கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை.. ஜெயலலிதா சொன்னது இப்போ திமுகவுக்கு நடக்கிறதா?
சென்னை: கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒரு முறை தெரிவித்திருந்தார். தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தமிழகத்தில் திமுகவுக்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகள் இல்லை என்பதைப்போல நிலைமை உருவாகியிருப்பதை 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் காண்பிக்கின்றன.
2011 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அமோக வெற்றி பெற்றது. இதன் பிறகு 2014ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் வந்தது. அப்போது நாடு முழுக்க மோடி அலை வீசிக் கொண்டிருந்தது.
தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை - ஆயுதபூஜை நாளில் கோவை, நீலகிரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு
பிரச்சாரத்தின் போது மோடியா, அல்லது இந்த லேடியா? யாருக்கு உங்கள் ஓட்டு என்று பகிரங்கமாக சவால் விட்டார் ஜெயலலிதா.
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகள் இல்லை என்ற ஜெயலலிதா
அந்த தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன், தர்மபுரி தொகுதியில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமகவின் அன்புமணி ராமதாஸ் ஆகியோரை தவிர அனைத்து தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றது. திமுக எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை. மாநிலத்தில் எதிர்க்கட்சித் தலைவராக கருணாநிதி இருந்தார். மத்தியில் மோடி அலை வீசியது. இந்திராகாந்தி காலத்திற்கு பிறகு முதல் முறையாக தனிப் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியைப் பிடித்தது. அப்படி இருந்தாலும் தமிழகத்தில் அதிமுக கொடி உயரப் பறந்தது . இதனால்தான் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எங்களுக்கு எதிரிகள் இல்லை என்று சூளுரைத்து பேசினார் ஜெயலலிதா. அதில் ஓரளவு உண்மை இருக்கத்தான் செய்தது. ஏனென்றால் 2016ல் மீண்டும் தமிழகம் சட்டசபை தேர்தலை சந்தித்தபோதும், திமுக ஆட்சியை பிடிக்க முடியவில்லை. அதிமுக மறுபடி அரியணை ஏறியது.
திமுக அபாரம்
ஜெயலலிதா மறைந்துவிட்ட நிலையில் இப்போது எல்லாம் தலைகீழாக மாறியுள்ளது. ஜெயலலிதா சொன்ன அந்த புகழ்பெற்ற வாசகமான, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகள் இல்லை.. என்பது தற்போது திமுகவுக்கு பொருந்திப் போகிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சியை பிடித்த நிலையில், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில், திமுக பல இடங்களில் அமோக முன்னிலை பெற்றுள்ளது.
ஒன்றிய கவுன்சிலர்கள்
ஒன்றிய கவுன்சிலர்களுக்கு, 1381 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது . இதில் 316 தொகுதிகளில் வெற்றி அல்லது முன்னிலை நிலவரம் தெரிய வந்துள்ளது. இதன்படி திமுக 180 தொகுதிகளில் முன்னிலை அல்லது வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 25, பாட்டாளி மக்கள் கட்சி 6, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 1, நாம் தமிழர் , மக்கள் நீதி மய்யம், தேமுதிக போன்றவை எந்த இடத்திலும் முன்னிலை அல்லது வெற்றி பெறவில்லை. பிற வேட்பாளர்கள் 4 இடங்களில் முன்னிலை அல்லது வெற்றி பெற்றுள்ளனர்.
மாவட்ட கவுன்சிலர்கள்
மாவட்ட கவுன்சிலர்கள் தேர்தலை பொறுத்த அளவில், 140 இடங்களில் 67 இடங்களில் முன்னிலை மற்றும் வெற்றி தகவல் வெளியாகி உள்ளது. இதில் 68 மாவட்ட கவுன்சிலர்கள் திமுகவை சேர்ந்தவர்கள். வெறும் 4 பேர் மட்டும் அதிமுகவைச் சேர்ந்தவர்கள். வேறு எந்த கட்சியை சேர்ந்தவர்களும் மாவட்ட கவுன்சிலர்களாக வெற்றி பெறவில்லை.
திமுக வெற்றிக்கு காரணங்கள்
திமுக ஆட்சிக்கு வந்து சில மாதங்களே ஆகியுள்ள நிலையில், இந்த அளவுக்கு வெற்றியை வாரி குவித்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு மக்கள் நல திட்டங்களை அறிவித்தது இதற்கு ஒரு காரணம் என்றால், அதிமுகவில் இரட்டை தலைமை மற்றும் சசிகலா மறுபடியும் அரசியலுக்கு வருவதாக மறைமுகமாக சிக்னல்களை வெளியிட்டுக் கொண்டே இருப்பது போன்றவை அதிமுக தரப்பு மீது பெரிய நம்பிக்கை ஏற்படுத்தாமல் இருப்பதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்த பிரச்சினைகளை களைய வேண்டிய பொறுப்பில் அதிமுக இருக்கிறது.
அதிமுக, பாஜக வெற்றி பெறவில்லை
ஊராட்சி தேர்தல்களில் கட்சி சின்னங்களை பார்த்து மக்கள் ஓட்டு போடுவதில்லை என்று கூறிக் கொண்டாலும் கூட அது எப்படி திமுக ஆதரவு வேட்பாளர்கள் மட்டும் வெற்றி பெறுகிறார்கள் என்ற கேள்விக்கான பதிலை மற்ற கட்சியினர் சொல்ல முடியவில்லை. திமுகவுக்கு எதிராக முஷ்டியை முறுக்க கூடிய கட்சிகள் என்றால் அதிமுக மற்றும் பாஜகதான். அதிமுக நிலைமை என்ன என்பதை இந்த புள்ளி விவரத்தில் தெரிந்து கொள்ளலாம். பாஜகவை பொருத்தளவில் கோவை மாவட்டம் குருடம்பாளையம் ஊராட்சி மன்ற ஒன்பதாவது வார்டு இடைத்தேர்தலில் பாஜகவை சேர்ந்த கார்த்திக் ஒரே ஒரு ஓட்டு மட்டும் பெற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். நெல்லை மாவட்டத்தில் மட்டும் சில பகுதிகளில் ஓரளவுக்கு பாஜக வாக்குகளை வாங்கி உள்ளது.
திமுகவுக்கு வெற்றி
எந்த சின்னம் கொடுத்தாலும் சரி மக்களுக்கு அதை பற்றி நன்றாகவே தெரிந்திருக்கிறது, அறிந்து ஓட்டு போட்டுள்ளனர். இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் தரவில்லை, பெட்ரோல் விலையை எதிர்பார்த்த அளவுக்கு குறைக்க வில்லை என்பது போன்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் திமுக ஆட்சி செய்த மற்ற மக்கள் நலப்பணிகள்.. குறிப்பாக பெண்களுக்கு இலவச பஸ் பயணம், பெட்ரோல் மற்றும் பால் விலை குறைப்பு போன்றவை கைமேல் பலன் கொடுத்துள்ளன. எனவே, இப்போதைக்கு கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் திமுகவுக்கு எதிரிகள் இல்லை.