மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்கலாம்: அனைத்து கட்சி கூட்டத்தில் திமுக
சென்னை: ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக கருத்து தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் உச்சகட்டமாக உள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் தொடர்ந்து மரணித்தும் வருகின்றனர். இந்தியாவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் அதிகரிப்பது உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
இதையடுத்து சர்வதேச நாடுகள் இந்தியாவுக்கு உதவிக் கரம் நீட்டி வருகின்றன. இந்த நிலையில் தூத்துக்குடியில் சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவித்ததால் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், ஆக்சிஜன் உற்பத்திக்காக திறக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தை நாடியது.
உச்சநீதிமன்றமும், தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜனை உற்பத்தி செய்வது குறித்து பதிலளிக்க உத்தரவிட்டது. இது தொடர்பாக இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக சார்பில் கனிமொழி எம்.பி, ஆர்.எஸ். பாரதி பங்கேற்றனர்.
அப்போது, ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதிக்கலாம். அதேநேரத்தில் ஸ்டெர்லைட் ஆலை வேறு எந்த பணிகளையும் செய்யவும் அனுமதிக்க கூடாது. ஸ்டெர்லைட் ஆலையின் செயல்பாடுகளை கண்காணிக்க குழுக்கள் அமைக்க வேண்டும் என்று திமுக தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிரதிநிதிகள், தமிழக அரசே ஸ்டெர்லைட் ஆலையை கையகப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் மக்களுடன் கலந்து பேசி தமிழக அரசே ஆக்சிஜன் உற்பத்தியை செய்யலாம் எனவும் இடதுசாரிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கலாம் என இந்த கூட்டத்தில் பங்கேற்ற தமிழக பாஜக தலைவர் எல். முருகன் தெரிவித்தார்.
Recommended Video
இதனிடையே தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எந்த காரணத்தை முன்னிட்டும் திறக்கவே கூடாது என மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி பொதுமக்கள் மனு கொடுத்துள்ளனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை முன்பாக 100க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.