பாஜகவிற்கு 13க்கு 5, அதிமுகவுக்கு 17க்கு 4 எம்பி.. கூட்டி கழிச்சு பார்த்தா கணக்கு தப்பா வருதே?
சென்னை: 13 சதவீதம் வாக்குகள் பாஜகவிற்கு கிடைக்கும் என்றும், இதன் மூலம் ஐந்து தொகுதிகள் பாஜகவிற்கு கிடைக்கும்... அதேநேரம் 17 சதவீதம் அதிமுகவிற்கு கிடைத்தாலும் 4 எம்பிக்கள் தான் கிடைக்கும் என்றும் "நியூஸ் 18" டிவி சேனல் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கூட்டி கழிச்சு பார்த்தா கணக்கு தப்பா வருதே என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
2024 லோக்சபா தேர்தல் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி ஒரு அணியாகவும், அதிமுக ஒரு அணியாகவும், பாஜக தனி அணியாகவும் மோதுகின்றன. முன்னதாக பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக கடந்த ஆண்டு விலகிவிட்ட நிலையில் 2014 பாணியில் வலுவான கூட்டணி அமைக்க பாஜக முடிவு செய்தது. அதன்படி தமிழ்நாட்டில் பாஜக உடன் கூட்டணியை பல்வேறு கட்சிகள் உறுதி செய்துள்ளன.

அந்த பட்டியலில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், அதிமுகவில் இருந்து பிரிந்த ஓபிஎஸ் அணி, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதி கட்சி , இந்திய ஜனநாயக கட்சி, மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி ஆகியவை இணைந்துள்ளன. இதில் சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு, அந்த கட்சியை அப்படியே பாஜகவில் இணைத்துள்ளார் சரத்குமார். பாமகவும் பாஜக உடனே இணையும் என்று சொல்கிறார்கள். ஆனால் பாமக நிலைப்பாடு இதுவரை அறிவிக்கப்படவில்லை.
அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் மற்றும் எஸ்டிபிஐ உள்ளிட்ட சில கட்சிகளே உள்ளன. தேமுதிக இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் திமுக கூட்டணியில் சென்ற முறை இருந்த கட்சிகளில் பச்சமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சியை தவிர மற்ற கட்சிகள் உள்ளன.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, திமுக விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதுதவிர கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் இந்த முறை திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. இதுதவிர கடந்த சட்டமன்ற தேர்தலில் இடம் பெற்று இருந்த மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி போன்ற கட்சிகளும் இந்த கூட்டணியில் இருக்கின்றன.
லோக்சபா தேர்தல் தொடர்பாக, தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளை தமிழ்நாட்டின் முன்னணி தமிழ் ஊடகங்கள் மற்றும் தேசிய அளவிலான ஆங்கில ஊடகங்கள் அடுத்தடுத்து வெளியிட்டு வருகின்றன. நேற்று மாலை, நியூஸ் 18 கருத்துக்கணிப்புகள் வெளியானது.. தமிழ்நாடு தொடர்பான கருத்துக்கணிப்பு பெரிய அளவில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
லோக்சபா தேர்தல் தொடர்பாக இதுவரை வெளிவந்த எல்லா கணிப்புகளுமே திமுக கூட்டணியே அதிக இடங்களில் வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் இந்த முறை பாஜக இரட்டை சதவீதத்தில் வாக்குகளை பெறும் என்றும், அதிமுகவைவிட அதிக இடங்களில் பாஜக வெல்லும் என்றும் சில கணிப்புகள் கூறியுள்ளன.
இதனிடையே நேற்று மாலை நியூஸ் 18 வெளியிட்ட கருத்துக்கணிப்பு பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.. அந்த கணிப்பில் திமுக கூட்டணி 30 தொகுதிகளிலும் வெல்லும் என்றும் அதிமுக 4 இடங்களில் வெல்லும் என்றும், பாஜக ஐந்து இடங்களில் வெல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் விவாதத்திற்கு காரணம் என்னவென்றால், திமுக கூட்டணி 51 சதவீதத்திற்கு மேல் வாக்குகளை பெறும் என்றும், அதிமுக கூட்டணி 17 சதவீதம் வாக்குகளை பெறும் என்றும். பாஜக கூட்டணி 13 சதவீதம் வாக்குகளை பெறும் என்றும், மற்றவை 19 சதவீதம் வாக்குகளை பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
51 சதவீதம் வாக்குகளை ஒரு கூட்டணி பெற்றால் அந்த கூட்டணி தான் மொத்தமாக வெல்லும் (Clean sweep) என்பது முந்தைய வரலாறுகள் கூறுவதாகவும்,. அந்த வகையில் திமுகவே மொத்தமாக வெல்லும் வாய்ப்பு உள்ளதாக திமுகவினர் கூறுகிறார்கள்.
அதேநேரம் 13 சதவீதம் வாக்குகளை பெற்று பாஜக 5 தொகுதிகளை கைப்பற்றும் என்றும், 17 சதவீதம் வாக்குகளை பெற்று அதிமுக 4 தொகுதிகளை கைப்பற்றும் என்பதையும் அதிமுகவினர் விமர்சிக்கிறாரகள்.. அது எப்படி 17 சதவீதம் வாக்கு வாங்கி 4 தான் கிடைக்குமா என்றும், 13 சதவீதம் வாங்குவோர் ஐந்து எம்பி கிடைக்குமா என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர். கூட்டி கழிச்சு பார்த்தால் கணக்கு தவறாக வருவதாகவும் அதிமுகவினர் விமர்சிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications