தேமுதிக நிர்வாகிகள் தங்கள் எதிர்காலம் குறித்து பயப்பட ஆரம்பித்துள்ளனர்.
அதிலும், தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் பலர் திமுகவுக்குச் செல்ல தயாராகி வருகின்றனர். அந்தந்த திமுக மாவட்டச் செயலாளர்களிடம் தூது விட்டு வருகிறார்களாம்.
பிரேமலதா தீவிரம்
சென்னையில் தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் 2 பேர் திமுகவில் இணைய நேரம் கேட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இதையெல்லாம் பார்த்த தேமுதிக தலைமை, நிலைமை மோசமாக போகிறதே என்ற ஆதங்கத்தில், இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இன்னொரு பக்கம் பிரேமலதாவும், பல மா.செ.க்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். ஆனால் காட்டாற்று வெள்ளத்தை கட்டியணைத்து நிறுத்த முடியாது என்பதை போல, தேமுதிகவிலிருந்து வெளியே தப்பித்து ஓடுபவர்களை தடுக்க முடியாது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.